Saturday, August 19, 2017

MITHUNAM : 2017 – GURU PEYARCHI – மிதுனம் : 2017 குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சாதகமற்ற நிலையில் இருந்து வந்த குருபகவான் இப்போது மிகவும் முன்னேற்றமான நல்ல பலன்களை தரக் கூடிய ஐந்தாமிடத்திற்கு மாறி உங்களுக்கு அளவற்ற சந்தோஷங்களை தரப் போகிறார்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். குருபகவான் ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். வேலை செய்யும் இடத்தில் அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டமாக அமையும். எல்லா விதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு இது நல்ல நேரம். அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் நல்லபடியாக அனைத்தையும் கிளியர் செய்வீர்கள்.

பேசக் கூடிய மற்றும் சொல்லித் தரக் கூடிய தொழில்களில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் இருக்கும். அதாவது மார்க்கட்டிங், ஆசிரியர் பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு செழிப்பான காலகட்டமாக இருக்கும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு ஏமாற்றங்கள் விலகி பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே அரசு, வங்கி போன்ற தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. 

நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.

மிதுன ராசிப் பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் எனபது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும்.

குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.

இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர் உங்களை சரண் அடைவர்.

ஐந்தாமிடக் குருவினால் குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

இதுவரை இருந்துவந்த வீண் செலவுகளும் விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் குறிப்பிடத் தக்க அளவில் பண வரவும் லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும். பங்குச்சந்தை யூகவணிகம் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும்.

குருவின் ஒன்பதாமிடத்து பார்வை மூலம் பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு உயர்நிலை நட்பு கிடைக்கும் அதிகாரமிக்க பதவிகள் உண்டு. அரசியலில் ஏற்றங்கள் வரும். இப்போது கிடைக்கும் தொடர்புகள் மூலம் வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும்.

சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.

குருவின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப் புழக்கம் இருக்கும்.

சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன், அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

பரிகாரங்கள்:

குருபகவானின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவினைத் தந்து அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

No comments :

Post a Comment