Sunday, January 1, 2023

மகரம்: 2023 புத்தாண்டு பலன்கள்#astrologeradityagurujinewyearpalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மகரம்:

கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் மகர ராசிக்காரர்கள் கவலைகளில் இருக்கிறீர்கள். குறிப்பாக 2021, 2022 ஆகிய இரண்டு வருடங்களும் மகரத்தை படுத்தி எடுத்துவிட்டது. குறிப்பாக இளைய பருவத்தினருக்கு எல்லாவற்றிலும். மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடந்தன.

உங்களில் திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், பெரும்பாலான அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தற்போது குழப்ப நிலைகளில் இருந்து வருகிறீர்கள். பிறந்த ஜாதகப்படி. யோக தசா. புக்திகள் நடக்கின்ற மகரத்தினருக்கு மட்டுமே பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு பிரச்சினைகள் தீருவது போன்ற தோற்றம் இருந்தாலும் முழுவதுமாக எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. இதுபோன்ற நிலைகள் இந்த வருடம் முதல் விலக ஆரம்பிக்கும் என்பதால் 2023 ம் ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தரும்.

மகரத்திற்கு சோதனைகள் முடிந்து விட்ட காலம் இது. ஒரு போதும் மனதைத் தளர விடவேண்டாம். இந்த வருடம் ஜனவரி 17 முதல் ஜென்மச் சனி முடிய இருப்பதால் சனியின் தொந்தரவுகள் இனிமேல் உங்களுக்கு இருக்காது. இந்த வருடத்தோடு உங்களின் அத்தனை பிரச்னைகளும் ஒழியும் என்பது உறுதி.

இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிரந்தரம் வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் ஆரம்பிக்கும். இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் பிறக்க இருக்கும் புத்தாண்டு முதல் விலக துவங்கும்.

இளம் பருவத்தினருக்கு இதுவரை அனைத்திலும் இருந்து வந்த தடைகள் விலகுகின்றன. வருடப் பிற்பகுதியில் திருமணம் போன்ற  மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து வாழ்க்கையில் இணைவீர்கள் இந்த வருடம் முதல் அனைத்து மகரத்தினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி.

வருட பிற்பகுதியில் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில்  பணலாபம் இருக்கும். வாக்குறுதிகளை இந்த வருடம் காப்பாற்ற இயலும். கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நல்லசெய்திகள் இருக்கும்.

குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். கோர்ட்கேஸ் போன்றவைகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும்.

பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு  நல்ல நேரம் இது.  விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். வியாபாரிகள், விவசாயிகளுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும்.

வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்  கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. இன்னும் ஏழரைச் சனி முழுமையாக முடியாததால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

மகர ராசி பெண்களுக்கு இனிமேல் யோககாலம்தான். இதுவரை வெளியே சொல்ல முடியாமல் நீங்கள் பட்ட துயரங்கள் மிக அதிகம். கடவுள் உங்களை ஒருபோதும் கை விடமாட்டார். வீட்டிலும் அலுவலத்திலும் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இருக்காது.

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும்  அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும், நீடித்தும் இருக்கும்.

கடந்த சில வருடங்களாக பிள்ளைகள் மற்றும் கணவர் விஷயத்தில் தொல்லைகளையும், மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்த மகர ராசிக்காரர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்கும். பிள்ளைகள் மற்றும் கணவர் பற்றிய கவலைகள் தீரும் வருடமாக இந்த வருடம் அமையும்.

மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது. மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும் மகரத்தினரின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.

காவல்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு  கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறையும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு மகர ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. உங்களின் எதிர்கால நன்மைக்குரிய நல்ல மாற்றங்கள் இந்த வருடம் நடக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment