Tuesday, October 3, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 155 (3-10-17)

என். கே. செல்வம், மதுரை.

கேள்வி :

இறைவனின் கருணையால் தாங்கள் மாலைமலரிலும், பேஸ்புக்கிலும் எழுதி வரும் சூட்சும விளக்கங்களைப் படித்தும், யூ டியூபில் கூறி வரும் விரிவான விளக்கங்களைப் பார்த்தும் தங்களது மிகத் தீவிரமான மாணவனாகி இருக்கிறேன். ஒரு வருடமாக தேடி வருபவர்களுக்கு தெரிந்த மட்டும் பலன் சொல்லி வருகிறேன். வர இருக்கும் ராகுதசையில் ஜோதிடத்தில் முழுமையாக தேர்ச்சி பெற்று அதன் மூலம் ஜீவனம் அமையுமா? தற்போது செய்யும் தங்கத்தொழில் முன்னேற்றம் தருமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:

சந்
ரா
குரு
சனி
17-8-1965,
பகல் 1.30,
மதுரை
பு
சூ

கே
செவ்
சுக்

தெளிவான பலன் சொல்லும் ஜோதிடராக நினைப்பவர் முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். வாக்கியப் பஞ்சாங்கம் என்பது முற்றிலும் பிழையானது. வாக்கியத்தை வைத்து துல்லியமான பலன் சொல்லவே முடியாது.

உங்களுக்கு திருக்கணிதப்படி 2019-ம் ஆண்டுதான் ராகுதசை ஆரம்பிக்க உள்ளது. லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்ததால் ராசிப்படி பலன் நடக்கும் உங்கள் ஜாதகப்படி, ராசிக்கு பத்தாமிடம் மஞ்சள் நிறத்திற்கு அதிபதியான குருவின் வீடாகி, குருவின் பார்வையிலும் இருப்பதால் தங்கத்தொழில் செய்து வருகிறீர்கள். ராகுதசை முதல் ஜோதிடத்தில் இன்னும் சில நுணுக்கங்கள் புரிய ஆரம்பிக்கும். ராகுதசை சுயபுக்தியில் ஜோதிடத் தொடர்புகள் அதிகரித்து குருபுக்தியில் ஜோதிடத்தை தொழிலாக மேற்கொள்வீர்கள். ஜோதிடத்தில் நிரந்தரமாக வருமானம் வரும்.

ராகுவிற்கு வீடு கொடுத்தவன் வலுப் பெற்றால் ராகுதசை நன்மைகளைச் செய்யும் என்பது விதி. உங்களுக்கு ரிஷப ராகுவாகி, வீடு கொடுத்த சுக்கிரன் நீசம் என்றாலும், பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் 90 சதவிகித ஒளித்திறனுடன் கூடிய சந்திரனின் பார்வையை அவர் பெற்றதால் சுக்கிரன் வலுவாகவே இருக்கிறார். சுக்கிரன் பலமாக இருப்பதால் உங்கள் மனைவியும் அழகும், அறிவும் உள்ளவராக இருப்பார். வலுப்பெற்ற சுக்கிரனின் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுதசை ஆரம்பித்ததும் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் அமையும். மகன்கள் இருவரின் ஜாதகத்திலும் லக்னம், லக்னாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அவர்கள் ஜாதகப்படியும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கே. அருண், சக்கம்பட்டி.

கேள்வி :

வாழ்வில் ஒரு நிமிடம் கூட சந்தோஷமாக இருந்தது இல்லை. மிகைப்படுத்தி சொல்லவில்லை. உறவினர் ஆதரவு இல்லை. நிரந்தர வேலை இல்லை. மன நிம்மதி இல்லை. என் அம்மாவும் நன்றாக  இல்லை. விரும்பும் சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை. பிரச்சினைகள் எதுவும் குறைந்தபாடு இல்லை. ஜோதிடர்களிடம் கேட்டால் முன்னோர்களுக்கு பித்ரு கடன் சரியாகச் செய்யவில்லை. நாகதோஷம் உள்ளது. ராமேஸ்வரம், காளகஸ்தி செல்லுமாறு சொல்கிறார்கள். நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் நானும் மற்ற மனிதர்களைப் போல முன்னேற்றம் அடைவேனா? இதே நிலை நீடித்தால் சீக்கிரம் தற்கொலை செய்து கொள்வேன் என்று தோன்றுகிறது. உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் உழைப்பு வீணாகிறது. தனியார் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறேன். வாழ்வில் எப்போது நல்ல நிலை வரும்?

