கன்னி:
கன்னிராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த சனிபகவான் இம்முறை நான்காம்
இடத்திற்கு மாறுகிறார். சனியின் நான்காமிட மாற்றம் அர்த்தாஷ்டமச் சனி என்று
சொல்லப்பட்டு நன்மைகளை தராத ஒரு நிலை என்று நம்முடைய கிரந்தங்களில்
சொல்லப்படுகிறது.
ஆயினும் கன்னிக்கு சனிபகவான் ஐந்துக்குடைய யோகாதிபதி என்கிற நிலையில் தற்போது
அவர் மாற இருக்கும் குருவின் வீடான தனுசில் ஒரு சாத்வீகமான நல்ல நிலையை
அடைவார் என்பதால் கெடுபலன்கள் எதுவும் கன்னி ராசிக்கு இருக்காது என்பதே
உண்மையான நிலையாகும்.
கோட்சார பலன்கள் என்பது வருடக் கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள்
ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிலையையும் கணித்து அதன்பிறகு சொல்லப்படக் கூடியது
என்பதால், மற்ற வருட கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் மாற்றங்கள் கன்னி
ராசிக்கு சாதகமான அமைப்பில் இருக்கும்போது சனியால் மட்டும் கெடுபலன்கள்
எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.
உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம்
18 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக உன்னதமான பலன்களை தர இருக்கின்ற 11-ம் இடத்திற்கு
ராகு மாறுதல் அடைந்து இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு கன்னிக்கு நல்ல
பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார்.
அதன்பிறகு 20 நாட்களில் நடந்த குருப்பெயர்ச்சியும், மிகுந்த தன லாபத்தைத் தரக்
கூடிய இரண்டாம் இடத்தில் நடைபெற்று தற்போது குருபகவானும் உங்களுக்கு பணவரவைத்
தரக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
ஏறத்தாழ இந்த சனிப் பெயர்ச்சியின் காலம் என்று சொல்லக் கூடிய இரண்டரை ஆண்டு
காலங்களில் முதல் ஒன்றரை வருட காலத்திற்கு மற்ற கிரகங்களான குரு, ராகு
ஆகியவற்றின் கோட்சார நிலைகள் உன்னதமான ஒரு அமைப்பில் அமைந்திருப்பதாலும்
குறிப்பாக தனம், லாபம் என்று சொல்லப்படக்கூடிய 2, 11-ம் இடங்கள் கன்னிராசிக்கு
குரு மற்றும் ராகுவால் சுபத்துவ வலிமை அடைந்திருப்பதாலும் தற்போது மாற
இருக்கின்ற அர்த்தாஷ்டம சனி அமைப்பு பெரிய பாதிப்புகளை தரப் போவது இல்லை.
மேலும் நான்காமிடத்து சனி தன்னுடைய பார்வையால் ஜீவன அமைப்புகளான வேலை, தொழில்,
வியாபாரம் போன்றவைகளை பார்த்துக் கெடுப்பார் என்றுதான் நம்முடைய மூல நூல்களில்
சொல்லப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் பத்தாமிடம் வேறுவகையில் சுபத்தும் அடைக்கின்ற ஒரு நிலைமையில்,
சனியின் பார்வைக்கு மாற்றாக குருவின் சுபத்துவ பார்வை போன்ற அமைப்புகள்
இருக்கின்ற நிலையில் சனி மாற்றம் கெடுபலன்களை தருவது இல்லை. தற்போது இரண்டில்
இருக்கின்ற குருபகவான் தன்னுடைய புனிதப் பார்வையால் பத்தாமிடத்தை நோக்குவதால்
அர்த்தாஷ்டமச் சனியின் தொழில், வேலை சம்பந்தமான இடையூறுகள், உங்களுக்கு
இருக்கப் போவது இல்லை.
கோட்சார பலன்களில் ஒரு கிரகம் அங்கே இருந்தால் இந்தக் கெடுபலன் என்று
உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்கு மாற்றாக வேறு விதமான சுபத்துவ வலிமைகள்
அந்த கிரகத்திற்கோ, அல்லது அந்த பாவத்திற்கோ அமையுமாயின், ஒரு மனிதனுக்கு
நிச்சயமாக கெடுபலன்கள் நடைபெற போவது இல்லை.
