Friday, June 21, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (24.06.2024–30.06.2024)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியில் இருந்தாலும், இரண்டில் இருக்கும் குரு, எட்டாமிடத்தை பார்த்து, ராசிநாதனே எட்டுக்குடையவனாக இருப்பதால் இது எதிர்ப்புகளால் சஞ்சலப்படும் வாரமாக இருக்கும். பணியிடங்களில் உங்களைப் பிடிக்காதவர்களின் கை உயரும். சில நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாற வைக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள், இருக்கும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் ஆசை காட்டி மோசம் செய்யும். உஷார். எவரையும் இப்போது நம்ப வேண்டாம்.

குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வரும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்கள் வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.

ரிஷபம்:

இந்த வாரம் சூரியன் இரண்டாம் இடத்தில்., ராசிநாதன் சுக்கிரன் இணைவில் இருப்பது தந்தை வகையில் நல்ல அமைப்பு. மறைவிடமான பனிரெண்டில் செவ்வாய், இருப்பதும் ரிஷபத்திற்கு குறைகளைத் தராத நிலை. ராசிநாதன் சுக்கிரன் இரண்டில் இருப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் கவலை தரும் விஷயங்கள் எதுவும் இந்த வாரம் இல்லை. குறிப்பிட்ட பலனாக வீண்பழி சுமத்தி வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள்.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்களும், செயல்திறனும் பளிச்சென வெளிப்பட்டு, வெற்றிப் பாதையில் நீங்கள் நடக்க இருப்பதற்கான அமைப்புகள் உருவாகும்.

மிதுனம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன், ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பது  மிதுனத்திற்கு கஷ்டங்களை போக்கி, நல்ல நிகழ்சிகளையும், சிரமங்கள் இல்லாத வாரத்தையும் உருவாக்கும். ஆறாமிடத்தை குரு வலுவுடன் பார்ப்பதால் சிலருக்கு தாமதித்து வந்த நல்ல வேலை இப்போது கிடைக்கும். அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு தொழிலில் நல்லவைகள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். உங்களை முடக்கிப் போட்டுக் கொண்டு இருந்த எதிர்ப்புகள் விலகும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டில் ஆகும்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். 23-ம்தேதி இரவு 10.48 மணி முதல் 26-ந்தேதி அதிகாலை 1.49  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும். பொதுவில் நன்மை தரும் வாரம் இது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இது புதிய வேதனைகள் எதுவும் இல்லாத வாரம். பழைய. சோதனைகள் தொடரும். வாரத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் பலவீனமாக இருக்கிறார். உங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு பின்னடைவுகள் அனைத்தும் விலகிக் கொண்டு வருவதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் மந்தநிலைமை மாறத் துவங்கி, நன்மைகள் நடக்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். உங்களின் வெற்றி வெகுதூரத்தில் இல்லை. அனைத்தும் இனி நல்லபடியாக நடக்கும்.

ராகு ஒன்பதில் பாபத்துவம் பெறுவதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். அதன் மூலம் நஷ்டங்கள் வரும். உஷார். வெளிநாடு காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு, பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 29,30 ஆகிய நாட்களில் பணம் வரும் 26 -ந்தேதி அதிகாலை 1.49 மணி முதல் 28 -ந்தேதி காலை 04.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.

சிம்மம்:

வாரத்தின் மிக முக்கிய நாட்கள் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டம தினமாக இருந்தாலும், ராசிநாதன் சூரியன் பதினொன்றாமிடத்தில் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் தந்தையின் விஷயத்தில் நன்மைகளும், உறவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால்  லாபம் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். ராசிநாதனின் சுப வலுவால் பணவரவு இருக்கும். உங்களில் பூரம் நட்சத்திரக்காரர்களின் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிதாக பொருள் சேர்க்கை உண்டு.

அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 28 -ம்தேதி காலை 4.32 மணி முதல் 30-ம்தேதி காலை 7.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.

கன்னி:

ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் அமர, ராசி குருவின் பார்வையில் வலுவாக இருப்பதால் இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் லாபம் வரும். சமீபத்தில் வேலைநீக்கம் போன்று பாதிக்கப்பட்ட சிலருக்கு இனிமேல் நல்லவை நடக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். அலுவலகத்தில் மரியாதை இருக்கும். பணிச்சுமை குறையும். மாணவர்கள் படிப்பில் ஆனந்தம் காணுவீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். பெண்களுக்கு இது சுமாரான  வாரமாக இருக்கும். 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். சிலருக்கு வேலை மாற்றம், பணி இடமாற்றம் இருக்கும். சொந்தத்தொழில், வியாபாரம் போன்றவைகள் நன்றாக நடக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும். சிகப்பு நிற பொருட்களால் லாபம் அடைவீர்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் அமர்ந்து நல்ல பலன்களை தர இருக்கும் நிலையில் இருந்தாலும், செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் துலாத்திற்கு சுமாரான வாரம் இது. எட்டாமிடத்தில் குரு சுபபலம் பெற்று இருப்பதால் வேலை, தொழில் அமைப்புகளில் கடந்த சில வாரங்களாக இருந்து வந்த தடைகளும் எதிர்மறை அனுபவங்களும் நிவர்த்தியாகி இனிமேல் சிரமங்கள் இல்லை என்ற நிலை உருவாகும். சுப விஷயங்களுக்கு இருந்து வந்த தடை விலகும். துலாம் ராசிக்கு நல்ல வாரம் தான் இது.

இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை வரும். 29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். வாரம் முழுவதும் சந்திரன் பலவீனமாக இருப்பதால் நண்பர்களே விரோதியாக மாறி பின்னால் பேசி வெறுப்பேற்றும் காலம் இது. ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் ஆட்சியாக இருந்தாலும் ஆறாமிடத்தில் இருப்பது ஒருவகையில் நன்மை குறைவுதான். ஆனால் ராசியைக் குரு பார்த்து ராசி சுபத்துவம் அடைவதால் எதையும் சமாளிப்பீர்கள். கேட்டரிங். டீக்கடை. போன்றவர்களுக்கு இது லாபம் தரும் வாரம். சில மாதங்களாக நல்லவைகள் எதுவும் நடக்காதவர்களுக்கு நன்மைகள் நடக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது வாழ்க்கையில் மாற்றங்கள் இருக்கும். இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைத்தல், டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் நல்ல தகவல் கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம்.

தனுசு:

ராசிநாதன் குரு ஆறாம் வீட்டில் இருந்தாலும், சுபரின் வீட்டில் இருப்பதும், பாக்கியாதிபதி சூரியன், சுக்கிரனோடு இணைந்து ராசியைப் பார்ப்பதும் தனுசுக்கு யோகம் அளிக்கும் அமைப்புகள். இந்த வாரம் உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதும் இருக்கும். உங்களில் சிலருக்கு சாதுரியமான வழிகளில் மறைமுகமான லாபம் வரும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நடக்கும். அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாரம்  இது.

பெண்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். வார நடுவில் சந்திரன் நான்காமிடத்தில் ராகுவுடன் இணைவதால், திரவம் சம்பந்தப்பட்ட தொழில், காய்கறி வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் வருமானம் வந்து ஈடுகட்டும். யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் நிச்சயமாக மனதிற்கு சந்தோஷமான சம்பவங்களும், லாபங்களும் உண்டு.

மகரம்:

ராசியைக் குரு பார்ப்பதோடு, ராசியின் யோகர்கள் சுக்கிரன், புதன், சனி மூவரும் வலுவான நிலையில் இருப்பதால், இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் இருக்கும். வேலை, வியாபாரம் தொழில் லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் வாங்குவீர்கள். ராசியில் ஆறில் இருக்கும் சூரியபலத்தால் உயர் அந்தஸ்து கொண்டவர்கள் உதவுவார்கள். காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. எதையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.

பெண்களுக்கு இது நல்ல வாரம். உங்களைப் புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். மகர ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் மந்தமாக இருந்தாலும்  இலாபகரமாக நடந்து நன்மைகளை தரும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும் மனைவியின் பொறுப்பில் விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம்.

கும்பம்:

ஆறாம் அதிபதி சந்திரன் பலவீனமடைவதால் சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. தொழில் ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் வருமானத்திலும் குறைகள் வரப்போவது இல்லை. சுக்கிரன் ஐந்தில் இருப்பதால் பெண் தொழிலாளிகளை கொண்ட தையல், எக்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இது நல்ல வாரம். இளைஞர்களுக்கு எரிச்சல் படும்படியான சம்பவங்கள் நடக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். குடும்ப பிரச்சனைகளை தள்ளி வையுங்கள்.

ராசியில் சனி சந்திரன் இணைவு ஏற்படுவதால் மறதி அதிகமாகும். கைப்பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. செல்போனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வரும். ஒன்றும் ஆகாது. நன்றாக இருப்பீர்கள்.

மீனம்:

ராசிநாதன் குரு மூன்றில் இருந்தாலும் சுபர் வீட்டில் இருக்கிறார். தனாதிபதி  செவ்வாய் இரண்டில் ஆட்சியாக நன்மை தரும் நிலையை அடைகிறார். இது மீனத்திற்கு நல்லவைகளைத் தரும் அமைப்பு என்பதால் கிடைக்காது என்று கை விட்டுப் போன  நிலுவைத் தொகையோ அல்லது ஒரு பாக்கித் தொகையோ இப்போது கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் எதையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது.

பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் மீன ராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டு. பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையும் இனி மேன்மையாகவே இருக்கும். எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் வாரம் இது. சிலர் உங்களில் சிலர் பிடிவாத குணத்தால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். கவனமாக செயல்படுங்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment