கும்பம்:
யோகாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உச்சமாக இருக்கின்ற நல்ல மாதம் இது.
கும்பராசிக்கு சமீபகாலங்களில் கோட்சாரநிலையில் நல்ல கிரக அமைப்புகளே
இருக்கின்றன. குறிப்பாக மாதத்தின் பிற்பகுதியில் பதினொன்றாம் இடத்தில்
செவ்வாய் சனி இணைவது கும்பத்திற்கு எதிலும் வெற்றியை கொடுக்கின்ற அமைப்பு
என்பதால் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு போதுமான பலன் இறைவனின் அருளால்
கிடைக்கும் மாதம் இது. பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் இதுவரை அவரவர்
வயதிற்கேற்ற வகையில் கிடைக்காத நன்மைகள் இந்த மாதம் கிடைக்கும்.
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதும், இன்னொரு
இயற்கை சுபரான குருபகவானுடன் அவர் பரிவர்த்தனை அடைவதும் நல்லவைகள் நடக்கும்
அமைப்புகள் என்பதால் இந்த மாதம் கும்ப ராசிக்கு குறைகள் சொல்ல எதுவும் இல்லை.
மாத ஆரம்பத்தை விட மாதத்தின் பிற்பகுதி நன்மைகளைத் தரும். சனிபகவான் லாப
வீட்டில் இருப்பது எதையும் சமாளிக்கும் ஆற்றலையும், திறமையையும் உங்களுக்கு
தரும் என்பதால் இந்த மாதம் சங்கடங்கள் இல்லாத மாதமாக இருக்கும். சிலருக்கு
இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். எதிர்மறை பலன்கள் இருக்காது.
நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போது ஆரம்பிக்கத்
துவங்கும்.
பனிரெண்டில் கேது இருப்பதால் சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு
கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
சிவத்தொண்டு செய்வீர்கள். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத்
துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நல்ல வேலை கிடைக்காத
இளையபருவத்தினர் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள
உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு நல்ல
முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் சுபச்செலவுகளோ, வீட்டில் விஷேசங்களோ
இருக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி அதிகாலை 3.47
மணி முதல் 5-ம் தேதி காலை 8.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில்
கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.
No comments :
Post a Comment