மகரம்:
யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலைமையில் இருப்பது மகர ராசிக்கு பொருளாதார
நிலைமைகளை மேம்படுத்தும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் எதிர்பார்த்த பணவரவு
தடையின்றி கிடைக்கின்ற மாதமாக இருக்கும். பனிரெண்டாம் இடமான விரைய ஸ்தானத்தில்
பாபக் கிரகங்களான செவ்வாய், சனி இணைவது தூர இடங்களில் உங்களை அலைய வைக்கும்
ஒரு அமைப்பு என்பதால் வெளிநாடு வெளிமாநில விஷயங்களில் சாதகமற்றவைகள் இப்போது
மகர ராசிக்கு நடக்கும். குறிப்பாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி
முன்கூட்டியே பணம் கேட்பவர்களை எக்காரணத்தை கொண்டும் நம்ப வேண்டாம்.
இந்த மாதம் ராசிநாதன் சனியுடன் செவ்வாய் இணைவது உங்களை கோபப்படுத்தி எரிச்சல்
ஊட்டும் சம்பவங்களை நடக்க வைக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை
கடைப்பிடியுங்கள். ராசிநாதன் பாபத்துவம் பெறுவதால் எதையும் சற்று சங்கடமாக
நீங்கள் எதிர்கொள்ளும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில் பிற்பகுதி
மாதத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடுத்தவரின் உதவி இன்றி உங்களின்
காரியங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக
ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம்
கிடைக்கும். விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற
துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். அலுவலகத்தில் வீண்
பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம்.
பனிரெண்டாம் இடம் பாபவலுப் பெறுவதால் வீண்செலவுகள் இருக்கும் மாதமாக மார்ச்
மாதம் அமையும். அதேநேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும் வருமானங்களும்
நிச்சயமாக கிடைக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை,
தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. கணவன், மனைவி உறவு
அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு
லாபம் உண்டு.
2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில்
1-ம்தேதி அதிகாலை 1.44 முதல் 3-ம்தேதி அதிகாலை 3.47 வரையும், மாதக் கடைசியில்
28-ம் தேதி காலை 10.01 மணி முதல் 30-ம்தேதி மதியம் 1.11 மணி வரையும்
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் வெகுதூர பிரயாணங்களை தள்ளி
வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய
வேண்டாம்.
No comments :
Post a Comment