Friday, September 29, 2017

RISHABAM : 2017 SANI PEYARCHI - ரிஷபம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

ரிஷபம் இல்லை மோசம்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் தற்போதைய மாற்றத்தால் அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார்.

ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழி தமிழில் உண்டு. அஷ்டமச் சனி என்றவுடன் யாவருக்கும் ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த குருப்பெயர்ச்சியில் குருவும் சாதகமற்ற ஆறாமிடத்திற்குதான் மாறி இருக்கிறார் என்ற நிலையில் தற்போது இன்னொரு நன்மைகளைத் தராத மாற்றமான எட்டாம் இடத்திற்கு மாறும் சனி என்றவுடன் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒருவிதமான மனக்கலக்கம் ஏற்படுவது இயற்கை.

ராசிபலன்களே பொதுவான பலன்கள் என்றாலும் அதிலும் ஓரளவிற்கு தெளிவான பலன்களைச் சொல்ல முயற்சிக்கும் ஜோதிடமான நான் தற்போது ரிஷபத்திற்கு மாற இருக்கும் அஷ்டமச் சனி உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறது என்பதை என்னுடைய கோணத்தில் விவரித்தே ஆகவேண்டும்.
 
பொதுவாக சனிபகவான் ஒருவருக்குத் தண்டனைகளைத் தர விதிக்கப்பட்ட கிரகம் என்றாலும் 12 ராசிகளுக்கும் அவர் ஒரே மாதிரியான தண்டனைகளையோ அல்லது கெடுபலன்களையோ தந்து விடுவது இல்லை. தான் இருக்கும் இடத்தை பொருத்தும், எந்த ராசிக்கு தான் பலன்களை அளிக்கப் போகிறோம் என்பதை பொருத்தும் தான் சனிபகவான் தனது நல்ல, கெட்ட பலன்களைச் செய்ய முடியும்.

அந்தவகையில் பார்க்கப் போவோமேயானால் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 2013-2014 ம் ஆண்டுகளில் மீனராசிக்காரர்கள் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக மேஷராசிக்காரர்கள் பட்ட துயரங்களும் அதிகம்.

மீனத்திற்கு அஷ்டமச் சனியாக இருந்தபோது சனிபகவான் அதிகம் வலிமை தருகின்ற உச்சம் என்கிற ஒரு பாபத்துவ நிலையிலும், மேஷத்திற்கு எட்டில் இருந்தபோது பகைவீட்டிலும் நிலை கொண்டிருந்ததால் மிகக் கடுமையான கெடுபலன்களை மேற்கண்ட ராசிகளுக்கு செய்தார்.

ஆனால் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் தனக்கு மிகவும் பிடித்த வீடான, தான் பெரிதும் சாந்தமடைகின்ற ஒரு புனிதராசியான தனுசுக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார். தனுசில் அவர் இருக்கும் நிலையில் அவர் அமைதியான குணத்தை கொண்டிருப்பார் என்பதால் ரிஷபத்தினர்களுக்கு தாங்க முடியாத கெடுபலன்கள் என்கிற வகையில் எதுவும் உறுதியாக வரப் போவது இல்லை.

மிகத் தெளிவாகச் சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன, மேஷ ராசிக்காரர்களுக்கு நடந்த சாதகமற்ற, சங்கடமான பலன்கள் எதுவும் ரிஷப ராசிக்கு இருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயமாக ரிஷபராசியின் ராஜ யோகாதிபதி சனி பகவான்தான். ஒரு கிரகம் யோகம் தர விதிக்கப்பட்ட ராசிகளுக்கும், தான் அதிபதியாகும் ராசிகளுக்கும் கெடுபலனை தராது என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.

அதன்படி பார்த்தால் ரிஷபத்தவர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும், தன்மைகளையும் தர விதிக்கப்பட்டவர் சனிபகவான் ஒருவர் மட்டும்தான். ஆகவே அவர் தண்டனைகளைத் தருகின்ற ஒரு பொதுவான கிரகம் என்றாலும் நல்லவைகளையும் தரக்கூடிய ராஜ யோகாதிபதி என்பதால் ரிஷபத்தின் மேல் சனிக்கு எப்போதும் ஒரு மென்மையான போக்கு கண்டிப்பாக உண்டு.

