Tuesday, July 19, 2016

மேஷம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து வருகிறது. ஏழரைச்சனி அஷ்டமச்சனி காலங்களில் ஒரு மனிதருக்கு நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தடை வரும் என்பது ஒரு ஜோதிட உண்மை. இதன்படி கடந்த ஒன்றரை வருட காலமாக மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று பின்னடைவான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதிலும் முப்பது வயதுகளில் இருக்கும் பெரும்பாலான இளையபருவத்தினருக்கு வாழ்க்கை மீது பிடிப்பில்லாத ஒரு நிலை வரும் அளவிற்கு எதுவும் சரியில்லாத போக்கு நடந்து வருகிறது.

தற்போதைய குருபெயர்ச்சியால் சாதகமற்ற இடமாக சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு குரு மாறுகிறார். ஏற்கெனவே நல்ல இடமாக சொல்லப்பட்ட ஐந்தாமிடத்தில் கடந்த ஒரு வருட காலமாக குருபகவான் இருந்தபோது பெரிய நன்மைகள் எதையும் மேஷ ராசிக்காரர்களுக்கு குரு செய்து விடவில்லை. எனவே தற்போது ஆறாமிடத்திற்கு வர இருக்கும் குருபகவானும் கெடுதல்கள் எதையும் உங்களுக்குத் தரமாட்டார்.

அதேநேரத்தில் எந்த ஒரு விஷயமும் கிணற்றில் போட்ட கல்லாகவே மேஷராசிக்கு இருந்து வரும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் நிம்மதி இருக்காது. வருமான குறைவு இருக்கும். பட்ஜெட்டில் துண்டு விழும். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானதுதான். இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறுமாதங்களுக்கு மட்டுமே நான் சொன்ன பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

2017-ம் ஆண்டு ஆரம்பித்தவுடன் மேஷராசிக்கு இருந்து வரும் சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கி வழக்கமான, அதிர்ஷ்டமான நல்லபாதையில் நீங்கள் நடக்க ஆரம்பிப்பீர்கள் என்பதால் இந்த முறை பெரிதாக கவலைபடுவதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் ஒரு கருத்தாக குருபகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைத்தான் வலுப்படுத்துவார் என்பதால் இந்த முறை அவர் பார்க்கும் இடங்களான உங்கள் ராசிக்கு பத்து பனிரெண்டு மற்றும் இரண்டு ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

முதலாவதாக ஜீவனஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை உடனடியாக விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.

அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். அஷ்டமச்சனி நடப்பதால் ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

முதலீடின்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்ததொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத்தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

குருபகவான் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதால் கடன் நோய் எதிரிகளைக் குறிக்கும் ஆறாம்பாவம் வலுப்பெறுகிறது. இதனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மேலும் கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார்.

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் யோகத்தையும் குருபகவான் தருவார்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

பரிகாரங்கள்:

அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பதால் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். குருபகவானின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜென்ம நட்சத்திரத் தினமன்று குருஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடுங்கள். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு வியாழக்கிழமை செந்திலாண்டவனை தரிசியுங்கள்.

No comments :

Post a Comment