Tuesday, July 19, 2016

துலாம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் :

துலாம்ராசிக்கு ஏழரைச்சனியின் இறுதிப்பகுதியான பாதச்சனி நடந்து கொண்டிருக்கிறது. ஜென்மச்சனி நடந்தபோது கடுமையான பிரச்சினைகளையும், பொருளாதார குறைகளையும் சந்தித்து வந்த பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் ஓரளவிற்கு தற்போது பிரச்சினைகள் விலகி சற்று மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆயினும் இன்னும் சிலருக்கு ஏழரைச்சனியின் பாதிப்புகள் முழுவதுமாக விலகவில்லை. தற்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குருபகவான் மிகவும் நல்ல இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்து மாறி வீண் செலவுகள், விரையங்களை குறிக்கும். பனிரெண்டாமிடத்திற்கு மாறுகிறார்.

பொதுவாக பனிரெண்டாமிடத்து குரு நல்லநிலையாக நமது கிரந்தங்களில் சொல்லப்படவில்லை. ஆயினும் இதுவரை ஏழரைச்சனியினால் எந்தவித நன்மைகளையும் பெறாத துலாம் ராசிக்காரர்கள் தற்போது நடக்கும் குருப்பெயர்ச்சியில் செலவு செய்யவேண்டும் என்பதால் இதுவரை தடைப்பட்டிருந்த திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுபச்செலவுகளை மட்டுமே சந்தித்து வாழ்க்கை அமைப்புகளில் நிலைகொள்வீர்கள்.

சனியைத் தவிர பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் துலாம் ராசியினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அடுத்து சுபக்கிரகங்கள் விரயஸ்தானம் எனப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச்செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும் என்பதாலும் செலவு செய்துதான் மனநிறைவை அனுபவிக்க முடியும் என்பதாலும் செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.

செலவு செய்யப் போகிறீர்கள் என்றால் வருமானம் வரப்போகிறது என்று அர்த்தம். வரவு வந்தால்தானே தொடர்ந்து செலவு செய்ய முடியும். கடன் வாங்கி எந்தனை நாள் செலவு செய்ய முடியும். எனவே இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு செய்யப் போதுமான வருமானங்கள் இருக்கும்.

ஆகவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் துலாம் ராசிக்காரர்களின் குடும்பங்களில் திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான பூப்புனித நீராட்டு விழா போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன் வருவதற்கான பிரசவச்செலவுகள் போன்ற சுபகாரியச் செலவுகள் இந்த வருடம் இருக்கும்.

அடுத்து குருபகவான் பார்க்கும் இடங்கள் வலுப்பெற்று பலன்களைச் செய்யும் என்பதால் குருபகவானின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப்பெற்று அந்த பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப்பெயர்ச்சியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.

கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

சேக்கிழார் பெருமான் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குருஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ தட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

No comments :

Post a Comment