Thursday, March 29, 2018

துலாம்: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


(சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும்.
மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் நிலையான மூன்றாமிடத்தில் சனி இருப்பது துலாத்திற்கு மிகவும் மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிலையான வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் முதல் ஆரம்பிக்கும்.

இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இருந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் புத்தாண்டு முதல் விலக துவங்கும். வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். பிறக்க இருக்கும் விளம்பி வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே துலாத்தினர் பெறுவீர்கள் என்பது உறுதி.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வரும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலி மனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்.

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கசப்பான அனுபவங்கள் நீங்கி இனிமேல் வாழ்க்கை சரியான பாதையில் போகத் துவங்கும்.

அதிர்ஷ்டம் இனிமேல் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் ஏதேனும் ஒரு வழியில் சேமிப்புகள் செய்ய முடியும். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மொத்தத்தில் நல்ல விஷயங்களைத் தரும் தமிழ்ப் புது வருடம் இது என்பதால் துலாம் ராசியினர் எதிலும் துணிந்து இறங்கி வெற்றி காண்பீர்கள்.

No comments :

Post a Comment