கைப்பேசி: 8681 99 8888
கும்பம்:
சுக்கிரன் வலுவாக ஆட்சி நிலையில் இருப்பதால் இது கும்பத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். கூடவே ராசிநாதன் சனியும் புதனும் பலமாக இருப்பதால் நவம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.
நவம்பர் மாதம் முழுவதும் ராசியில் செவ்வாய் அமர்வதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ஆறில் இருக்கும் ராகு நல்ல பலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். விரயத்தில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை தருவார். சுக்கிரன் ஸ்தம்பன நிலையில் இருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.
1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி அதிகாலை 4.26 முதல் 6-ம் தேதி காலை 8.13 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
No comments :
Post a Comment