Tuesday, July 19, 2016

சிம்மம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் :

சிம்மராசிக்கு தற்போது நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். சாதகமற்ற பலன்களைத் தரும் இடமான ஜென்மராசியில் இருந்து நன்மைகளை தரும் இரண்டாம் இடத்திற்கு குருபகவான் மாறுவதால் சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார மேன்மைகளை உயர்த்தும் குருப்பெயர்ச்சியாக இது இருக்கும்.

குறிப்பாக அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் சரியான வேலை கிடைக்காமல் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகாத சிம்மராசி இளைய பருவத்தினருக்கும், கிடைத்த வேலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பிரச்சனைகள் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி ஆறுதல்களையும், சிக்கல்களுக்குத் தீர்வையும் தருவதாக அமையும்.

இரண்டாமிடத்திற்கு வரும் குருபகவானால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.

குருபகவான் இருக்கப் போகும் இடம் தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் மேற்கண்ட இனங்கள் வலுப்பெற்று பணச்சிக்கல் தீரும் என்பதோடு உங்கள் வாக்கும் சொல்லும் பலித்து கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

இதுவரை குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும்.

நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு குருபகவான் புத்திரகாரகன் என்பதால் புத்திரபாக்கியம் அளிப்பார். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குருபகவானின் பார்வை ஆறு, எட்டு, பத்தாமிடங்களில் பதிவதால் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கே குருபகவான் நல்லபலன் அளிப்பார் என்ற விதிப்படி மேற்கண்ட பாவங்கள் வலுப்பெற்று அந்த பாவங்களுக்குரிய விஷயங்கள் இம்முறை உங்களுக்கு நடைபெறும்.

ஆறாம்பாவம் வலுப்பெறுவதால் கடன் வாங்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் அதை நல்ல காரியத்திற்காக மட்டும்தான் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். வாங்கும் கடன் உபயோகம் உள்ள சொத்தாக மாறுமே தவிர விரயமாகாது.

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.

நடுத்தரவயது தாண்டியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ உங்கள் கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ இந்த வருடம் உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்து கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள்.

குருபகவானின் எட்டாமிடத்துப் பார்வையால் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குறிப்பிட்ட சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனனகால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாதவர்களுக்கு சரிவுகள் வரலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

எட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். இப்போதே ஆரம்பித்தால் அடுத்த வருடம் அர்த்தாஷ்டம சனி விலகியதும் பலனை அறுவடை செய்வீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருபகவானின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதாலும் அவரே உங்களின் பஞ்சமாதிபதி ஆவதாலும் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக மஞ்சள் போன்ற பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும், குருஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவுவது, ஏழைமாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப்பெண்ணிற்கு திருமணத்திற்கு தாலி வாங்கித் தருவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

No comments :

Post a Comment