(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்
மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல்
எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு
மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய
பருவத்தினருக்க தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற
அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும்.
இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான
நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம் வயது ரிஷபத்தினர் இந்த தமிழ்ப்
புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதினருக்கு வேலை,
தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால்
அனைத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது.
விளம்பி வருடத்தின் சிறப்புபலனாக தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான
பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை
அதிகம் நம்ப வேண்டாம்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும்
வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ,
வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள்
தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள்,
மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள்
உண்டு.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம்
இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து
உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று
இப்போது நடக்கும்.
அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்.
இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும்.
வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும்
வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.
பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும்.
பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக
பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு மறைமுகமான
வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத
வகையில் பண வரவுகளும் இருக்கும்.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க்
எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம்
வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ
வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும்
நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக
படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும்,
மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க
வேண்டிய காலம் இது.
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு
அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம்
என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம்
சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு
பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும்
உஷாராக இருங்கள்.
ஒரு சிறப்புப் பலனாக எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும்
வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது
வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது
போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில்
செலவாகி வாடகை வீட்டில் இருக்கும்படி நேரும்.
நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது
அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது
என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும்
மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில்
தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி
பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட்
காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும்
கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட
வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க
முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.
குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும்
பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக
இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு
திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த
பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான
சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ
மதிக்கப்படும்.
உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக்
கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும்
கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து
வைத்த நற்பெயர் நிமிட நேரத்தில் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
ரிஷபத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும் இருப்பதன்
மூலம் சாதகமற்ற பலன்களை நல்லவைகளாக மாற்றிக் கொள்ளும் வருடம் இது.
No comments :
Post a Comment