Friday, September 29, 2017

MESHAM : 2017 SANI PEYARCHI - மேஷம்: 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

மேஷம் இனி சந்தோஷம்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக எல்லா விஷயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும், அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் கொடுத்துக் கொண்டிருந்த அஷ்டமச்சனி எனப்படும் எட்டாமிடத்துச் சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் விலகுகிறது.

தற்போது மாற இருக்கும் ஒன்பதாமிடம் சனிக்கு அதிர்ஷ்டம் தரும் இடம் என்று நம்முடைய மூலநூல்களில் சொல்லப்படா விட்டாலும், கடுமையான கெடுபலன்களைத் தரும் அஷ்டமச்சனி அமைப்பு விலகுவது மிகப்பெரிய ஆறுதலை மேஷத்திற்குத் தரும்.

முப்பது வயதுகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களை இந்த அஷ்டமச் சனி வாட்டி எடுத்து விட்டது. இளம் பருவத்திற்கே உரிய வேலை, வியாபாரம், தொழில் போன்ற எந்த ஒரு ஜீவன விஷயத்திலும் இளம் பருவத்தினர் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காமல் தடுமாறித்தான் போனீர்கள்.

நடுத்தர வயதினருக்கு அஷ்டமச்சனி அமைப்பினால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலைமை, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன விஷயங்களில் சிக்கல்கள், குடும்பத்தில் பிரச்னை, ஆரோக்கியக் குறைவு, மனஅழுத்தம், வம்பு, வழக்கு, கடன் தொல்லை, நெருங்கிய உறவினர் மரணம், வீட்டில் சுபகாரியத் தடை, அனைத்திலும் தோல்வி, யாரும் உங்களை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை போன்ற பலன்கள் நடந்து வந்தன.

மேஷத்திற்கு இதுவரை இருந்து வந்த எல்லா சாதகமற்ற நிலைகளும் இந்த சனிப் பெயர்ச்சி மூலம் நீங்க இருக்கிறது.. இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும், கடந்த 3 ஆண்டுகாலமாக தட்டிப் போயிருந்த விஷயங்கள் இனிமேல் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்வதை கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள். சிறிதளவு முயற்சி பெரிய வெற்றி என்கிற நிலைமை இனிமேல் உங்களுக்கு இருக்கும்.

பொதுவாகவே அஷ்டமச்சனி முடிந்தவுடன் வாழ்க்கை செட்டிலாகும் என்பதால் இதுவரை எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்ததோ அவை அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும் என்பதால் இதுவரை தள்ளிப்போய் இருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகள் இனிமேல் கிடைக்கும்.

நீங்கள்தான் மேஷ ராசியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் ஒருவர் மேஷமாக இருந்தாலோ அதாவது குடும்பத் தலைவர் வேறு ராசியாக இருப்பினும் குழந்தைகளில் ஒருவரோ, மனைவியோ மேஷமாக இருந்தால் கூட அந்தக் குடும்பம் முன்னேற்றம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இனி அந்த நிலைமை விலகி அனைத்திலும் ஒரு நல்லது மேஷராசிக்கு ஆரம்பிக்க உள்ளது.

இன்னுமொரு நல்ல விஷயமாக கடந்த மாதம் முதல் குருபகவானும் சாதகமற்ற பலனைத் தரும் ஆறாமிடத்திலிருந்து ஏழாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் என்பது உறுதி.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

பண விஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப் புழக்கம் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது. செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும்.

பணம் இருந்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத்தில் திருமணம், பூப் புனித நீராட்டுவிழா, குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

மேஷராசி பெண்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித் துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர், விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது.

தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திற்கு இது வரையிருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

எல்லாவகையிலும் உங்களை மேன்மைப் பட்டுத்தக் கூடிய அமைப்பில் கிரகங்கள் இருப்பதால் மேஷராசியினர் தயக்கங்களை உதறித் தள்ளி, தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி, எதையும் தைரியமாக முன்னெடுத்து, வேலைகளை ஆரம்பித்தால் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

கடுமையான அஷ்டமச்சனி விலகுவதால் அருகில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அல்லது அநாதை விடுதியில் உங்களின் ஜென்ம நட்சத்திர நாள் அல்லது ஒரு சனிக்கிழமையன்று மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சனி ஹோரையில் அவர்களுக்கு விருப்பமான உணவு அளியுங்கள். அதில் ஏதேனும் ஒரு பதார்த்தத்தை நீங்களே உங்கள் கையால் பரிமாறுங்கள். இதுவே மிகச் சிறந்த சனிப் ப்ரீத்தி.

1 comment :

  1. Ayya vanakkam.. 19.03.1991 6.30 pm mesha rasi kanni lakkanam.. 26 vayathu aagirathu.. Appa illai.. Kadan thollaiyal avathi padukiran.. Intha sani peyarvhil anaithum sari aagi viduma...

    ReplyDelete