Saturday, March 25, 2017

மீனம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதே நேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை.

வருடத்தின் ஆரம்பத்தில் ஜூலை மாதம் 18-ந்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகுபகவான் தற்போது இருக்கும் சாதகமான இடமான ஆறாமிடத்தில் இருந்து நிதானமான பலன்களை தரக்கூடிய 5-ம் இடத்திற்கு மாறுகிறார்.

ராகு சாதகமற்ற இடத்திற்கு மாறுவதாக தோன்றினாலும் அவரது எதிர்முனை கிரகமான கேது மிகவும் நன்மைகளை தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுவது மீனராசிக்கு நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு என்பதால் இந்த வருட ஆரம்பமே மீன ராசிக்கு சந்தோஷங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ராகு-கேதுக்கள் இருவருக்கும் கடக, மகர வீடுகள் நல்லவைகளை தருகின்ற வீடுகள் என்பதாலும் வருடத்தின் ஆரம்பத்தில் மீனராசிக்கு நல்லவைகள் நடக்கின்ற ஒரு வருடமாகவே இந்த வருடம் ஆரம்பமாகிறது.

ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் இதுவரை மீனராசிக்காரர்களுக்கு தடங்கலாக இருந்து வந்த தொழில்முயற்சிகள், அலுவலக பின்னடைவுகள், வேலையில் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். பணிபுரியும் இடங்களில் இருந்து வந்த நிச்சயமற்ற நிலை, மறைமுக எதிர்ப்புகள், கூடவே இருந்து குழிபறிக்கும் தன்மை, பொறாமை, கண்திருஷ்டி போன்றவைகளும் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இனிமேல் நிம்மதியான சூழல்கள் உருவாகும். சிலருக்கு பணி நிரந்தரமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு உதவிகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஆர்டர்களும் இனிமேல் கிடைக்கும். இதுவரை நடக்காமல் இருந்த தொழில் விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகள் இனி நல்லபடியாக நடக்கும்.

செப்டம்பர் மாதம் 12-ம்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியினால் உங்கள் ராசிநாதனான குருபகவான் இதுவரை நல்லபலன்களை கொடுத்து கொண்டிருக்கும் ஏழாமிடத்தில் இருந்து நற்பலன்களை கொடுக்க இயலாத எட்டாமிடத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் தற்போதிருக்கும் நிலைகளில் மீனத்தினர் சிலருக்கு மாற்றங்கள் உருவாகும். எனவே அனைத்து விஷயங்களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடக்க வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை, மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

எட்டாமிடம் என்பது வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகளைக் குறிப்பது என்பதாலும் குருபகவான் மாற இருக்கின்ற துலாம் வீடானது சர ராசி எனப்படும் தூர இடங்களை குறிக்கின்ற ராசி என்பதாலும் இதுவரை வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் தடைகள் நீங்கி வெளிநாடு செல்வீர்கள்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்கவோ, கல்லூரி படிப்பிற்காகவோ வெளிமாநிலம் செல்லும் பலன்கள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்கள், வேலைவிஷயமாக தூரஇடங்களுக்கு பயணம் செல்பவர்கள், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அமைப்புகளில் வேலை செய்பவர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும்.

அக்டோபர் மாதம் 26-ம்தேதி நடக்க இருக்கின்ற சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தற்போது அமர்ந்திருக்கும் சாதகமற்ற இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய பத்தாமிடத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சி மீனராசிக்கு ஏற்கனெவே இருந்ததை விட நல்ல பலன்களை கொடுக்க கூடிய இடம் என்பதால் சனிபெயர்ச்சியின் மூலம் மீனத்திற்கு கூடுதலான நல்ல பலன்கள் கிடைக்கும்.

பாவ கிரகமான சனிபகவான் திரிகோண வீட்டில் இருந்து கேந்திர வீடான பத்தாம் இடத்திற்கு மாறுவது நல்ல அமைப்பு என்பதால் இதுவரை வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறாமல் தடைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் அனைத்திலும் நன்மைகள் நடக்கும்.

வேலை, தொழில் அமைப்புகளில் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

அரசு தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இந்த வருடம் கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். கையை மீறிப்போகும் அளவிற்கு கெடுதலான விஷயங்கள் எதுவும் ஒருபோதும் நடக்காது.

எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் மீனராசிக்கு நற்பலன்களை மட்டுமே கூடுதலாகத் தரும் என்பதால் இந்தப் புத்தாண்டை மீனராசிக்காரர்கள் மனதார வரவேற்பீர்கள்.

No comments :

Post a Comment