Friday, July 21, 2017

DANUSU : 2017 - RAHU KETHU PEYARCHI தனுசு: 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

தனுசு:

தனுசு ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்த ராகுபகவான் இப்போது எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம ராகுவாக மாற்றம் பெறுகிறார். அதேபோல இதுவரை மூன்றாமிடத்தில் இருந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருந்த கேதுபகவானும் சாதகமற்ற இரண்டாமிடத்திற்கு மாறுகிறார்.

இந்த இரண்டு மாற்றங்களும் உங்களுக்கு நல்ல நிலை என்று சொல்ல முடியாது. ஆனாலும் ராகு பகவான் அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடான கடக வீட்டில் இருப்பதால் கெடுதல்கள் எதையும் உங்களுக்கு தருவதற்கு வாய்ப்பில்லை.

அதேபோல கேதுவும் சர வீடான மகரத்தில் அமர்வதால் சுபத்துவமும், சூட்சும வலுவும் அடைந்து கெடுபலன்களைத் தராமல் இரண்டாமிடத்தின் தனம், வாக்கு ஆகிய நல்ல பலன்களை மட்டுமே உங்களுக்கு தருவார். சிலருக்கு தொழில் ரீதியிலான பிரச்னைகள் இருந்தாலும் இரண்டாமிடமான தன ஸ்தானம் வலுப் பெறுவதால் பணக் கஷ்டம் இருக்காது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் உங்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் பெரிய தொல்லைகள் எதுவும் வராது.

இன்னொரு நிலையாக ராகுகேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதனான குருபகவான் இதுவரை இருந்து வந்த சாதகமற்ற இடமான பத்தாம் வீட்டில் இருந்து மாறி மிகவும் யோகத்தையும் தன லாபத்தையும் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார். இது கோட்சார ரீதியில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும் அமைப்பு. எனவே ராகு கேதுக்களால் வரும் சாதகமற்ற பலன்களை குருபகவான் நீக்கி அருள்வார்.

அதே நேரத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் ஜென்மச் சனியாக மாறுகிறார் என்பதால் வேலை, தொழில் விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

ராகு மாறுகின்ற எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும் இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்ட லாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி ராகு மோசம் போகச் செய்வார்.

எனவே இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தின் முழுமையான ஒன்றரை வருட காலத்திற்கும் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிக வட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதன் மூலம் எட்டாமிடத்து ராகு நிச்சயம் ஏமாற்றங்களைத் தருவார்.

ஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால் லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்று அதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில் மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது.

பேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டம ராகு என்பதால் இந்த ராகுகேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல் விழிப்புடன் இருங்கள்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

சொந்த த்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தப் பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

எட்டாமிடம் ராகுவால் ஆக்கிரமிக்கப் படுவதால் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மந்தநிலை இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பே காரியங்கள் நடக்கும். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது. எவரையும் நம்ப வேண்டாம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது. எனவே எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இப்போது இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் ராகுப்பெயர்ச்சியால் இருக்கும்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களின் நட்சத்திரநாதன் கேது சுப வலிமையுடன் இருப்பதால் உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள் இருக்கும். சிலருக்கு மிகையான ஆன்மிக நாட்டம், ஞானிகள் தரிசனம், இதுவரை செல்லாத திருத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம், புதிய வாகன யோகம், எதிலும் லாபம், மூத்தசகோதர நன்மை போன்றவைகள் உண்டாகும். ஏதேனும் ஒரு வகையில் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்தநிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமான திருப்பங்கள் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

ராகுபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கும் இறுதிப் பகுதி உங்களுக்கு மேன்மையைத் தரும். ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். எட்டாம் வீட்டின் நல்ல விஷயங்களான வெளிநாட்டுத் தொடர்பு, வேற்று நாட்டுக் குடிமகன் ஆகுதல், வெளிதேச வாசம், சயனசுகம், தாராளமாக செலவு செய்யும் அளவுக்கு வருமானம், அடிக்கடி பிரயாணம் போன்ற பலன்கள் உங்களுக்கு இப்போது நடக்கும்.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.

No comments :

Post a Comment