Friday, September 29, 2017

MITHUNAM : 2017 SANI PEYARCHI - மிதுனம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

மிதுனம் இனி நிதானம்

மிதுனம்:

மிதுன ராசிக்கு தற்போது ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாடத்திற்கு சனிபகவான் செல்கிறார்.

கடந்த காலங்களில் சனிபகவான் நிலை கொண்டிருந்த ஆறாமிடம் யோகமான இடம், தற்போது மாறி இருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களைத் தரக் கூடிய இடம் இல்லை என்றும் நம்முடைய மூல நூல்கள் சொல்கின்றன.

கோட்சார பலன்கள் என்பது ஒன்பது கோள்களின் இருப்பிடத்தையும் கணித்து பொதுவாக சொல்லப்பட வேண்டியது. அந்த அமைப்பில் பலன் சொல்ல முற்படும் போது, சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற குருப்பெயர்ச்சி ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பிறகு மிதுனத்திற்கு யோகங்களை தருகின்ற விதத்தில் அமைந்திருப்பதால் இன்னும் சில காலத்திற்கு கோட்சார பலன்கள் மிதுன ராசிக்கு சாதகமாகவே இருக்கும்.

மேலும் ஏழாமிடத்திற்கு வருகின்ற சனிபகவானால் கணவன்-மனைவி இடையே கருத்து வேற்றுமை, பிரிவு, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியக் குறைவு, நண்பர்கள், பங்குதாரர்களிடையே மனக் கசப்பு, தந்தைவழி உறவினர்களால் விரோதம் போன்ற பலன்கள் சொல்லப் பட்டிருந்தாலும் மிதுனராசிக்கு பாக்கியங்களை தரும் ஒன்பதுக்குடையவன் சனி என்கின்ற வகையில் மற்ற ராசிகளுக்கு அவர் ஏழாமிடத்தில் இருக்கும்போது தருகின்ற கெடுபலன்களைப் போல மிதுனத்திற்கு தருவது இல்லை.

எனவே தற்போது நடைபெறுகின்ற சனி மாற்றம் மிதுனத்திற்கு நிச்சயமாக கெடுபலன்களைத் தரப் போவது இல்லை. மாறாக ஒன்பதுக்குடையவன் ராசியைப் பார்க்கிறான் என்கிற விதத்தில் மிதுனத்திற்கு சில நன்மைகளே கூடுதலாக நடைபெறும்.

பொதுவாக கோட்சார பலன்கள் எல்லா ராசியினருக்கும் ஒரே போன்று அமைவது இல்லை. மாறுகின்ற கிரகம் அந்தந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தருவதா? அவ யோகத்தை தருவதா? என்பதை வைத்துத்தான் துல்லியமான பலன்களை ஒரளவிற்கேனும் கணிக்க முடியும்.

பாபக் கிரகமாயினும் ஒரு ராசிக்கு யோகம் செய்ய வேண்டிய கிரகமாக அது இருந்தால் கெடுபலன்களைத் தந்து விடுவது இல்லை. அந்த அமைப்பின்படி மிதுன ராசிக்கு தற்போதைய சனி மாற்றம் உறுதியாக கெடுதல்களை எதையும் தராது.

ஆயினும் சனிபகவான் ராசியைப் பார்க்கப் போவதால் இந்த சனி மாற்றத்தினால் உங்களுடைய குணநலன்களில் சிறிது மாற்றம் இருக்கும். குறிப்பாக சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். சற்று சுயநலக்காரனாக மாறி விடுவீர்கள். சனியின் ராசி பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி.

எனவே நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களுடைய உடல்நலத்தில் அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். ராசியைப் பார்க்கும் சனி இனம் புரியாத கவலைகளையும், நோயே இல்லாவிட்டாலும் தனக்கு ஏதோ ஒன்று இருக்கின்றது என்கின்ற எண்ணத்தையும் கொடுத்து மனத்தையும், உடலையும் அலைக்கழிப்பார் என்பதால் இதுபோன்ற விஷயங்களில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது என்பது நல்லது.

