கன்னிராசிக்கு தற்போது விரையங்களை தரும் இடத்தில் இருக்கும் பனிரெண்டாமிட குருபகவான் அதிலிருந்து மாறி ஜென்மகுருவாக ராசியில் அமர்கிறார். பொதுவாக ஜென்மகுரு
பெரிய நற்பலன்களைத் தருவதில்லை என்றாலும் ஏற்கனவே ராகுவுடன் இணைந்து வலிமை இழந்திருந்த நிலை இப்போது குருவிற்கு நீங்கப் பெறுவதால் கன்னிக்கு சுபத்துவ
அமைப்புகளைத் தருவார் என்பது உறுதி.
இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இந்த முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை
அளிப்பார். சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும்.
மேலும் எந்த ஒரு அமைப்பிலோ, அல்லது நிர்வாகத்திலோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஜன்மகுரு நன்மைகளைச் செய்வது இல்லை. அதாவது பெரிய தலைவர்கள், ஒரு பெரும்
நிறுவனத்தை வழி நடத்துபவர்கள் போன்றவர்களுக்குத்தான் சில அனுபவங்களை ஜன்மகுரு தரும். மற்றவர்களுக்கு தீயபலன்கள் இருக்காது.
ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் எந்த நேரமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக்
கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக்
குருப்பெயர்ச்சியால் இருக்கும்.
ஜன்மகுரு என்பதால் அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது
பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும்
வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக
உழைக்க வேண்டியிருக்கும்.
சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது
முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.
அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை
அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.
பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். சிலருக்கு வீடுமாற்றம் தொழில்மாற்றம்
வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு
இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.
தற்போது ராகுவிடமிருந்து விலகி வலிமையடைந்துள்ள குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து ஏழு ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை
புனிதப்படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களையும் குரு பகவான் தருவார் என்பதால் இந்த குருப்பெயர்ச்சியில் கவலைகளுக்கு இடமில்லை.
குருவின் ஏழாமிட பார்வையால் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள்
அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில்
பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே
ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப
சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று
கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள்
அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை
அடையாளம் காண்பார்கள். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு பகவான் அருள் புரிவார். குடும்பத்தில் மங்கள
நிகழ்ச்சிகள் நடக்கும்.
நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும்
வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக
நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குருபகவானின் அருளினால் எதையும் சமாளிப்பீர்கள்.
ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு
சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.
குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
புத்திர தோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவர்
ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்த நேரத்தில் எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.
போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு
நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.
இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை
ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ
முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.
பரிகாரங்கள்:
சென்னையில் இருப்பவர்கள் ஸ்ரீலஸ்ரீ பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி, மற்றும் பட்டினத்தார் சுவாமிகளின் ஜீவசமாதி, சைதாப்பேட்டை ரயில்நிலையம் எதிரில் உள்ள மகான் ஸ்ரீ குருலிங்கசுவாமிகளின் ஜீவசமாதி போன்ற இடங்களுக்கு சென்று
குருவருள் பெறலாம். வெளிமாவட்டத்தவர்கள் தங்களின் அருகாமையில் உள்ள சித்தர்கள் ஞானிகள் அடங்கிய திருவிடங்களுக்கு சென்று அங்கே தியானம் அல்லது பக்தர்களுக்கு
பணிவிடை செய்வது போன்ற தொண்டுகள் மூலம் ஜன்மகுருவை மகிழ்வித்து நன்மை பெறலாம்.
No comments :
Post a Comment