Tuesday, July 19, 2016

ரிஷபம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் :

ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரிஷபத்தினரின் கோட்சாரக் கிரகநிலைகள் வலுவாக இல்லாததால் பெரிய நன்மைகள் எதுவும் இல்லாமல் ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலைமையிலேயே இருந்து வந்தீர்கள்.

தற்போது ஆகஸ்ட் 11-ந்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் இயற்கைச் சுபரான குருபகவான் நான்காமிடத்தில் இருந்து மாறி மிகவும் யோகம் தரக்கூடிய இடமான ஐந்தாமிடத்திற்கு வருவதும். ராசியைப் பார்க்க போவதும், உங்களுக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி மூலம் ரிஷபராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து ரிஷபராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

உங்களின் உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். குருபகவான் உங்களுடைய ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உங்களைத் தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலைநிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

ஐந்தாமிடத்திற்கு மாறும் குருபகவான் தன்னுடைய நன்மை செய்யும் பார்வைகளால் ஒன்பது, பதினொன்று ராசி ஆகியவற்றைப் பார்ப்பார் என்பதால் அவரது ஒன்பதாமிடத்து பார்வை மூலம் இதுவரை கிடைக்காத தள்ளிப் போயிருந்த பாக்கியங்கள் அனைத்தையும் தற்பொழுது உங்களுக்கு கிடைக்கச் செய்வார்.

குறிப்பாக இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். ரிஷபராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப்பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு.

அதுபோலவே குருபகவான் புத்திரகாரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். அதிலும் ஒரு விசேஷநிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு குருபகவான் இரண்டாவது வாழ்க்கையை தற்பொழுது நல்ல விதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதானவர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.

அடுத்து குருபகவானின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.
பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

நான்காமிடத்தில் ராகு இருப்பதால் இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பப்பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் ஒரு நல்ல ஆரம்பத்தை உங்களுக்குத் துவங்கி வைக்கும் என்பது உறுதி.

பரிகாரங்கள்

குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை கூட்டிக்கொள்ள உங்களின் ஜன்ம நட்சத்திரதினம் அல்லது ஒரு வியாழக்கிழமையன்று குருஹோரையில் குருவின் வாகனமான ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் முன்னரே கேட்டு த் தெரிந்து கொண்டு யானைக்கு உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

No comments :

Post a Comment