Wednesday, March 1, 2017

ரிஷபம் : 2017 மார்ச் மாத பலன்கள்

ரிஷபம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் உச்சத்தில் இருக்கும் நல்ல மாதம் இது. ராசிநாதன் சுக்கிரனும், ராசியும் சுபத்துவ அமைப்பில் உள்ள குருவின் பார்வையில் இருப்பதால் ரிஷபத்திற்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் அனைத்து தேவைகளும் நிறைவேறும் மாதமாக இது இருக்கும். குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, புத்திர பாக்கியம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் மாதம் இது.

மாதம் முழுவதும் இயற்கைச் சுபரான சுக்கிரன் உச்சநிலை இருப்பது இப்போது உங்களின் அந்தஸ்து, கவுரவம் உயர்வது போன்ற நிகழ்ச்சிகளும், பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும்.

கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். ராசினாதனே ஆறுக்கும் அதிபதியாகி ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

5,6,7,8,11,13,18,19,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி காலை 9 மணி முதல் 22-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் இந்த நாட்களில் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

No comments :

Post a Comment