Saturday, August 19, 2017

RISHABAM : 2017 – GURU PEYARCHI – ரிஷபம் : 2017 குருப்பெயர்ச்சிப் பலன்கள்

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இதுவரை நல்ல அமைப்பு என்று சொல்லக்கூடிய ஐந்தாமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது சாதகமற்ற இடம் என்று சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு மாறுகிறார்.

குருபகவான் ஆறாமிடத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்காது என்று பொதுப் பலனாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் சுக்கிரனின் இன்னொரு வீட்டில் குரு அமருவதால் மிகப் பெரிய கெடுபலன்கள் எதையும் அவர் தந்து விடப் போவது இல்லை.

இன்னுமொரு முக்கிய பலனாக குருப்பெயர்ச்சிக்கு அடுத்த சிலவாரங்களில் வரும் அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினுள் நுழைகிறீர்கள். ஆகவே ஒரே நேரத்தில் இரண்டு வருடப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு ஆறு, எட்டு என அமைகின்றன.

மேம்போக்காகப் பார்த்தால் இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே ரிஷபத்திற்கு கெடுதல் செய்யும் அமைப்பாகத் தெரியும். ஆனால் ஒரு ராசிநாதனின் இன்னொரு வீட்டில் அமரும் கிரகம் அந்த ராசிக்கு எப்போதுமே கெடுதல் செய்வதில்லை. அதன்படி ஆறாமிடத்துக் குருவால் பெரிய தொந்தரவுகள் எதுவும் உங்களுக்கு இருக்காது.

அதேபோல சனிபகவானே ரிஷபராசிக்கு ராஜ யோகாதிபதி எனும் அந்தஸ்தைப் பெறுகிறார், அவரே உங்கள் ராசிக்கு அனைத்து பாக்கியங்களையும் கொடுக்கக் கடமைப் பட்டவர், எனவே மற்ற ராசிகளுக்குத் தரும் கஷ்டங்களைப் போல ரிஷபத்திற்கு சனிபகவான் ஒருபோதும் துன்பங்களைத் தருவதில்லை.

நமக்கு விருப்பமானவர்களுக்கு நாம் எப்போதும் மனமார தொல்லைகளைக் கொடுக்க மாட்டோம் இல்லையா? எனவே மற்ற ராசிகளுக்கு நடக்கும் கடுமையான கெடுபலன்கள் அஷ்டமச் சனியில் ரிஷபத்திற்கு இருக்கவே இருக்காது.

ஆனாலும், கெட்டவைகள் நடக்காது என்று உறுதியாகத் தெரிந்தாலும் நம்மை நாமே தற்காத்துக் கொள்வதுதான் ஒரு அறிவு சார்ந்து சிந்திப்பவரின் கடமை. எனவே ரிஷப ராசிக்காரர்கள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது.

அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ, வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ இப்போது வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

முதலீடின்றி தனது திறமையை மூலதனமாக வைத்து சொந்தத் தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுய தொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் வராது. இந்தப் பிரிவினருக்கு நெருக்கடிகள் இருக்குமே தவிர நஷ்டங்கள், கஷ்டங்கள் எதுவும் இருக்காது.

அரசு, தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சிலருக்கு வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தூர இடங்களுக்குச் செல்லும்படி இருக்கும். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்துடன் செய்ய வேண்டும்.

குருபகவான் ஆறாமிடத்தில் வலுப் பெறுவதால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆக வேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக் கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆனால் அந்தக் கடனைக் கட்ட முடியாமல் சிக்கல்கள் வரும். எனவே கடன் வாங்குவதில் உஷாராக இருங்கள்.

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். இதிலும் ஒரு நல்ல பலனாக சிலருக்கு நீண்டகால வீட்டுக் கடன் அமைந்து கடனாளி ஆகி நல்ல வீடு அமையும் யோகத்தையும் குருபகவான் தருவார்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டு பிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக் குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வலுப்படுத்துவார் என்பதால் இந்த முறை அவர் பார்க்கும் இடங்களான உங்கள் ராசிக்கு பத்து பனிரெண்டு மற்றும் இரண்டு ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

குருவின் பார்வை பனிரெண்டாமிடத்தில் விழுவதால் வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பு கொண்ட தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். வயதான சிலர் மகன் மகள் அழைப்பின் பேரில் வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

குருவின் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் விழுவதால் என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணக் கஷ்டம் இருக்காது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது.

திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, குழந்தைகளுக்கு காது குத்துதல் போன்ற சுப காரியங்கள் இருக்கும். குடும்பத்துடன் தெய்வீகச் சுற்றுலா நவக்கிரக யாத்திரை போன்றவை மேற்கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

இளைய பருவத்தினர் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் காதல் போன்ற விஷயங்கள் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் ஆறாமிடக் குரு, அஷ்டமச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும்.

என்ன பிரச்சினை என்றாலும் அவை அனைத்தும் சில மாதங்கள் மட்டும்தான் என்பதை உணர்ந்து கொண்டு தக்க பரிகாரங்கள் செய்து இறைவனை வேண்டினால் ஒரு குறையும் ரிஷப ராசிக்கு வராது என்பது நிச்சயம். பொதுவாக சுமாரான பலன்கள்தான் இப்போது நடக்கும் என்றாலும் உங்களைக் காக்கும் தெய்வத்தின் அருளினால் அனைத்தையும் சுலபமாக நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

பரிகாரங்கள்:

அஷ்டமச் சனி ஆரம்பிப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.

No comments :

Post a Comment