Thursday, December 22, 2016

கும்பம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கும்பம்:

கும்பத்திற்கு அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். குறிப்பாக இந்த வருடம் நடக்க இருக்கும் மூன்று கிரகப் பெயர்ச்சிகளின் மூலம் ஆனந்தத்தையும், லாபத்தையும் பெறப்போகும் ராசிகளில் கும்பமே முதன்மையானது என்பதால் இனி உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.

ஆண்டின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகுபகவான் இதுவரை உங்களை தொல்லைபடுத்தி கொண்டிருந்த ஏழாமிடத்தில் இருந்து தனக்கு மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான ஆறாமிடத்திற்கு மாறுகிறார். அதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

இதன் மூலம் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

வருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடப் பிற்பகுதியில் இருந்து கும்பத்தினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.

தற்போது ராகுபகவான் மாறப்போவது அவருக்கு விருப்பமான கடக வீட்டிற்கு என்பதாலும் பிடித்த வீடு மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது அங்கே ராகு வலுவான நன்மைகளைச் செய்வார் என்பதாலும் இனிமேல் உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் உங்களின் விஸ்வரூபத்தை கண்டு பயந்து ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் விலகும்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் தற்போது சாதகமற்ற எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாகாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குரு மிகவும் யோகம் தரும் ஒன்பதாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கும் நிலை பெறுவார்.

குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது இதுவரை இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும், வருடக் கிரகமான குருபகவான் பெயர்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதன் பலன்களைத் தர ஆரம்பித்து விடுவார் என்பதாலும் இந்த வருட பிற்பகுதியிலேயே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

வலுவான ராகு,கேதுப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருப்பெயர்ச்சியின் மூலம் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் உங்களுக்குக் கிடைக்கும். எனவே ஏப்ரல் மாதத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

அனைத்திலும் மேலாக அக்டோபர் மாதம் 26-ம் நாள் உங்கள் ராசிநாதனான சனிபகவான் மிகவும் யோகம் தரும் அமைப்பான 11-ம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் இந்த யோகநிலை ஒருவருக்கு 30 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய ஒன்று.

சனிபகவானே உங்களின் ராசிநாதனாகவும் இருப்பதால் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலமும் உங்களுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். எனவே எப்படிப் பார்த்தாலும் 2017-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.

செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். கும்பத்திருக்கு திருப்பு முனையான வருடம் இது.

No comments :

Post a Comment