(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள்
மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின்
முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)
பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி ஆண்டில் மிதுனத்தினரின் கிரக
நிலைகள் கெடுபலன் எதுவும் தராத நிலையில் இருப்பதால் விளம்பி ஆண்டு உங்களுக்கு
துன்பங்கள் எதுவும் தராமல் நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக இருக்கும்.
இதுவரை உங்களுக்கு எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது
நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டில்
உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன்
அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
கிரக நிலைமைகள் மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு சாதகமாக அமைவதால் இனிமேல்
படிப்படியாக உங்களின் வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச்
செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும்
இப்போது நீக்கப்படும்.
விளம்பி வருடத்தின் சிறப்பு பலனாக உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும்
சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடுதல்
இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள்
இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும்.
ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள்.
இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும்.
ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள
உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.
சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள்.
வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள்
ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே,
தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க
ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில்
முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி
கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும்
பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த
மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி
மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.
பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தர கூடிய
காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை
பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும்.
விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம்
என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச்
செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.
குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல்
சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும்.
காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம்
நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம்
தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.
ராகு சுபத்துவமாக இரண்டாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம்
வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில் பணலாபம்
இருக்கும். வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக
கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை
செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து
இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.
கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால்
குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி
சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து
வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். சிறு
சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு
அந்த அமைப்பு இப்போது கூடி வரும். அது நன்றாகவும் நீடித்தும் இருக்கும். வருட
ஆரம்பத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய்,சனி இணைவதால் பங்குதாரர்கள் விஷயத்தில்
கவனம் தேவைப்படும்.
குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச்
சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து
வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின்
திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது
போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ
இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது
போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு
பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு
வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு
முடிவுக்கு வரும்.
வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக்
கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய
வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி
பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை
உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த
கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக
எதிரிகள் காணமல் போவர்கள்.
பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும்.
நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும்
பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து
வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம்
கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும்.
கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக
கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர
சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள்
போன்றவைகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு தவறான
சில முடிவுகளை எடுக்காதீர்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது.
வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின்
பேரில் டெபொசிட் செய்யலாம்.
மிதுனராசிக்காரர்களுக்கு இது திருப்பு முனையான தமிழ்ப்புத்தாண்டு என்பதில்
சந்தேகமில்லை.
No comments :
Post a Comment