(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ
ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக
ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில்
இரு பெரும் பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை
கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே வரவிருக்கின்ற தமிழ்ப்
புத்தாண்டை கடக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
பாபக் கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சாரரீதியில் அமர்ந்திருப்பது
நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி
புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும்
சேர்ந்திருப்பதும், வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும்
கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும்.
அதேபோல புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும்
நான்காமிடத்தில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப்
பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் நல்ல ஸ்தானமான ஐந்தாம் பாவத்திற்கு இடம்
பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகள் இருக்கும்.
கடகராசியைச் சேர்ந்த தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப் பெரிய
திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை
விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள்
முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்க நல்ல நேரம் இது.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த
வருடம் பதவிஉயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை
எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை
செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில்
மாற்றம் வரலாம்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக்
கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு,
பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள்
பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு
நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக
பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம்
என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல்
கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில்
சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக
பிறந்தவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்லசெய்திகள் இருக்கும்.
நவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து
ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர்
சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து
இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து
கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது
வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள்
திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும்
மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.
பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே
இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி
பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத
அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள்
இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.
வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை
சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.
எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த
வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்
உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள்
நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள்
செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற
புனிதப்பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும்
வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின்
ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு
வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால்
நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட
நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம்
போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு
சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.
வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை
இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.
பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு
உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த
பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும்
இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம்
போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு
தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச்
செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது.
அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கடக ராசிக்கு
குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் இது.
No comments :
Post a Comment