கடகம்:
கடக ராசிக்கு யோகக் கிரக நிலைகளே இந்த மாதம் அமைகின்றன. குறிப்பாக மாதத்தின் முதல் வாரத்தில் பாபக் கிரகங்களான சனியும், கேதுவும் ஆறாமிடத்தில் இணைவது கடன், நோய், எதிர்ப்புகளை விலக்கும் ஒரு அமைப்பு. இந்த நிலையால் உங்களில் சிலருக்கு நீண்டகாலமாக தொல்லைகளை கொடுத்து கொண்டிருக்கின்ற கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். சிலருக்கு வேலையிடங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். அனைத்திலும் திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
மார்ச் மாதம் முழுவதும் ஐந்தில் குரு பகவானும், பத்தில் செவ்வாயும் இருப்பது நல்ல அமைப்பு. எனவே எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்காமல் முன்னேற வேண்டிய மாதம் இது. சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும். மூன்றாமதிபதி புதன் நீசமாக இருந்தாலும், அவர் வக்கிரமாகி, அவருக்கு வீடு கொடுத்த குருவும் அவரைப் பார்ப்பதால் சிலருக்கு மறைமுகமான லாபங்களும், எதிர்பாராத உதவிகளும் இருக்கும். ராகு பனிரெண்டில் இருப்பதால் வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலர் வெளிநாடு, வெளி மாநிலம் செல்வீர்கள். சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் செயல்படும். எதிர்பாராத ஏதேனும் ஒரு நல்ல லாபத்தை இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.
மாதம் முழுவதும் இயற்கைச் சுபரான சுக்கிரன் நட்பு நிலையில் இருப்பது பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களின் தேவைகள் நிறைவேறும். பத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் செவ்வாய் பணியிடங்களில் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த மாதம்.
5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி அதிகாலை 1.44 மணி முதல் 7-ம்தேதி மதியம் 2.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :
Post a Comment