Friday, March 2, 2018

துலாம்: 2018 மார்ச் மாத பலன்கள்

துலாம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலைமையில் இருப்பது துலாம் ராசிக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய ஒரு அமைப்பு. அதே நேரத்தில் அவர் ஆறாமிடத்தில் அமர்வதும், பாக்கியாதிபதி புதன் அங்கே நீசமாக இருப்பதும் யோகத்தை முழுமையாக அனுபவிக்க இயலாத நிலை என்பதால் துலாம் ராசிக்காரர்கள் கடும் முயற்சிக்கு பின்பு வெற்றிகளை அடைகின்ற மாதமாக மார்ச் மாதம் இருக்கும். மூன்றாமிடத்தில் பாபக் கிரகங்களான செவ்வாய், சனி இணைவது விடாமுயற்சியுடன் நீங்கள் செய்யும் செயல்களுக்கு உறுதியான பலன் கிடைக்கும் என்பதால் முயற்சியின் மூலம் லாபம் கிடைக்கின்ற மாதம் இது.

மனம் உற்சாகமாக இருக்கும். முகத்தில் புன்னகை தவழ காட்சி தருவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வத்தின் துணை கொண்டு எதையும் சாதிப்பீர்கள். தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் வலுப்பெறுவதால் மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும்.

ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் வலுப் பெறுவதும், யோகாதிபதியான சனி மூன்றில் இருப்பதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இதுவரை சிக்கலைத் தந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். பணவரவு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழி வகுக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி அதிகாலை 12.48 மணி முதல் 24-ந்தேதி அதிகாலை 4.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.

No comments :

Post a Comment