எந்த ஒரு காரணத்தினாலும் மற்ற ராசிகளுக்கு அஷ்டமச் சனியில் நடக்கின்ற கெடுபலன்கள் எதுவும் தற்போதைய சனிப் பெயர்ச்சியால் உறுதியாக ரிஷபத்திற்கு நடக்காது. ஆயினும் வரும் முன் காக்க உரைப்பதுதான் ஜோதிடம் என்கிற விதிப்படியும், சனியைப் போலவே இன்னொரு வருடாந்திர கிரகமான குருவும் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பில் இருப்பதாலும் எந்த ஒரு ரிஸ்க் எடுக்கின்ற தொழில் அமைப்புகளிலும் ரிஷபத்தினர் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது.

“என்னடா இது.. அஷ்டமச்சனி கெடுதல்களை செய்யாது” என்றும் சொல்லி விட்டு, “ரிஸ்க் எதையும் எடுக்காதே” என்று குருஜி சொல்கிறார் என்று யோசித்தால் முறையான பலன்கள் என்றால் இப்படித்தான் இருக்கும். கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்கப் போவது இல்லை. ஆயினும் அனைத்திலும் தற்காப்புடன் முனைப்புடன் இருந்து கொள்வது நம்முடைய கடமை.

எனவே இன்றைய குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நிலைப்படி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் எந்த விதமான ரிஸ்க் எடுக்காமலும், இருப்பதை கட்டிக் காத்தும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.

“அரசனை நம்பி புருஷனைக் கை விடும்” அமைப்பு அஷ்டமச் சனியில் இருக்கும் என்பதால் மாற்றங்கள் எதையும் நீங்களே தேடிக் கொண்டு போகாமல் மாற்றங்கள் வந்தால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொண்டு, நம்மால் முடிந்த வகையில் திறம்படச் செய்வதே சிறந்தது.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படும் அமைப்பும் அது போன்ற எண்ணங்களும் வரலாம். அதுபோன்ற விஷயங்களும் சிலருக்கு தற்போது நடக்கும். அது போன்றவர்கள் எதிலும் பேராசைப் படாமல், புதிதாக எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பிக்காமல் விழிப்புணர்வுடனும், மனக் கட்டுப்பாட்டுடனும் இருப்பதன் மூலம் சனியால் நடக்க இருக்கும் சங்கடமான அமைப்புகள் இருந்தால் கூட அவற்றை சாதகமானவைகளாக கண்டிப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்னொரு பலனையும் சொல்கிறேன். அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களைத் தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் செட்டிலாக விடாமல் தடுக்கும். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார்.

சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதகமற்றவை செய்வார். குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணச் சிக்கல்களும், கடன்தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப் பணியாளர்கள் இதர வருமானங்கள் வரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள். எல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள்.

அஷ்டமச் சனி நடக்கும்போது மாணவர்கள் மற்றும் இளையவர்களுக்கு சோம்பலும், விரக்தி மனப்பான்மையும் வரும் என்பதால் இளைய பருவத்தினர் மற்றும் மாணவர்கள் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் அக்கறையுடன் கவனிப்பது நன்மைகளைத் தரும்.

சிலருக்கு இந்த நேரத்தில் படிப்பதை தவிர வயதுக்கேற்ற மற்ற விஷயங்களில் ஆர்வம் வந்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்குவது, வீட்டை இடித்துக் கட்டுவது, புதுவீடு வாங்குவது போன்ற விஷயங்களில் இப்போது அவசரம் காட்டவேண்டாம். இருக்கும் வீட்டை விற்று, வீடு விற்ற பணம் வேறுவகையில் செலவாகி, இருந்த சொந்த வீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்கச் செய்வார் சனி என்பதால் கவனமுடன் இருங்கள். அவசரப்படாதீர்கள்.

போட்டி, பந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை கை கொடுக்காது. இவைகளில் சிறிது பணம் வருவது போல் ஆசை காட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது ஸ்ரீராமதாசன் ஹனுமானின் சந்நிதியில் சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுங்கள். அஷ்டமச்சனியின் கடுமை குறையும்.

No comments :

Post a Comment