(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்
மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல்
எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த துன்பங்களை நீக்கி மனதில்
இருக்கும் சுமையையும், பாரத்தையும் இறக்கி வைக்கும் புத்தாண்டாக இந்த தமிழ்
புது வருடம் இருக்கும் என்பது நிச்சயம். சில மாதங்களுக்கு முன்பு வரை
உங்களுக்கு நடந்த ஜென்மச்சனியினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு
துன்பங்களை முழுமையாக தீர்க்கும் ஆண்டாக விளம்பி வருடம் இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் வருடம் இது. அவரவர்
வயது, தகுதி, இருப்பிடம், மனநிலை போன்றவைகளுக்கேற்ப உங்களுக்கு நடந்த மன
அழுத்தம் தரும் விஷயங்களில் இருந்து இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல்
விடுபடுவீர்கள்.
ஏற்கனவே உங்களில் சிலருக்கு விடியலின் பாதை தெரிய ஆரம்பித்து விட்டது. சிலர்
அந்த வெளிச்சப் பாதையில் பயணிக்கவும் தொடங்கி விட்டீர்கள். பாதை தெரியாத
இன்னும் சிலருக்கு வழிகாட்டும் வருடமாக விளம்பி வருடம் இருக்கும்.
சென்ற காலங்களில் இருந்த சரியில்லாத கோட்சார நிலையினால் உங்களுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவங்களும், வாழ்க்கைச் சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப்
பிரச்னைகளும் வம்பு வழக்கு கோர்ட் பிரச்னைகளும் முழுமையாக விலகி இனி நன்மைகள்
நடக்கப் போகிறது.
இந்த புது வருடம் முதல் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். இனிமேல்
உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள்.
நாளைக்குப் பார்க்கலாம் என்ற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள்
பயந்து கொண்டிருந்த செயல்கள் அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.
இளைஞர்களுக்கு வழிபிறக்கும் அதேநேரத்தில் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் பற்றிய
கவலைகள் தீரும் வருடமாக இது அமையும். மகனுக்கு இதுவரை நல்ல வேலை
கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது. மகளுக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும்
விருச்சிக ராசி பெற்றோர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின்
வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.
மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு
அவர்கள் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில்
இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில்
இருந்த தொகையோடு சேர்த்து கைக்கு வரும்.
சுயதொழில் செய்வர்கள் தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு
நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. தொழிலில் சிக்கல்களை சந்தித்துக்
கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக்
காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள்
உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.
விவசாயிகளுக்கும், கலைத்துறையினருக்கும் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த
முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும். பொது
வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக்கூடிய காலமாக
அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.
சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த விருச்சிக
ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம்
நிரந்தர வருமானம் வரும். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும்.
இதுவரை சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும்
சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும்.
சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை
மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும்
அமையும். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை
விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு
படிப்பவர்களுக்கும் ஏற்கனவே அரசு வேலைக்கு தேர்வெழுதி முடிவுகளுக்கு காத்துக்
கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில
வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.
வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு கட்டிய வீடோ,
காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம்
வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை
இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது
வாங்க முடியும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்
தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே
ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில்
மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப
சுபச்செலவுகளும் இருக்கும்.
நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா
போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம்
கிடைக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக
குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை
உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.
குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு
சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குருபலம் வந்து விட்டதால் இந்த
வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு
பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க
ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு தற்போது நல்ல முறையில்
குழந்தை பிறக்கும்.
பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். உங்களின் மதிப்பு
உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு
செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள்
விலகும். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த
வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.
மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும் ஆண்டாக இது
அமையும்.
No comments :
Post a Comment