Monday, April 30, 2018

ரிஷபம்: 2018 மே மாத பலன்கள்


ரிஷபம் : 

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி வலுவுடன் இருப்பதும், ராசியின் நண்பர்களான சனியும், புதனும் ஒருவருக்கொருவர் கேந்திர, கோணங்களில் இருப்பதும் ரிஷபராசிக்கு நல்ல அமைப்புகள் என்பதால் மே மாதம் ரிஷபத்திற்கு மாற்றங்களை தருகின்ற ஒரு மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கும் நடுத்தர வயதுகளில் இருப்பவர்களுக்கும் இதுவரை இருந்து வந்த வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் மாற்றங்கள் உருவாகும் மாதம் இது.


உங்களில் சிலர் அதிகமாக யோசித்துச் செயல்படும் குணமுடையவர்கள் என்பதால் மனக் குழப்பத்தில் இருப்பீர்கள். இந்த மாதம் நடக்க இருக்கும் சில மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளைத் தர இருப்பதால் எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல் நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை பெறுங்கள். திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள், விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாற்றங்கள் கிடைக்கின்ற மாதம் இது. சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கும். சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது சம்பந்தமான லாபங்களும் இருக்கும்.

புத்திர ஸ்தானாதிபதி புதன் பலவீனமாவதால் பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனக்குறை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பருவவயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் ஒரு கண் வையுங்கள். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால் அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள். ஆறாமிடத்தில் குரு இருப்பதால் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

2,5,11,13,15,17,18,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 3ம் தேதி இரவு 7.51 மணி முதல் 6 ம் தேதி காலை 8.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment