(மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை
பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும்
காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம்
காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில்
உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில்
உதைத்து வெளியே தள்ளும்.
அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும்
சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும்.
அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.
எனவே தனுசுவினர் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு
மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு கசப்புடன்
நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு
அதற்குத் தயாராகுங்கள்.
தனுசுராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பது
வயதை தாண்டியவர்களுக்கு சனியின் பாதிப்புகள் எதுவும் நிச்சயமாக இருக்காது.
அவர்களுக்கு இது பொங்கு சனியாக நன்மைகளைத் தரும் விதத்தில் அமையும் ஆனால்
எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு இப்போது
வாழ்க்கையைப் புரிய வைக்கும் விதமாக சொந்த வாழ்க்கையிலும் வேலை விஷயத்திலும்
மனஅழுத்தம் தருபவை நடந்து கொண்டிருக்கின்றன.
பணம் என்றால் என்னவென்று இளைய பருவத்தினர் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை
இப்போது சனி செய்து கொண்டிருக்கிறார். அதேபோல உணமையான உறவுகளையும், கஷ்டத்தில்
கை கொடுக்கக்கூடிய நட்புகளையும் சனி இப்போது அடையாளம் காட்டுவார்.
தமிழ்ப் புது வருடமான விளம்பி ஆண்டின் சிறப்பு பலனாக இளைய பருவத்தினருக்கு
சொல்ல வேண்டியது என்னெவென்றால் காதல் என்பதை சற்றுத் தள்ளி வையுங்கள். ஆனால்
நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். இப்போது காதல் வந்தே தீரும். பின்னாலேயே
அதனால் கடுமையான மன அழுத்தம் வரும்.
இந்த தமிழ்ப் புத்தாண்டின் பிற்பகுதியில் இருந்து நீங்கள் எதிலும் அகலக்கால்
வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். புதிதாக
எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன
செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால்
மட்டும் போதும்.
இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி 1 லட்சம் போட்டால் 10
லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம்
என்றோ சில தூண்டில்களை போட்டு தொழில் ஆரம்பிக்க வைத்து உங்களை ஏதேனும் ஒரு
விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார். பிறகு அதனை நடத்தவும்
முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார்
என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு
தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம்,
தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும்
உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். இளைய பருவத்தினருக்கு
வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்யக் கூடிய
அமைப்புகள் உருவாகும்.
அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு
ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது
விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
அதிகாரியைப் பற்றிய விமர்சனங்களும் வேண்டாம்.
வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும்.
வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய
தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை
செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில்
தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி
பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள்
இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வரும் என்பதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும்
கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.
அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது
ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே
வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம்.
ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இப்போது
இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஞாபகமறதி
வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது.
வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ
கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப
வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள்
கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது.
குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்கள்,
தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும்.
மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி
வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன்
கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து
கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள்
செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு
சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி
புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத்
துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும்
முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம்
மாறுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள்
இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் விளம்பி
வருடத்தில் புதிய தொழில் முயற்சிகள் எதையும் செய்யாமல் எதிலும் நிதானத்துடன்
இருப்பது நல்லது.
No comments :
Post a Comment