மீனம் :
மீனத்திற்கு தற்போதுள்ள சாதகமற்ற இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி சனி
பகவான் பத்தாமிடத்திற்குச் செல்கிறார். ஒரு பாபக்கிரகம் திரிகோணத்தில்
இருப்பது நன்மைகளைத் தராது என்ற அமைப்பில் கடந்த காலங்களில் சனியால் பெரிய
நன்மைகள் எதுவும் மீனராசிக்கு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் கேந்திர வீடான பத்தாம் வீட்டில் சனி இருப்பது முன்பு இருந்த
நிலையை விட நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி மீனத்திற்கு நல்ல
பலன்களை மட்டுமே தரும்.
இன்னொரு துல்லியமான கணக்காக கடந்த முறை செவ்வாயின் பகை வீட்டில் சனி
இருந்ததால் பாபத்துவம் பெற்று அனைவருக்கும் கடுமையான பலன்களைக் கொடுத்தார்.
ஆனால் இம்முறை உங்களுடைய ராசிநாதனான குருவின் வீட்டிற்கு மாறி புனிதமடைந்து
சுபத்துவம் அடையப் போவதால் சனியால் எல்லோருக்குமே நன்மைகள் இருக்கும். அதன்
அடிப்படையில் மீனராசிக்கு பத்தாமிடத்துச் சனி சாதகமற்ற பலன்களை நிச்சயமாகத்
தராது.
அதேநேரத்தில் இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடகாலம் மற்ற வருடக்
கிரகங்களான குரு, ராகு இவற்றின் நிலைகள் மீனத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக
இல்லை. குறிப்பாக ராசிநாதன் குரு எட்டில் மறைந்திருப்பதும், அதிர்ஷ்டத்தை
தருகின்ற ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து நல்ல பலன்களைத் தடுத்துக்
கொண்டிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எல்லா விஷயங்களும் கிணற்றில் போட்ட
கல்லாகக் கிடந்து உங்களை சலித்துக் கொள்ள வைக்கும்.
என்னதான் கோட்சார பலன்கள் சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் பிறந்த ஜாதக
அமைப்பின்படி நல்ல பலன்களைத் தரக்கூடிய தசா,புக்திகள் நடப்பவர்களுக்கு கோட்சார
பலன்கள் பாதிக்காது என்பதால் அனைத்து மீன ராசிக்காரர்களுக்கும் சாதகமற்றவைதான்
நடக்கும் என்று சொல்ல முடியாது. கூடுதலான உழைப்பும் முயற்சியும் இருந்தால்
அனைவருக்கும் எல்லாவற்றிலும் நன்மைகள் மட்டுமே இருக்கும்.
அடுத்த வருட பிற்பகுதியில் இருந்து மீனராசிக்கு நல்ல வருமானங்களும், மனதில்
நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற
சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள்
அடுத்த வருட ஆரம்பத்தில் நடக்கும்.
சிலருக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, கணவன்
மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப்பிரச்னை, ஆரோக்கியக்குறைவு
போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத்தும் இனிமேல் மாறி சாதகமான விஷயங்கள் இனி
நடக்கும்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கருப்பு நிறம்
சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். அதுபோல
ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள்,
வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம்
உயரும்.
வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம்,
மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள்,
கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள்
இருக்கும்.
செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும்
உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.
அரசுத்துறையினருக்கு பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை
எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு
அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.
கடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார் சனிபகவான். வாங்கும் கடனை என்ன
நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது.
தொழில்ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும்
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம்.
கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.
எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க
வேண்டாம்.
போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன்
கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை
எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும்
பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து
விடுவீர்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர்
சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து
வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த
நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.
வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு
இந்தப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி
நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.
வாழ்க்கைத் துணைநலம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்து பேசி வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.
சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல்
வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.
காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு
இப்போது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.
உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த
குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள்
பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே
மருத்துவரிடம் செல்லுங்கள்.
வேறு இன, மொழி, மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.
கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து
பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக
இருக்கவேண்டியது அவசியம்.
சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது
புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு
வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர
விசாரியுங்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய
எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும்
சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட
விஷயங்கள் கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ
முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது
வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள்
இருக்கும்.
புனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள்.
மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின்
அருளாசி பெறுவீர்கள். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால்
முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி
புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத்
துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும்
முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி மீனத்தினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான
அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள்
வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.
பரிகாரங்கள்:
ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின்
ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத்
திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர
சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக் கூடாது.
பொதுஇடத்தில் கொடுங்கள்.
No comments :
Post a Comment