Friday, March 2, 2018

கன்னி: 2018 மார்ச் மாத பலன்கள்

கன்னி:

ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோக அமைப்பில் ஏழாமிடத்தில் இருப்பதும், ராசியை உச்ச சுக்கிரன் பார்ப்பதும் கன்னியின் கனவுகளை நனவாக்கும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் கன்னிக்கு ஆனந்த மாதமாக இருக்கும். ராசிநாதன் நீசமாகி பின் வலுப் பெறுவதால் மாதத்தின் முதல் 15 நாட்கள் அனைத்து விஷயங்களும் மெதுவாக நகர்வது போலவும், நடக்காது போலவும் தோன்றினாலும், மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் செயல்கள் அனைத்திற்கும் பலன்கள் உண்டு என்பது உறுதி.

மாதம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் உச்சத்தில் இருக்கும் நல்ல மாதம் இது. இயற்கைச் சுபரான குரு பணவரவைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் இருப்பதால் உங்களின் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை வாய்ப்பு, புத்திர பாக்கியம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் மாதம் இது. பதினொன்றில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக இப்போது செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.

யோகக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதால் ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசுத்துறையினருக்கு இந்த மாதம் நல்லபலன்கள் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். கோட்சார அமைப்புப்படி யோக காலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி இரவு 8.08 மணி முதல் 22-ம்தேதி அதிகாலை 12.48 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment