Saturday, August 19, 2017

MESHAM : 2017 – GURU PEYARCHI – மேஷம்: 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மேஷம்:

மேஷ ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் மறைந்திருந்த குருபகவான் தற்போது ஏழாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்வையிட்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களையும், தன லாபங்களையும் அளிக்கப் போகிறார். இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மேன்மைகளைத் தரும் ஒன்றாக இருக்கும்.

இதுவரை ஆறாமிடத்தில் இருந்து வந்த குருவால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன. தற்போது ஏழாமிடத்திற்கு மாறும் குருபகவான் உங்கள் ராசியை பார்த்து உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தையும் உன்னதமாகுவார் என்பது ஜோதிட விதி.

இயற்கைச் சுபக் கிரகமும் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் அள்ளித் தருபவருமான குருபகவான் இம்முறை உங்கள் ராசியை பார்க்கப் போவதால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.

கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் எதுவும் இனிமேல் உங்களிடம் இருக்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்த பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு உயரும். அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நன்மை தரும் கிரகங்கள் தற்போது சாதகமான நிலையில் உள்ளதால் நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும். பிறந்த ஜாதகத்தில் யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்ல முடியும்.

மேஷத்திற்கு குறிப்பிட்டுச் சொல்லும் இன்னொரு பலனாக கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. எட்டில் இருந்த சனி மேஷத்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள், அலுவலகத்தில் சாதகமற்ற சூழல், கடன், பிரிவு, இழப்பு, வழக்கு, நெருங்கிய உறவினர் மரணம் போன்ற கெடுபலன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

குறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் மேஷராசி இளைஞர்களுக்கு சனியின் ஆதிக்கத்தினால் இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நல்ல தொழில், நல்ல வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த இரண்டு வருடங்களாக சனி தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

குருப்பெயர்ச்சிக்கு அடுத்த சில வாரங்களில் அக்டோபர் மாதம் 26 ம் தேதியன்று நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் நீங்கள் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருந்தும் வெளியே வருகிறீர்கள் என்பதால், தற்போதைய கிரக நிலைகள் மூலம் நல்ல நன்மைகளை அடையப் போகும் ராசிகளில் மேஷமும் முதன்மையானது.

குருபகவான் மேஷ ராசிக்கு பாக்யாதிபதி எனும் யோகர் என்பதால் கோட்சார ரீதியாக குரு வலுப்பெற்று நல்ல நிலைகளில் வரும் போதெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். எனவே இதுவரை அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லாவற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.
தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலைமைகள் இப்போது முன்னேற்றமாக இருக்கும்.

மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.

ஏழில் அமரப் போகும் குரு உங்கள் ராசியைப் பார்த்து புனிதப் படுத்துவதைப் போல பதினொன்று மற்றும் மூன்றாம் இடங்களையும் தனது சுபப் பார்வையால் பார்ப்பதால் அந்த இடங்களும் வலுப் பெறுகின்றன.

குருபகவானின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

இதுவரை நஷ்டத்தைத் தந்த பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

விடாமுயற்சி மற்றும் புகழுக்குரிய ஸ்தானமான மூன்றாமிடத்தை குரு பகவான் பார்ப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

சகாயஸ்தானம் எனப்படும் மூன்றாமிடம் வலுப்பெறுவதால் அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள். மூன்றாமிடம் கழுத்து ஆபரணத்தை குறிப்பதால் ஒரு சிலர் மதிப்பு மிக்க நகை வாங்கி மனைவிக்கு பரிசளிப்பீர்கள்.

மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்புமுனையான குருப் பெயர்ச்சியாக இது அமையும் என்பதால் இனி அனைத்தும் உங்களுக்கு சுகம்தான்.

பரிகாரம் :

குருபகவானின் நன்மைகளை கூடுதலாகப் பெற வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள். குருபகவான் உங்கள் பாக்கியாதிபதி என்பதால் சகல பாக்கியங்களையும் அள்ளித் தருவார்.

No comments :

Post a Comment