பதில்:

குரு
ரா
9-9-1989, அதிகாலை4.05, தேனி
செ
சூ,கே
சனி
சந்
சுக்
பு

எல்லா இல்லைகளும் வரும் தீபாவளி முதல் விலகி, இருக்கு என்று ஆகப் போகிறது. விருச்சிக ராசி இளைஞர்கள் எவரும் வாழ்க்கையில் நன்றாக இல்லை என்றுதான் ஒவ்வொரு வாரமும் எழுதி வருகிறேன். உனக்கு கடக லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் நீசமடைந்து, பிறந்தது முதல் அவயோக தசைகளான புதன், சுக்கிரதசைகள் நடப்பதால் வாழ்வில் சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.

லக்னாதிபதி வலுவிழந்தால் ராசிப்படி பலன்கள் நடக்கும் என்ற விதிப்படி உன் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாய் இருப்பதால் மருத்துவத்துறையே உனக்கு ஏற்றது. அடுத்த வருடம் ஜூன்மாதம் முதல் ராசி, லக்னம் இரண்டிற்கும் யோகாதிபதியான சூரியனின் தசை ஆரம்பிக்க இருப்பதாலும், இன்னும் சில நாட்களில் ஜென்மச்சனி விலகப் போவதாலும் உன்னுடைய பிரச்சினைகள் தீர ஆரம்பித்து, 30 வயது முதல் எவ்வித கஷ்டங்களும் இல்லாமல் வாழ்வில் மேலான அந்தஸ்தில் இருப்பாய். கவலை வேண்டாம்.

பிரேமா வேணுகோபால், சேலம்.

கேள்வி :

குருநாதர் துரோணாச்சாரியாருக்கு, சிஷ்யன் ஏகலைவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மாலைமலரிலும், பேஸ்புக்கிலும் உங்கள் கேள்வி- பதில்களை மீண்டும், மீண்டும் படித்து ஜோதிடம் தெரிந்து கொண்டு வருகிறேன். சில இடங்களில் சில விஷயங்கள் புரியவில்லை. மிதுன லக்னத்திற்கு பத்தில் சுக்கிர உச்சமாக இருந்தால் யோகம் என்கிறீர்கள். அதுவே வேறொரு லக்னத்திற்கு சுக்கிரன் பத்தில் திக்பலம் இழக்கிறார் என்றும் எழுதுகிறீர்கள். விளக்கம் கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.

எனக்கு சில வருடங்களாகவே ஜாண் ஏறினால் முழம் சறுக்கிறது. பழைய வீட்டை புதுப்பித்தேன் ஆனால் வேலை செய்யும் இடத்தில் பிரச்னை ஏற்பட்டு வெளியேறி விட்டேன். புதிய இடத்தில் வேலைக்குச் சென்றால் பல இன்னல்களுக்கு ஆளாகிறேன். பழைய இடத்தில் மறுபடியும் சேர முடியுமா? ஏன் இப்படி ஆனது என்றும் புரியவில்லை. அடுத்து நடக்க இருக்கும் சனிதசை யோகம் செய்யுமா? கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை தக்க வைப்பேனா? என் பிரச்சினைகளுக்கு பரிகாரம் சொல்லுங்கள்.

பதில்:

சுக்
ல,சூ,
கே,பு,
குரு
செவ்
22-4-1976, 
காலை6.00 சேலம்
சனி
சந்
ரா

ஒரு கிரகத்தின் வலுவை அறிவதற்கு ஷட்பலம் எனும் ஆறுவிதமான பலங்கள் ஞானிகளால் நமக்கு போதிக்கப்பட்டுள்ளன. அதில் ஸ்தானபலம், திக்பலம், திருக்பலம் என்கிற மூன்று பலங்களும் முதன்மையானவை. ஸ்தான பலம் என்பது ஒரு கிரகத்தின் ஆட்சி, உச்ச நிலைகளைக் குறிப்பது. இரண்டாவதான திக்பலம் என்பது ஆட்சி வலுவுக்கு நிகரானது.

