Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 3

 வாசகர்களின் 
கேள்விகளுக்கு 

"ஜோதிட மகாகுரு "
"ஜோதிடக்கலை அரசு"
  ஆதித்ய குருஜி
                  பதில்கள்


A.பிரபாகரன்
மயிலாடுதுறை.

கேள்வி:

இத்துடன் இணைத்துள்ள ஜாதகர் பெயர் ராஜகோபாலன். வயது 33. இவருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா ? நடக்கும் என்றால் எப்போது? நடப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?

பதில்:

ராஜகோபாலனுக்கு 33 வயதுதான் ஆகிறது. அதற்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள் போலிருக்கிறது. போகட்டும்... அவரின் ஜாதகப்படி மகர லக்னம், மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரம்.

லக்னத்திற்கு எட்டில் சனி. ஏழாமிடத்தில் ஆறு, பனிரெண்டுக்குடையவர்கள் அமர்வு. ஏழுக்குடைய சந்திரன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து ஆறாமிடத்தில் மறைந்து பரிவர்த்தனை பெறுகிறார்.

செவ்,சு
சூ,சந்
கேது
பு, குரு
லக்
சனி,ரா
இரண்டு எட்டில் ராகு கேது அமர்ந்த நிலையில் குடும்பாதிபதியும் லக்னாதிபதியுமான சனி ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் இணைந்து கிரகணமடைந்தார். அதோடு செவ்வாய் ஐந்தாம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரனுடன் இணைந்து தன் நான்காம் பார்வையாக சனியைப் பார்க்க சனி தனது பத்தாம் பார்வையால் செவ்வாயைப் பார்க்கிறார். இவையெல்லாம் திருமணத்திற்கான தடைகள்.

லக்ன மற்றும் தனாதிபதியான சனி எட்டில் மறைந்து, கிரகணமும் அடைந்து முற்றிலும் வலுவிழந்ததால் சனிப் பிரீத்தியான முறையான பரிகாரங்களை செய்ய வேண்டும்.

செவ்வாய், சனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் கந்தர்வ ராஜ ஹோமமும், குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேதுக்களுக்கு சர்ப்ப சாந்தி பூஜையும் செய்வது நல்லது.

வரும் சனிதசை கேதுபுக்தியில் 17-7-2013 க்கு மேல் 34 வயதில் திருமணம் நடக்கும். இரண்டாம் வீட்டில் அமர்ந்து குடும்பாதிபதியின் பார்வையைப் பெற்ற கேதுதான் திருமணம் தரும் அதிகாரம் பெற்றவர்.



ஸ்ரீநிவாசன்
சுள்ளிமேடு
அவல்பூந்துறை
ஈரோடு-638115.

கேள்வி:

இத்துடன் எனது மகள் மற்றும் வரன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். வரன் ஜாதகத்தில் அடுத்து குருதசை. இரண்டுக்குடையவன் பனிரெண்டில். மகள் ஜாதகத்தில் ஏழில் கேது. பையனுக்கு ஐந்தில் சனிகேது. இருவரையும் இணைக்கலாமா? இரண்டுக்குடையவன், ஏழுக்குடையவன் மற்றும் சுக்கிரன் இருவர் ஜாதகத்திலும் பொருந்தி வருகிறதா? என் மகளுக்கு அடுத்து நடைபெறும் அஷ்டமாதிபதி தசை எப்படி இருக்கும்? தங்களின் மேலான ஆலோசனையை தெரிவிக்கவும்.

பதில்:

உங்கள் பெண்ணிற்கும், நீங்கள் அனுப்பியுள்ள வரனிற்கும் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருந்தாலும் சஷ்டாஷ்டக தோஷம் உள்ளது. அதை விட மேலாக உங்கள் பெண்ணிற்கு லக்னம், மற்றும் ஏழில் ராகுகேதுக்கள் சம்பந்தம் உள்ளது

செவ்
ராசி
குரு
கேது
ல,சனி
ரா,சுக்
சந்
சூ
புத
பையனுக்கு லக்னத்திலோ, ராசியிலோ ராகுகேதுக்கள் சம்பந்தப்படாமல் பதினோராமிடத்தில் அமர்ந்த மேஷராகு தசையும் நடப்பதால் இருவருக்கும் பொருத்தமாக அமையாது.

