Thursday, September 1, 2016

மகரம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

மகரம்:

கடந்த சில மாதங்களாக கோட்சாரரீதியாக மகரத்திற்கு சாதகமற்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்குக் கொண்டாட்டம்தான். குருபகவான் ராசியைப் பார்ப்பதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நீண்டகால வைத்தியம் தேவைப்படும் வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். 

எவரிடமும் கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிக முயற்சி இல்லாமலே சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நீண்ட நாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும். மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர முடியும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

கணவன் மனைவி உறவு சுமுகமாய் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நல்ல பொருளை பரிசளிக்க முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஒருசிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள். வேலை தொழில் வியாபாரம் போன்ற இனங்களில் சில எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை மட்டும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 

2,3,4,5,6,9,11,13,14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ந்தேதி மாலை 4 மணி முதல் 30-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.

No comments :

Post a Comment