ஏழாமிடத்து சனியால் இனம் புரியாத மனக்கலக்கம் மற்றும் ஏதோ ஒன்று தவறாக நடக்க போகிறது, அது என்னவென்று தெரியவில்லையே என்று ஒரு உறுத்தல், கெட்டது நடந்து விடுமோ என்ற பயம், ஒன்றும் இல்லாத சிறிய விஷயத்தை பெரிதாக நினைத்துப் பயப்படுதல் போன்ற விஷயங்கள் உங்களுக்கு வரும் என்பதால் எதிலும் மனஉறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஒருவிதமான மனப்பான்மையை தவிர வேறு எவ்வித கெடுதலையும் சனி உங்களுக்கு தராது என்பதாலும் சனிபகவான் ஏழாம் இடத்தில் இருந்தாலும் மற்ற கிரகங்கள் இன்றைய நிலைமையில் இன்னும் சில மாதங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்க போவதாலும், சனி தற்போது குருவின் வீட்டில் அமர போவதாலும், இன்னும் ஒரு வருடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் தனது புனித பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் மிதுனத்திற்கு தற்போதைய நிலையில் கெடுதல்கள் இல்லை.

முதல் ஒரு வருடத்திற்கு குருவின் பார்வை உங்களை காப்பாற்றுகின்ற அமைப்பில் இருக்கும் போது அடுத்த வருடம் ராசிக்கு குருவின் பார்வை விலகும் நேரத்தில் சனியுடன் ராகு-கேதுக்கள் இணைந்து அவருடைய வீரியத்தை இழக்க வைப்பதால் மிதுனராசிக்கு இந்த சனி மாற்றத்தால் எந்த வித கெடுதல்களும் நடக்கப் போவது இல்லை என்பது உறுதி.

ராசியை சனி பார்ப்பதால் ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத் தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற பயணங்கள் இப்போது உண்டு.

பெண்களுக்கு நகை சேரும் காலம் இது. வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும்.

வியாபாரிகளுக்கு தொழில் நல்லபடியாக நடக்கும் காலகட்டம் இது. நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். புதுக் கம்பெனி ஸ்டாக்கிஸ்ட், டீலர்ஷிப் கிடைத்து வியாபாரம் பெருகும். நல்ல வருமானம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆர்டர்கள் நிறையக் கிடைத்து மேன்மை அடைவீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது.

சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

சனிபகவானின் பார்வை நான்காம் வீட்டில் விழுவதால் வீடு, வாகனம், தாயார், தன்சுகம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். அதேபோல வாகனமாற்றம், புதிய அதிகவிலை உள்ள வாகனம் வாங்குதல் போன்றவற்றிலும் நிதானத்துடன் செயல்படுங்கள்.

வயதான தாயாரினால் மருத்துவச் செலவுகள் வரும். தாயாரின் உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். அவருக்கு சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏழாமிடத்தில் இருக்கும் சனிபகவானால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் என்றாலும் அவர் யோகாதிபதி என்பதால் உங்களுக்கு நேரடி கெடுபலன்களை தரமாட்டார். சிலர் வேலை விஷயமாக மனைவியை பிரிந்து வெளிமாநிலத்திற்கோ வெளிநாட்டிற்கோ இந்த காலக்கட்டத்தில் செல்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

பார்ட்னர்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும், சந்தேகங்களையும் சனி உருவாக்குவார் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவரப்படாமல் தீர்க்கமாக ஆலோசித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நிறுவனத்தை நடத்திச் செல்வது நல்லது.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்டநாள் திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக நடந்து அனைத்தும் சீரடையும். இளையவர்களுக்கு மனத்திற்குப் பிடித்தமான வேலை அமையும். திருமண பருவத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையை இப்போது சனிபகவான் அடையாளம் காட்டுவார். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஏழாமிடத்து சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதையும் தராமல் மிதமான நற்பலன்களை மட்டுமே மிதுனத்திற்குத் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் அய்யப்ப பக்தர்கள் நான்கு பேருக்கு உங்கள் வீட்டில் இல்லாமல் பொது இடத்தில் அல்லது கோவிலில் கருப்பு வேட்டி கருப்பு துண்டு தானம் செய்யுங்கள்.

No comments :

Post a Comment