Friday, September 29, 2017

KADAGAM : 2017 SANI PEYARCHI - கடகம் : 2017சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

கடகம் தீர்ந்தது கவலை

கடகம்:

கடக ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத நிலைமைகளையும், மகன்-மகள் விஷயங்களில் சாதகமற்ற பலன்களையும் கொடுத்து கொண்டிருந்த சனி தற்போது நல்ல பலன்களை தரக்கூடிய ஆறாம் இடத்திற்கு மாறுகிறார்.

சனிபகவான் 12 ராசிகளையும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் சுற்றி வரக் கூடியவர். அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை வருடம் காலம் இருப்பார். 30 வருடங்கள் கொண்ட அவரின் முழுச்சுற்றில் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய மூன்று இடங்களில் வரும்போது மட்டுமே நன்மைகளைத் தருவார் என்று நம்முடைய கிரந்தங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

30 ஆண்டுகளுக்கான தன்னுடைய முழுச்சுற்றில் வெறும் ஏழரை வருடங்கள் மட்டுமே சனி நன்மைகளைத் தர கடமைப்பட்டவர். இப்படி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வர இருக்கும் நன்மைகளைத் தரக் கூடிய ஆறாமிடத்து சனி கடகத்திற்கு அமைய உள்ளதால் நடக்க இருக்கும் சனிபெயர்ச்சியால் பெரிய நன்மைகளை அடைய போகும் ராசிகளில் கடகமும் ஒன்று. எனவே வர இருக்கின்ற ஆறாமிட சனியின் நன்மைகளை எதிர்கொண்டு அனுபவிக்க கடக ராசிக்காரர்கள் தயாராக இருங்கள். 

லங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட சங்கடங்களை கொடுத்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களும் நீங்கி ஒரு நிம்மதியான சூழ்நிலை உங்களுக்கு அமைய இருக்கிறது.

அதேபோல கடந்த காலங்களில் மகன்-மகள் போன்றவர்களால் ஏற்பட்டு இருந்த மன வருத்தங்களும் நீங்கும். மகனுக்கோ, மகளுக்கோ நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லையே, வீட்டில் எந்தவித சுப காரியங்களும் நடக்கவில்லையே, படித்து முடித்தும் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப் பட்டவர்களின் குறைகள் தீரும்.

மேலும் திருமணமான மகன், மகளுக்கு வாழ்க்கையில் சிக்கல் இருக்கிறதே என்று பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த சனி மாற்றத்தினால் அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதைக் காண முடியும். குறிப்பாக என்ன காரணம் என்றே தெரியாமல் இதுவரை தடையாகிக் கொண்டிருந்த மகன் மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி ஊர் வாயை அடைப்பீர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியின் மூலமாக கடக ராசிக்காரர்கள் ஒரு புதிய உத்வேகம் தரும் சூழலில் அடி எடுத்து வைக்க இருக்கிறீர்கள். பிறந்த ஜாதகப்படி யோகமான தசாபுக்திகளும் உங்களுக்கு நடக்குமாயின், எதிர்காலத்தில் நீங்கள் மிக நன்றாக இருப்பதற்கான ஒரு சிறந்த அஸ்திவாரத்தை இப்போது சனி அமைத்துத் தருவார்.

ஆறாமிடத்து சனியால் கடனற்ற ஒரு நிலை உருவாகும் என்பதால் கடன் தொல்லையால் இதுவரை அவதிப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வகையில் அந்த கடனை அடைத்து முழுமையான கடன் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சந்தித்து கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் விலகி நானே ராஜா, நானே மந்திரி என்கிற ஒரு நிலை உருவாகும். ஆரோக்கியம் இல்லாதவர்களின் உடல்நலம் மேம்படும்.

ஆளே இல்லாத ஒரு களத்தில் தன்னந்தனியாக வெற்றி வாகை சூடும் ஒரு வீரனாக களத்தில் எதிர்க்க ஆளில்லாத நிலையை கடக ராசிக்காரர்கள் அடைந்து அதன் மூலமாக நல்ல நன்மைகளை பெறுவீர்கள். எனவே முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த சனிப் பெயர்ச்சியினை பயன்படுத்தி நன்மைகளை அடைய கடக ராசிக்காரர்கள் தயாராக இருங்கள்.

பொதுவாக கடக ராசிக்காரர்க்கள் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பொதுநலவாதிகள் என்றாலும் உங்களை வேலை செய்ய வைக்க இன்னொரு ஆள் தேவைப்படும். யாராவது ஒருவர் உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை விரும்புவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருக்கும் கடகத்தினருக்கு இப்போது இரண்டு மடங்கு நல்ல பலன்கள் நடக்கும்.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

தர்மகாரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மூத்த சகோதர, சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.

கடகராசிப் பெண்களுக்கு இந்தக் சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகளும் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் உங்கள் சொல் ஏற்கப்படும்.

சிலருக்கு இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கடக ராசிக்கு நன்மை செய்யும் அமைப்பில் வருடாந்திர பெரும் கிரகமான சனி இருப்பதால் இந்த காலகட்டத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தயக்கங்களை விட்டொழித்து சுறுசுறுப்பாக செயலாற்றினால் வெற்றிச் சிகரங்களைத் தொடுவீர்கள்.

பரிகாரங்கள்:

சனிபகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனிஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக்கூடாது. பொது இடத்தில் அல்லது கோவிலில் கொடுங்கள்.

No comments :

Post a Comment