அதுபோன்ற ஒரு நல்ல நிலைமை தற்போது கன்னி ராசிக்கு இருக்கிறது. உதாரணமாக 2-ல்
குரு, 11-ல் ராகு என தனலாப அமைப்புகள் வலுப் பெற்று இருப்பதால் அர்த்தாஷ்டமச்
சனியின் முக்கிய பலனான வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளை சனியால் கெடுக்க
முடியாது.
எனவே கெடுபலன்கள் ஏதேனும் வந்துவிடுமோ என்கிற தயக்கத்தை உதறித் தள்ளி, சனியைத்
தவிர்த்து மற்ற கிரகங்கள் வலுவாக இருக்கின்றபடியால் வரப் போகின்ற காலங்கள்
கன்னிக்கு நல்லவிதமாகவே அமையும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில்
ஒரு சிறப்பான நிலைமைக்கு வருவீர்கள் என்பது உறுதி.
சனி தனது பார்வையால் பத்தாமிடத்தையும் உங்கள் ராசியையும் பார்ப்பார் என்பதால்
பணிபுரியும் இடங்களில் மாற்றங்களும், ஏமாற்றங்களும் இனிமேல் இருக்கும்.
அலுவலகத்தில் எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதங்கள்,
தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே
வேண்டாம். இதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும்,
மரியாதையும் கீழிறங்கச் செய்வார் சனி.
சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது வேறு ஊருக்கு
டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் உங்களின் எதிர்காலத்துக்கு நல்லது
என்பதால் வரும் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். மேலிடத்திற்கும்
உங்களுக்கும் சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் கவனம்
தேவை.
அரசுப் பணியாளர்கள் முறைகேடான வழிகளில் பணம் வரும் நேரங்களில் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். நான்கு சுவருக்குள் நீங்கள் இருப்பதாக நினைத்துக்
கொண்டிருந்தாலும் அந்த சுவருக்கும் கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை
கவனத்தில் கொள்ளுங்கள்.
சுய தொழில் செய்பவர்களும், வியாபாரிகளும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ, புதிய
கிளைகள் தொடங்கவோ, புது முயற்சிகள் எடுக்கவோ யோசித்து செய்ய வேண்டும்.
ஆயிரம்தான் இருந்தாலும் குருபகவானின் தயவினால் பணவரவு சிறப்பாக இருக்கும்
என்பதால் எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முடியும்.
இன்னொரு முக்கிய பலனாக சனி இப்போது ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய குணங்கள்
சற்று மாறுபடும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சற்று முரண்பாடானவராக,
பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். மனதில்
குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக் கலக்கம் இருக்கும். எதிலும்
நல்லவைகளையே பார்க்கும் உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப்
பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.
சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால்
அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி
தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட
செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை
விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய்
பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்காமிடத்து சனியால்
அம்மாவிற்கு ஆரோக்கியக் குறைபாடுகள் தோன்றும். தாயின் உடல்நலத்தில் அக்கறை
காட்டுவது நல்லது.
எந்தக் காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம்
வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது
சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது
போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில்
செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட சனி .
வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். இந்தச் செலவுக்கு புது வண்டியே வாங்கிவிடலாம்
என்றால் அதற்கும் தடை வரும். மாணவர்களுக்கு படிப்பில் தடை வரக்கூடும் என்பதால்
காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களை கட் அடித்து விடலாம்.
சனிபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக்
கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு, நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை
உள்ளவர்கள் விற்பனையைத் தள்ளி வைப்பது நல்லது. வீடோ, நிலமோ விற்ற பணம் விற்ற
நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து
பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.
இளைஞர்களுக்கு வேலை மாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு, மனத்
தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும்.
குடும்பத்தில் கடும் முயற்சிக்கு பிறகே சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள்
விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களைக் கண்காணிப்பது அவசியம்.
வியாபாரிகளுக்கு வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில்
செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற
சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கும்,
கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.
பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் பரம்பொருளின் அருளினால் எதையும் சமாளிக்கும்
திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான
தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு இந்த கோட்சாரக் கிரகக் குறைகள் பெரிதாக ஒன்றும்
பாதிக்காது என்பதால் கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை.
பரிகாரங்கள்:
அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன்
கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஏற்றுவதும்,
வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில்
இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு
சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.
No comments :
Post a Comment