கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது
இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு
என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள்
நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
இதுவரை ஜென்ம ராசியில் இருந்து அனைத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டு இருந்த
குரு, தன ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு மாறி உங்களுக்கு சிறப்பான பலன்களையும்,
நல்ல பணவரவையும் தரப் போகிறார்.
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும்
மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும்.
தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்
பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம்
இருக்கும்.
இரண்டாமிடத்திற்கு வரும் குருவால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் பண
வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.
குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள்
சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம்
தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று
பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.
வருடக் கிரகங்களான ராகுவும், குருவும் தற்போது கன்னி ராசிக்கு மிகவும் சாதகமான
நிலையில் இருப்பதால் கன்னியினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை
விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி
நிச்சயம்.
கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல புத்திசாலிகள் என்பதாலும், உருவாக்கும்
வேலை எனப்படும் கிரியேட்டிவ் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக்
கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும்
இந்த மாற்றத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.
பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது
இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ்
அடைவீர்கள்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய
பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம்
கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை
இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு
குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில்
நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம்,
பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது
வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.
வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக
மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த
பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல்
சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி
இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு
போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள்
பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான
நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி
சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.
அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி
அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருபகவானின் சிறப்புப் பார்வை
உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும்
பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.
அதேநேரத்தில் கூடுதலாக ஒரு சிறப்புப் பலனாக இந்தக் குருப்பெயர்ச்சிக்கு அடுத்த
சிலவாரங்களில் அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று நடக்கவிருக்கும்
சனிப்பெயர்ச்சியின் மூலம் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்திற்கு மாறுகிறார்.
சில நிலைகளில் இது தொழில் அமைப்புகளில் சிக்கலைத் தரும்.
எனவே சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக்
கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம்.
வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக
விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பக் கூடாது. எந்த ஒரு
விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.
யூக வணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க்
எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம்
வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த
பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில்
குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும்
விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க
ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ
பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும்
முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை
முயற்சிகளை இப்போது செய்யலாம்.
தனம், வாக்கு குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் குருபகவான் இருக்கப்
போவதால் மிதுன ராசிப் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும்
கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும்.
வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள்
இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின்
ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில்
நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல்
பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு
கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும்
புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச்
சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள்
உதவுவார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ
வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள்
நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு
படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக்
கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில
வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
இரண்டில் அமரும் குருபகவான் தனது சுபப் பார்வையால் உங்கள் ராசிக்கு ஆறு எட்டு
பத்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஒரு சுபகிரகம் வலுவடைந்து பார்க்கும்
பாவங்கள் வலுப்பெறும் என்ற ஜோதிட விதிப்படி குருவின் பார்வையால் உங்கள்
ராசியின் ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுவடையும். இது நல்ல நிலை அல்ல.
ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய விஷயங்களை சுட்டிக் காட்டும்
பாவமாகும். குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ,
அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம்.
கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு
கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் அவசியமற்ற
ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.
உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப்
பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை,
ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில்
அக்கறை காட்டுங்கள்.
குருவின் ஆறாமிடப் பார்வை நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் எச்சரிக்கை
அவசியம். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு
விடும். கோர்ட், கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும்
சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அனைத்திலும் கவனம் தேவை.
குருவின் எட்டாமிடத்துப் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம் புதையல், லாட்டரி போல
முற்றிலும் எதிர்பார்க்காத பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக
பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று
முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான
அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள்
வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.
பரிகாரங்கள்:
குரு தரும் நன்மைகளை முழுமையாகப் பெற புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான
ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு
மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான
உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை
தரும்.
No comments :
Post a Comment