மிதுனம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் ஒன்பதாமிடமான திரிகோணத்தில் கேது, சூரியனுடன்
இணைந்திருப்பதும் மாத பிற்பகுதியில் குருவின் பார்வையில் இருப்பதும் இந்தமாதம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகவும், கோவில் திருப்பணி
செய்யும் அமைப்புகளும் உள்ள மாதமாக இருக்கும். தெய்வத்தின் துணை கொண்டு மிதுன
ராசிக்காரர்கள் எதையும் சாதிக்கும் மாதம் இது.
தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் வலுப்பெறுவதால் இதுவரை மந்தமாக இருந்து வந்த
தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும்.
கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய
ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும்
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு
இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல
மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி
மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.
மனம் உற்சாகமாக இருக்கும். முகத்தில் எந்த நேரமும் புன்னகை தவழ காட்சி
தருவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத்
தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும்.
நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது
வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.
கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர்,
கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு
முனையாக அமையும்.
1,2,3,4,8,9,10,11,17,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 9 மணி
முதல் 25-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர
பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்க வேண்டிய
சுப காரியங்களுக்கான ஆரம்பங்களை கூட இந்த நாட்களில் செய்யக்கூடாது.
No comments :
Post a Comment