Tuesday, July 19, 2016

கடகம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

கடகம் :

கடகராசிக்கு கடந்த ஒருவருடமாக நல்லபலன்களைத் தரும் இடமாகச் சொல்லப்பட்ட இரண்டாம் வீட்டில் இருந்து தற்போது சாதகமற்ற பலன்களை தரும் இடமாகச் சொல்லப்படும் மூன்றாம் வீட்டிற்கு குருபகவான் மாறுகிறார்.

அதேநேரத்தில் சென்ற வருடம் சிறப்பாகச் சொல்லப்பட்ட இரண்டாம் வீட்டில் உள்ள குருவால் கடகராசிக்காரர்களுக்கு திருமணம், வேலை போன்ற நல்ல அமைப்புகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற குருப்பெயர்ச்சி காலத்தின் பெரும்பகுதி குருபகவான் ராகுவுடன் இணைந்தும் வேறுவகையிலும் பலவீனமாக இருந்ததால் சென்ற வருடம் நற்பலன்கள் எதுவும் பெரும்பாலான கடகராசிக்கு நடக்கவில்லை.

இதுபோன்ற நல்லபலன்கள் நடக்காத கடகராசிக்காரர்களுக்கு தற்போது ராகுவின் பிடியில் இருந்து விலகி மூன்றாம் வீட்டில் அமரப் போகும் குருபகவான் பாக்கியாதிபதி பாக்கியத்தைப் பார்ப்பதால் நன்மை எனும் அடிப்படையில் வேலை, திருமணபாக்கியம், புத்திரபாக்கியம் போன்ற நல்லபலன்களை இந்த குருப் பெயர்ச்சியில் செய்வார். 

குருபகவான் இருக்கும் வீட்டை விட தான் பார்க்கும் வீட்டிற்கு நன்மைகளை அதிகம் செய்வார் என்ற விதிப்படி இந்தப் பெயர்ச்சியின் மூலம் கடகராசியின் ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த வீடுகள் வலுப்பெற்று நன்மைகளை செய்யும்.

குருவின் பார்வை ஏழாமிடத்தில் பதிவதால் இதுவரை திருமணமாகாத இளையவர்களுக்கு வரும் ஆகஸ்டு மாதத்திற்கு மேல் திருமணம் நல்லபடியாக முடியும். ஒருசிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள்.

குருபகவானின் ஒன்பதாமிடத்துப் பார்வையால் பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவம் வலுப்பெறுவதால் தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

குறிப்பிட்ட சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புணருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு.

குருபகவானின் பதினொன்றாமிடத்துப் பார்வையால் செய்யும் தொழிலில் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த வருடம் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருடம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவார்கள்.

சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பொதுவாக இது முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், ஜன்மநட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

No comments :

Post a Comment