கும்பம் :
கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போதிருக்கும் பத்தாமிடத்தில் இருந்து மிகுந்த
நன்மைகளைத் தருகின்ற 11-மிடத்திற்கு சனிபகவான் மாறுகிறார். இந்த சனிப்
பெயர்ச்சியின் மூலம் மிகவும் மேன்மையான ஒரு காலகட்டத்திற்குள் கும்பத்தினர்
நுழைகிறீர்கள்.
சனிபகவான் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக்
கொள்கிறார். இதையே வேறுவிதமாக சொல்லப் போனால் 12 ராசிகளிலும் தலா இரண்டரை
ஆண்டுகாலம் சனி இருப்பார். இந்த 30 ஆண்டுகால முழுச்சுற்றில் வெறும் மூன்று
நிலைகளில் மட்டுமே சனி நன்மைகளைத் தரக் கடமைப்பட்டவர். அதாவது 3, 6, 11 ஆகிய
இடங்களில் இருக்கும் போது மட்டுமே ஒரு மனிதனுக்கு சனிபகவான் நன்மைகளைச்
செய்வார்.
அதிலும் லாபஸ்தானம் எனப்படும் 11-மிடம் சனிக்கு மிகுந்த நன்மை தரும் இடமாக
நம்முடைய மூலநூல்களில் சொல்லப்பட்டு உயர்வானதாக கருதப்படுகிறது. 30
ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்ற லாபஸ்தான, பதினொன்றாம் இடத்துச் சனி
தற்போது கும்பராசிக்கு வருவதால் இன்னும் மூன்றாண்டு காலத்திற்கு கோட்சார
ரீதியில் கும்பராசிக்கார்ர்களுக்கு நன்மைகளைத் தரக்கூடிய ஒரு மேன்மையான காலம்
அமைய இருக்கிறது.
துல்லியமான கோட்சார பலன்கள் என்பது சனியை மட்டுமல்ல, ஒன்பது கிரகங்களின்
நிலையையும் கணித்துச் சொல்லப்படுவது. அதன்படிதான் கிரக பலாபலன்களும்
செயல்படும். அதன்படி பார்க்கப் போனால் 11-மிடத்து சனிக்கு நிகரான ஒரு நல்ல
அமைப்பாக வருடக் கிரகங்களான ராகு-கேது, குரு போன்றவைகளும் கும்பராசிக்கு நன்மை
தரும் நிலையில் இருக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேதுப் பெயர்ச்சி மூலமாக ராகு
கும்பத்திற்கு ஆறாமிடத்தில் இருக்கிறார். இதுவரை சாதகமற்ற எட்டாமிடத்தில்
இருந்த குருபகவான் சமீபத்தில் ஒன்பதிற்கு மாறி உங்கள் ராசியைப் பார்த்து
மிகுந்த பணவரவை தரக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறார்.
ஆகவே வருடக் கிரகங்களான மூன்று கிரகங்களும் கும்பத்திற்கு நன்மைகளைத்
தரக்கூடிய அமைப்பில் இருப்பதால் வருகின்ற மூன்று ஆண்டு காலம் கும்பத்தின்
பொற்காலமாக இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பிலும் நன்மையான தசா,புக்திகள்
கும்பத்தினருக்கு நடந்து கொண்டிருந்தால் உங்களுடைய முழு வாழ்க்கைக்கும்
தேவையான வசதிகளை இந்த மூன்று ஆண்டுகளில் அடையும் அளவிற்கு நன்மையான கிரக
நிலைகள் தற்போது கும்பத்திற்கு அமைந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இனிய அனுபவங்களை கொண்ட
பொற்காலம் ஆரம்பிக்க உள்ளது. அனைத்து கும்பத்தினரும் இந்த நன்மை தரும்
நிலைக்காக பரம்பொருளுக்கு நன்றி செலுத்துவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து
வந்த கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை
எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற
அனைத்தும் இனித் தீரப் போகிறது.
இளைய பருவத்தினருக்கு உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும்
எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.
எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம்
ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள்
அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும்,
புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு
வரும்.
இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள்
இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை
ஆகியவற்றை காண்பீர்கள். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து
கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை
அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.
போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. சுய
தொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த
முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும்.
வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில்
முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச்
செய்ய முடியும்.
வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான
வியாபாரமும் கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம்.
வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு
நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான வெற்றியைப்
பெற்று பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன்
எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
பொதுவாழ்வில் இருப்பவருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில்
அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.
அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு வேலை உண்டு. ஐ.ஏ.எஸ்,
குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே
தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
நல்ல செய்திகள் கிடைக்கும்.
திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது.
காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர்
புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம்
காண்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன்
மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.
சொந்த வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில்
நிறுத்தி இருந்தவர்கள் வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.
சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு சந்தர்ப்பம் வரும். புதிதாக
வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் நகை சேர்க்கை
இருக்கும்.
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்,
சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க
முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள்
விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள்
உருவாகும். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல்
இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். பிரிந்திருந்த
கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் சமரசமாகி
திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது
வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
கும்ப ராசிப் பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மேன்மைகளை அளிக்கும். வேலை
செய்யும் இடங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து உங்களுடைய மேலாண்மை
நிலை நாட்டப்படும். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து
அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை
உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.
குலதெய்வ வழிபாடு செய்ய முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று
தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய வரும். ஆன்மீக
நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். ஆலயத்
திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்
தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.
சிலர் வெளிநாடு செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும்
வாய்ப்பை இறைவன் அருளுவார். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும்.
சகோதர சகோதரிகள் உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். இதுவரை இருந்த வீண்
செலவுகளும் விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க அளவில் பணவரவும் லாபங்களும் இருக்கும் என்பதால் நல்லவகையில்
முதலீடு செய்யமுடியும். பங்குச் சந்தை யூக வணிகம் போன்ற துறைகளில் லாபம்
கிடைக்கும்.
பனிரெண்டு ராசிகளிலும் கும்பத்திற்கு மட்டுமே அனைத்து கிரக நிலைகளும் சாதகமாக
இருப்பதால் பரம்பொருள் தரும் இந்த சந்தர்ப்பத்தை நல்ல விதமாக பயன்படுத்திக்
கொள்வீர்கள் என்பது உறுதி.
பரிகாரங்கள்
:
கும்பத்திற்கு பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. வீட்டிலிருந்து கிளம்பும் போது
சுவாமியின் திருவுருவப் படத்தின் முன்பு நின்று “இன்று எவருக்கும் என்னால்
எவ்வித தீங்கும் வர விடாமல் செய்க பெருமானே” என்று வேண்டி அதன்படி நடப்பது
மட்டுமே சிறந்த பரிகாரம்.
No comments :
Post a Comment