குரு,புதனுக்கு ஒன்று, சந்திர, சுக்கிரனுக்கு நான்கு, சனிக்கு ஏழு, சூரிய, செவ்வாய்க்கு பத்தாமிடங்கள் ஆட்சிக்கு நிகரான திக்பலத்தை தருவதாகும். மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பத்தாமிடத்தில் ஸ்தான பலம் எனப்படும் உச்சநிலையை அடைவார். உச்சம் அடைந்தாலும், நான்கிற்கு நேர் எதிரான பத்தில் திக்பலத்தை இழப்பார். ஆயினும் இங்கே உச்சம் எனும் முக்கியமான பலத்தை சுக்கிரன் அடைவதால் திக்பலம் இழப்பது கெடுதல்களைத் தராது. அதாவது இழக்கும் திக்பலம் உச்சத்தால் ஈடு செய்யப்படுகிறது. ஆனால் மிதுனம், மகரம் தவிர்த்த வேறொரு லக்னத்திற்கு சுக்கிரன் பத்தாமிடத்தில் இருப்பது திக்பலத்தை இழந்த நன்மையற்ற நிலைதான்.

ஒரு கிரகம் ஸ்தான பலத்தை இழந்தாலும், திக்பலம் பெற்றால் வலுவாகவே இருக்கும். ஸ்தான பலத்தையும், திக்பலத்தையும் சேர்ந்து இழந்தால் திருக்பலம் எனப்படும் சுபக்கிரக பார்வை பெற்றால் மட்டுமே நல்லவைகளைச் செய்யும். ஜோதிடம் என்பது புரியும் வரை குழப்பமாகத்தான் இருக்கும். எப்போது, எவ்வளவு புரியும் என்பது உங்களுடைய ஜாதகத்தில் புதனின் வலுவையும், பரம்பொருளின் கருணையையும் பொருத்தது.

மனைவிக்கு விருச்சிகராசி என்பதால் கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் தொழில் அமைப்புகளில் நன்றாக இல்லை. இந்த நிலைமை வரும் தீபாவளிக்கு பிறகு மாறும். மீண்டும் பழைய இடத்தில் வேலை செய்ய வாய்ப்பில்லை. அடுத்து நடக்க இருக்கும் சனிதசை, ராசிநாதன் தசை என்பதால் யோகத்தைச் செய்யும். கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போவதால் வீட்டை தக்க வைத்துக் கொள்வீர்கள். லக்னாதிபதி செவ்வாய்க்கோ, லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் பார்வை இல்லாமல், ராசி, லக்னத்தை சனி பார்த்து, லக்னநாயகன் பகைவீட்டில் இருப்பதால் செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். இவற்றை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன்.

வி. அருணாச்சலம், வடலூர்.

கேள்வி :

பொருளாதாரம் நிலையானதாக இல்லை எதிர்கால தேவைக்கு மிகவும் முக்கியமான வீடு சொந்தமாக அமைய வாய்ப்புள்ளதா? பிற்கால ஜீவனம் நன்றாக இருக்குமா? பொருளாதார வசதி பெறுவேனா?

பதில்:

சந்,சூ
பு,கே
சுக்
செவ்
7-4-1959,
அதிகாலை2.48, திருவண்ணாமலை
சனி
குரு
ரா

கடந்த 2014 முதல் மகரலக்னம், மீனராசிக்கு எட்டு மற்றும் ஆறுக்குடைய பாவியான சூரியனின் தசை நடக்கிறது. இந்த தசையில் நன்மைகள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் சூரியனுக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய சோதனைகளும் வராது. வரவுக்கும், செலவிற்கும் சரியாக ஓடிக் கொண்டு இருக்கும் 2020-ம் ஆண்டு முதல் ஆரம்பிக்க இருக்கும் சந்திர தசை உங்களுக்கு யோகம் செய்யும் என்பதாலும் 4-ல் சுக்கிரன் திக்பலத்துடன் அமர்ந்துள்ளதாலும் 2021-ல் சொந்த வீடு யோகம் உண்டு. இன்னும் இரண்டு வருடங்களில் பொருளாதார நிலைமை சீரடையும்.

பெ. விநாயகமூர்த்தி, திருப்பதி.

கேள்வி:

ஜோதிடம் தெரிந்த எனக்கு என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும், ஏன் திருமணம் தாமதமாகிறது என்பது தெரிய வரவில்லை. வாராது வந்த மாமணியாம் ஆசான் அவர்கள் எனக்கு நல்லபதில் தந்தால் தன்யனாவேன்.

பதில்:

மகளுக்கு கடக லக்னம், தனுசு ராசியாகி, லக்னத்திற்கும், ராசிக்கும் இரண்டு ஏழாமிடங்கள் செவ்வாய், சனியால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் தாமதமாகிறது. வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் ராகு தசை, சுக்கிர புக்தியில்தான் அவருக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கும் அமைப்பு உருவாகிறது. அடுத்த வருடம் செப்டம்பர், அக்டோபரில் திருமணம் நடக்கும்.

சொல்லால் குத்தும் மனைவி மாறுவாளா?

எம். முருகேசன், காமராஜபுரம்.

கேள்வி :

மனைவி நல்லவள்தான் ஆனால் ஒவ்வொரு சொல்லும் தினமும் மனதை குத்திக் கிழிக்கிறது. நேற்றுக் கூட எங்காவது சென்று செத்து விடலாம் என்று கிளம்பிவிட்டேன். ஒரே பெண்ணை நினைத்து கடைசி நிமிடத்தில் திரும்பிவிட்டேன். இதற்கு முன்னும் பலமுறை இப்படித்தான் நடந்திருக்கிறது. திருமணமாகி 24 வருடங்களாக ஜோதிடக்காரன் என் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டான் என்று தினசரி வார்த்தையால் குத்துகிறாள் .

சொந்தவீடு இருக்கிறது. சொத்து இருக்கிறது. ஆனால் அவள் கேட்கும்  கார், பணத்தை கொடுக்க முடியவில்லை. ஒரு எம். டி. சி. டிரைவர் என்னதான் செய்ய முடியும்? ஜோதிட நண்பர் ஒருவர் நான் 58 அல்லது 78 வயதில் விபத்தில் இறப்பேன் என்று அடித்துச் சொல்கிறார். அப்படிச் சொல்ல முடியுமா? ஏனென்றால் பலமுறை தற்கொலை செய்ய முடிவெடுத்து மனம் மாறியுள்ளேன். பின் காலத்திலாவது நிம்மதி கிடைக்குமா? இவளுடைய குணத்தினால் பெற்ற தாயைக் கூட பக்கத்தில் வைத்து சோறு போட முடியாத பாவியாக இருக்கிறேன். எல்லாம் இருந்தும் எனக்கு ஏன் இந்த நிலை? மனைவி மாறுவாளா? எத்தனையோ குடும்பங்களை சொற்களால் காப்பாற்றி இருக்கும் குருவாகிய நீங்கள் என்னையும் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

பதில்:

சுக்
சூ
பு
கே
28-4-1961,
காலை11.30, கோனேரிராஜபுரம்

செவ்
குரு
சனி
ரா
சந்

மனைவியின் ஜாதகப்படி கும்பலக்னம், விருச்சிக ராசியாகி, ராசியையும், லக்னத்தையும் சனி பார்த்து, வாக்குஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்ததால் தேள் போல் கொட்டும் குணமுள்ளவராக இருப்பார். இவருடைய அமைப்பு இதுதான். கடைசி வரை மாறாது. உங்கள் ஜாதகப்படியும் ஏழில் சனி அமர்ந்து, ஏழாமிடத்தை நீச செவ்வாய் பார்ப்பதால் மனைவியால் நிம்மதி கிடைக்க வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் வரும் தீபாவளிக்கு பிறகு மனைவிக்கு ஜென்மச் சனி விலகுவதால் கஷ்டங்கள் குறையும்.

ஒருவர் விபத்தில் மரணமடைய வேண்டும் என்றால் ஆறு, எட்டாமிடங்கள் பாபத்துவ வலுப்பெற்று இருக்க வேண்டும். குறிப்பாக எட்டாம் அதிபதி வலுவின்றி இருக்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி தற்போது அஷ்டமாதிபதி தசையில், பாதகாதிபதி புக்தி நடந்தாலும் எட்டுக்குடைய சனி குருவோடு சேர்ந்து சுபத்துவமாகி இருப்பதும், லக்னத்தைக் குரு பார்த்து, ராசியை உச்ச சுக்கிரன் பார்ப்பதாலும் உங்களுக்கு தீர்க்காயுள் அமைப்பு உண்டு. மேலும் லக்னாதிபதி வளர்பிறை சந்திரனாகி, பவுர்ணமிக்கு அருகில் இருப்பதாலும் உங்களுக்கு 58 வயதில் ஆபத்து எதுவும் கிடையாது.

தற்போது நடைபெறும் சனிதசையின் பிற்பகுதியான 2019-ம் ஆண்டு முதல் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். சந்திரனுக்கு ஏழு, எட்டில் சுக்கிரன், புதன் அமர்ந்து சந்திர அதி யோகம் இருப்பதால், அடுத்து நடைபெற இருக்கும் புதன் தசை நிம்மதியை தரும்.

No comments :

Post a Comment