ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
சிம்மம்:
சிம்மத்திற்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக 2023 ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை. தற்போது எட்டாம் இடத்தில் இருக்கும் குரு, ஏப்ரல் மாதம் முதல் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்க்க போவதால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்த வருடம் முழுக்க உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். எனவே 2023ம் ஆண்டு உங்களுக்கு. நல்ல ஆண்டுதான்.
குருவின் ஒன்பதாமிட இருப்பால் உங்களுக்கு வேலை, தொழில் இடங்களில் நல்ல
பெயரும், கவுரவமும் கிடைக்கும்.
எனவே மார்ச் மாதத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில்
தசா,புக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும்
இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.
அதேநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பலனாக கணவன் மனைவி உறவில் விட்டுக்
கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப உறவுகளில் நெருடல்கள்
இருக்கும். வேறு கெடுதல் எதுவும் இருக்காது.
ஆயிரம் இருந்தாலும் சனி, சனிதான் என்பதால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது.
கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.
ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கும் சனி உங்களை பிடிவாதக்காரர்
ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. உங்களில் சிலர் தேவையற்ற பிடிவாதம் கொண்டு
உறவுகள், நட்புகளிடம் விரோதங்களை வளர்த்துக்
கொள்வீர்கள் என்பதால். சுற்றியிருப்பவர்களிடம் நீங்கள் நற்பெயரை இழக்கின்ற வருடம் இது.
வருட ஆரம்பத்தில்
விரைய ஸ்தானமான பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் இது சுப, விரயங்களையும்
தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும். குறிப்பாக இந்த புத்தாண்டில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச்
செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம்
போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி
முடிப்பீர்கள்.
வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவுகளை
சந்தித்து கொண்டிருந்த சிம்மத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம்
சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு
செய்வதற்கான வருமானம் இருக்கும்.
வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே
அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும்
அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு
ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்த சிம்ம ராசியினர் அவை
நீங்கப் பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை விலகப்
பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.
கேது, பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும் போது மறைமுகமான வழிகளில் அளவற்ற
செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம்
தரும் அமைப்பில் மூன்றில் இருப்பதால்
சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.
மூன்றில் உள்ள கேது உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் பலிக்க வைப்பார்
என்பதால் இந்த வருடம் முழுவதுமே முயற்சிகளுக்கு ஏற்ற பலன் சிம்ம ராசிக் காரர்களுக்கு
இருக்கும். வேற்றுமத, இன, மொழி பேசுகின்றவர்களின் மூலமான நன்மைகளும் இம்முறை
சிம்மத்திற்கு வலுவாக உண்டு. உங்களில் சிலர் தாய்மொழி பேச இயலாத இடங்களில் முன்னேற்றத்தை
அடைவீர்கள்.
ஞானகாரகன் சுபத்துவமாக இருப்பதால், நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த
குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.
புனித யாத்திரை செல்வீர்கள். மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து
உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். வயதானவர்களுக்கு இந்த வருடம். கைலாசா யாத்ரா,
நூற்றியெட்டு திவ்ய ஸ்தலங்களின் தரிசனம் போன்றவைகள் சித்திக்கும்.
முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன
அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம்
வரத்தொடங்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு நல்லபடியாக
திருமணம் கூடி வரும். சிலர் விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவீர்கள். வீட்டிற்குப்
பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம்
சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு
இருக்கிறது. தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர்
தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான
வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித்
தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும்
வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த
மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வேலையில்
இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை
விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து
வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள். நண்பர்கள், நலம் விரும்பிகள்
மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும்.
வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள்
நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.
புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும்.
தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும்
பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப்
பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.
ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள்
உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள்
சிலருக்கு உருவாகும். விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு
நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு
லாபம் வரும்.
இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள், காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ
அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த
வருடம் நல்ல பலன்களைத் தரும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக
எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து
திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். பெண்களுக்கு கணவரின்
ஆரோக்கியம் பற்றி பற்றிய கவலைகள். வரும். அவரது பொருளாதார நிலைமை, வேலை, தொழில் போன்றவைகள்
சரியாக இல்லையே என்ற கவலைகளால். குழப்பங்களில் இருப்பீர்கள். ஆயினும் ஜூன்
மாதத்திற்கு பிறகு இவைகள் படிப்படியாக சரியாகும். அலுவலகம் செல்லும் மகளிருக்கு.
உயர்வுகள் உண்டு.
இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை
நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக் கொள்வீர்கள் என்பதால் புத்தாண்டை நீங்கள்
வரவேற்கவே செய்வீர்கள். வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் குருவின் எட்டாமிட
இருப்பால் சிறிது பின்னடைவுகளைத் தந்தாலும் பிற்பகுதி மாதங்கள் உங்களின் எதிர்கால
நன்மைக்கு அச்சாரம் போடும் விதமாக அமையும் என்பது உறுதி.
சிம்மத்திற்கு கெடுபலன்கள் இல்லாத வருடம் இது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment