மேஷம்:
மேஷராசிக்கு பூர்வ புண்ணியபலத்தினால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் இந்தவாரம் நடக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். மனோதைரியம் அதிகமாகும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம் இடத்திற்கு மாறுவதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பணவரவுகளும், லாபங்களும் உண்டு. இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். சிலருக்கு வாகனம் அமையும். பழையதை விற்றுவிட்டு நல்ல வாகனம் வாங்க முடியும்.
மகள், சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். மேஷத்திற்கு நல்ல வாரம் இது. 8,9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி மதியம் 1.42 முதல் 10-ம் தேதி இரவு 9.59 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் ஆட்சி பெற்றிருப்பது நன்மைகளை செய்யும் அமைப்பு என்பதால், ரிஷபத்திற்கு இது நல்ல வாரம்தான். அஷ்டமச் சனி நடப்பதால் பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணி புரிபவர்கள், பணம் எடுத்து போகும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. பருவவயது குழந்தைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
அரசுத் துறையினருக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குறிப்பாக சித்தியால் நன்மை அடைவீர்கள். சிலருக்கு வெளிமாநில பயணம் இருக்கும். 10,11, ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 9.59 முதல் 13-ம் தேதி காலை 9.21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.
மிதுனம்:
ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் அமர்வதால் உங்களில் சிலர் கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கவனம் தேவை. சிலருக்கு வேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் முதலில் காட்டி பிறகு அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதால் யூக வணிகத்தில் கவனமாக இருங்கள்.
என்ன இருந்தாலும் பொருளாதார நிலை வலுவாக இருப்பதோடு ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டிருக்கும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மை உடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும்.
கடகம்:
கடகத்திற்கு நல்ல வாரம் இது. வாரம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும். இழுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும். உங்களில் சிலர் எதிர்கால முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். சிலருக்கு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் இப்போது வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். அவர்களை துரத்துவீர்கள்.
நான்காமிடம் பலம் பெறுவதாலும், குரு ஐந்தில் இருப்பதாலும் சிலருக்கு வாகன யோகம் உண்டு. நினைத்த மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். பனிரெண்டாமிட அதிபதி வலுப் பெறுவதால் வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சுயதொழில், வியாபாரம் போன்றவைகள் சுறுசுறுப்பாக நடக்கும்.
சிம்மம்:
ராசிநாதன் நீசமாக இருப்பதால் சிம்மத்திற்கு இது சுமாரான வாரமே. ஆனால் ராசினாதனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அங்கேயே ஆட்சியாக இருப்பதால் வாரக் கடைசியில் நன்மைகள் நடக்கும். ஐந்தில் சனி இருப்பதால் சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மனச்சங்கடங்கள் வரும். பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பணவரவிற்கு இந்தவாரம் குறையேதும் இருக்காது. பெண்களால் நன்மைகள் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும்.
சூரியன் நீசமாக இருப்பதால் சிலருக்கு மனச் சோர்வுகளும், கலக்கமான எண்ணங்களும் இருக்கும். இன்னும் சிலருக்கு உடல்நலம், மனநலம் இரண்டுமே டல்லாக இருக்கும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புக்கள் சேரும். அரசு தனியார் ஊழியருக்கு வருமானங்கள் இருக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரப்படக் கூடாது.
கன்னி:
வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் குருவுடன் இணைந்திருப்பதும், தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதும் கன்னிக்கு நல்ல அமைப்பு என்பதால். இந்த வாரம் உங்களின் தொழில், வேலை மற்றும் பொருளாதார வசதிகளில் குறைகள் எதுவும் இருக்காது. சிலருக்கு விருப்பப்பட்ட வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதன் சுபத்துவமாகி, செவ்வாய் ஆறுக்கு மாறுவதால் அலுவலகங்களில் பொறாமை மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்ப பதிலடி கொடுப்பீர்கள். இனி நிலையான வருமானம் வரத் துவங்கும்.
கிரக நிலைகள் கன்னிக்கு சாதகமாக இருப்பதால் எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. மதிப்பு மரியாதை நன்றாக இருக்கும். நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ நல்லபடியாக செட்டில் ஆகி கைக்கு கிடைக்கும். வாரம் முழுவதும் சந்திரன் வலுவாக இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு அனைத்தும் நன்மையாகும் வாரம் இது. ராசிநாதன் ஆட்சி நிலையிலும், ஒன்பதிற்குடையவன் இரண்டிலும் இருப்பது யோகநிலை என்பதால் எந்த ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து உங்களுக்கு சந்தோஷம் தரும். பெண்கள் நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் கிரகப் பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். முன்னேற்றத்திற்கு தடை எதுவும் இல்லை. உங்களில் சனிதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இனி இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும். சாதகமான கிரக அமைப்பால் காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சிலருக்கு அதிகாரப்பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் உண்டு.
விருச்சிகம்:
மனதில் தன்னம்பிக்கை தலையெடுக்கும் வாரம் இது. இதுவரை உங்களை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை நினைத்தவர்கள் எல்லாம் வேதனைகள் விலகுவதை காண்பீர்கள். எதில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்ததோ அது இனி விலக ஆரம்பிக்கும். நல்லது இன்னும் நடக்கவில்லையே என்று நினைக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். விருச்சிகத்திற்கு இனியெல்லாம் சுகமே.
வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன்கள் தொல்லை தராது. நட்புக் கிரகங்கள் யோக நிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நீண்டகாலமாக நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பிறந்த ஜாதகத்தில் தசா புக்திகள் வலுவாக நடப்பவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள் இளைஞர்களின் மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள்.
தனுசு:
உங்களில் பூராடம் நட்சத்திரத்தினர் கடுகடுப்பாக இருப்பீர்கள். தேவையின்றி எரிந்து விழுவீர்கள். மற்றவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் எங்கும் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். சில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் எதிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.
இளையபருவத்தினருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத் தடையும் சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச்சந்தை, யூகவணிகம், ரேஸ், லாட்டரி கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும் என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது.
மகரம்:
மகரத்தினர் எதையும் சந்தேகப்படும் வாரம் இது. குறிப்பாக மகரராசி மனைவிகள் சந்தேகப்படுவீர்கள். எதுவும் கெடுதலாக நடந்து விடுமோ என்கின்ற இனந் தெரியாத மனக்கலக்கங்கள் சிலருக்கு இருக்கும். ஆயினும் ராசிநாதன் சனி குருவின் வீட்டில் வலுவாக இருப்பதால் நல்லவைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். வேலை செய்யுமிடங்களில் வாக்குவாதம் வேண்டாம். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். அலுவலகத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.
ராசிநாதன் வலுவால் உங்களின் மனதைரியம் அதிகரித்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. பணவரவு சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பற்றாக்குறை இருக்காது. வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். தொழிலில் அக்கறை காட்டுங்கள். ஏழரைச்சனி நடப்பதால் எந்த ஒரு விஷயமும் முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். வார இறுதியில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் செயல்படத் துவங்கும்.
கும்பம்:
வார ஆரம்பத்தில் கிரகநிலைகள் டென்ஷன் வரும் சில விஷயங்களைச் செய்தாலும் ராசிநாதன் வலுப்பெற்று இருப்பதால் வருகின்ற பிரச்னைகள் இரண்டே நாட்களில் தீர்ந்து விடும். கும்பத்தினர் கவலைப்பட ஒன்றுமில்லை. சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி நிமிடத்தில் போய் விடும். அதேநேரம் குறுக்குவழி சிந்தனைகள் இந்த வாரம் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.
உங்களில் சதயம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் பிரச்னைகளை சாமர்த்தியமாக தீர்ப்பீர்கள். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். 10,11, ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி அதிகாலை 4.26 முதல் 6-ம் தேதி காலை 8.13 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.
மீனம்:
எல்லாத் துறையைச் சேர்ந்த மீனராசிக்காரர்களுக்கும் நல்ல வாரம் இது. கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால் சிலருக்கு மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். தெய்வ தரிசனம் உண்டு. மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். பணவரவுக்கு இருந்த தடைகள் நீங்கும்.
கோட்சாரரீதியில் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் மீனத்திற்கு எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. பிறந்த ஜாதக அமைப்புப்படி வேதனை தரும் தசாபுக்திகள் நடந்தால் மட்டுமே சிலருக்கு துன்பங்கள் இருக்கும். 6,10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி காலை 8.13 முதல் 8-ம் தேதி மதியம் 1.42 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள்.
Thanks Guruji
ReplyDelete