Saturday, July 28, 2018

ரிஷபம் - 2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யாகுருஜி


கைபேசி எண் :8870998888

உங்களின் முயற்சிகள் தடைபடும் தரும் மாதமாக ஆகஸ்டு மாதம் இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் நீசமாக இருப்பதால் குழப்பங்களும், சாதகமற்றவைகளும் இப்போது இருக்கும். அஷ்டமச்சனியின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதால் இளைய பருவத்தினர் கடுமையாக உழைக்க வேண்டிய மாதம் இது. ரிஷபத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள்.

சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.

2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி இரவு 9.41 மணி முதல் 23-ம் தேதி காலை 10.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

No comments :

Post a Comment