இத்தனை விளக்கமாக, அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்ட நீங்கள் மகர லக்னம், சிம்மராசி, மகம் நட்சத்திரம். லக்னத்தில் சுக்கிரன் ராகு மூன்று டிகிரிக்குள் இணைவு. கூடவே சனி. ஏழுக்குடைய சந்திரன் எட்டில் மறைவு. ஏழுக்குடையவனுக்கு செவ்வாய் பார்வை. ஏழாமிடத்திற்கு சனி பார்வை. ஏழாமிடத்தில் கேதுவுடன் விரயாதிபதி குரு உச்சம்.

அதோடு தற்போது பாதகாதிபதி பார்வையில் இருக்கும் புதன் புக்தியில் (சுக்கிரதசை) மகளுக்கு திருமணம் செய்ய அவசரப்படுகிறீர்களே ஏன்? உங்கள் மகளுக்கு 21 வயதுதானே ஆகிறது?

அடுத்து விரயாதிபதியுடன் கூடி ஏழாமிடத்தில் உள்ள கேதுவின் புக்தி நடக்கும். அதன்பின் அஷ்டமாதிபதி சூரியதசை ஆரம்பிக்கிறது. அஷ்டமத்தில் களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் இருக்கிறார். சூரியன் சந்திரன் இருவருக்கும் பாதகாதிபதி செவ்வாயின் பார்வை வேறு.

திருமண வாழ்வில் நிம்மதியற்ற நிலை இருக்கலாம். உரிய பரிகாரங்களை செய்வது நல்லது.



G. சங்கர்
4/ 117 கணேசபுரம்,
திருச்சி-14

கேள்வி:

பிறந்தது முதல் கஷ்டம். நாற்பது வயதாகிறது. அப்பா ஆதரவு இல்லை. உறவினர்கள் விஷம். சொந்த முயற்சியால் கல்லூரி, கம்ப்யூட்டர் கற்றேன். நிரந்தர வேலை இல்லை. திருமணம் ஆகவில்லை. மனம் மரத்து வேண்டாம் என விட்டு விட்டேன். பத்தில் கேது உள்ளதால் என்ன தொழில் செய்யலாம்? தம்பி தவிர வேறு ஆதரவில்லை. என் ஜாதகம் எப்படிப் பட்டது? எப்போது நான் நன்றாக இருப்பேன்?

பதில்:

துலாம் லக்னம், மகரராசி, உத்திராடம் நட்சத்திரம். குருதசையில் சனிபுக்தி நடப்பு.

களத்திர ஸ்தானாதிபதியும், குடும்பாதிபதியுமான செவ்வாய் ஆறில் மறைவு. எட்டில் சனி. அவர் ஐந்தில் அமர்ந்த சுக்கிரனுடன் பரிவர்த்தனை. அதோடு ராசிக்கு ஏழாமிடத்தையும் சனி பார்க்கிறார்.

செவ்
சனி(வ)
சுக்
ராசி
கேது
சூ, சந்
ராகு
புத, கு
லக்
லக்னத்திற்கு செவ்வாய் பார்வை லக்னாதிபதிக்கு சனி பார்வை. ஜீவனாதிபதி சந்திரன் ஆறு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்தார். பத்தாமிடத்தில் கேது இருக்க அவருக்கும் சனி பார்வை. துலாம் லக்னத்திற்கு ஆகாத பாவியான குரு பகவான் மூன்றில் ஆட்சி பெற்று புதனுடன் இணைந்து தசை நடத்துகிறார்.

குரு வலுப்பெற்று 7, 9, 11 மிடங்களை பார்த்ததால் அந்த இடங்கள் வலுவிழந்தன. துலாம் லக்னத்திற்கு குருபகவான் பதினோராமிடமான சிம்மத்தைத் தவிர்த்து வேறு எங்கிருந்தாலும் நன்மை செய்ய மாட்டார். அவர் பார்வையும் நல்லது செய்யாது.

இத்தனை பலவீனங்கள் இருப்பினும் லக்னாதிபதி இயற்கைச் சுபராகி ஐந்தில் அமர்ந்தும், ஐந்துக்குடையவன் லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றும், பத்துக்குடையவன் திக்பலம் பெற்று பத்தாமிடத்தை பார்த்தும், ஒன்பதுக்குடையவன் ஒன்பதாமிடத்தையும் பார்த்த தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற நல்ல யோக ஜாதகம்.

இதுவரை நடந்த தசைகள் சரியில்லாததால் வாழ்வில் எந்த சுகமும் கிடைக்கவில்லை. குருதசை புதன்புக்தியிலிருந்து ஒரு திருப்பம் இருக்கும்.

குருவும், புதனும் மூன்றாமிடத்தில் இருப்பதால் எழுத்தும், அறிவும் இணைந்த துறையில் இனிமேல் முன்னேற்றம் காண்பீர்கள். யோகாதிபதியும் சுபர் வீட்டில் நட்பு ஸ்தானத்தில் உள்ளவருமான ராசிநாதன் சனிதசையில் வாழ்வின் பிற்பகுதியில் நிம்மதி கிடைக்கும்.

திருமணத்தடை நீங்க ஒரு ஜன்ம நட்சத்திர தினத்தன்று கந்தர்வராஜ ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். ஸ்ரீ காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி பூஜை செய்யுங்கள். திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

லக்னமும் லக்னாதிபதியும் பாவிகள் தொடர்பு கொண்டதால் நீங்களே தன்னம்பிக்கை இழந்து விரக்தி மனப்பான்மையில் இருப்பீர்கள். உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவலை வேண்டாம்.

எல்லாம் சரி..

உங்கள் கடிதத்தில் என்னுடைய ரசிகர் என்று உங்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அதென்ன எனக்கு “இளைய வராஹ மிகிரர்” “இளைய சகாதேவன்” என்றெல்லாம் அடைமொழி..?

இளவரசன் பதினெட்டாம் பிறந்த நாளன்று பன்றியால் (வராஹம்) இறப்பான் என்று மிகிரர் சொல்ல, அரசன் இளவரசனை காட்டுக்கு அனுப்பாமல் அரண்மனை மேல்மாடியில் அடைகாத்து காவல் காத்த நிலையில், பால்கனியில் பொருத்தப்பட்ட பன்றித்தலை விழுந்து இளவரசன் மரணமடைந்ததால் வெறும் மிகிரர் வராஹமிகிரர் ஆனார். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனின் ஜோதிடத்திறமை பகவான் கிருஷ்ணர் மெச்சிய ஒன்று.

இது போன்ற மாபெரும் ஞானிகளை நான் உட்பட எந்த ஜோதிடருடனும் ஒப்பிடாதீர்கள். இவர்களின் கால் சுண்டு விரலில் ஒட்டியிருக்கும் தூசுக்கு நான் சமம் ஆகமாட்டேன். இவர்களைப் போன்றவர்கள் மீண்டும் அவதரிக்கப் போவதில்லை.



R.பத்மாவதி
மார்க்கட் வீதி
காரைக்கால்.

கேள்வி:

நான் தாய்மாமனை மணந்தேன். ஐ.டி துறையில் உள்ளார். ஒருமகன். நான் எம்பிஏ படித்து வீட்டில் இருக்கிறேன். கணவர் வேலையில் தொந்தரவு அதிகம். தொடர்ந்து அதேதுறையில் இருப்பாரா? மகனுக்கு சளித்தொல்லை. அதனால் அடுத்த பிள்ளை பெறாமல் தள்ளிப் போடுகிறேன். அடுத்தது நன்றாகப் பிறக்குமா? எப்போது? எனக்கும் பல வியாதிகள். சரியாகுமா? வெளிநாடு செல்வேனா? என் ஜாதகத்தில் என்ன விஷேசம்?

என் தங்கை பிளஸ்டூ படிக்கிறாள். டாக்டராக விருப்பம். ஆவாளா? திருமணம் எப்போது? உறவா? பின்வாழ்க்கை எப்படி? ஜாதக விஷேசம் என்ன?

பதில்:

தனுசு லக்னம் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம். சுக்கிரதசையில் சனிபுக்தி நடப்பு ஏழுக்குடையவர் புதனாகி அவர் ஒன்பதாமிடமான சிம்மத்தில் அதிநட்பு ஸ்தானத்தில் குரு பார்வையுடன் அமர்ந்து, அம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்து துலாத்தில் இருப்பதால் சுக்கிரதசையில் தாய்மாமனை மணந்தீர்கள். கணவர் வேலையில் தொந்தரவு என்றால் அவர் ஜாதகத்தைத் தான் பார்க்க வேண்டும்.

ராகு
ராசி
சந்
புத
லக்,குரு,
செவ்
கேது
சனி,சுக்
சூ
“மூக்கு இருக்கின்றவரை சளி இருக்கும்” என்று ஒரு பழமொழி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மகனுக்கு சளித்தொல்லை என்று அடுத்த பிள்ளைப் பிறப்பை தள்ளிப் போடுகிற பெண்ணை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். அடுத்த குழந்தை திருக்கணிதப்படி கேதுபுக்தியில் பிறக்கும்.

ஐந்தாமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படும்படி ஜாதகத்தில் ஒன்றும் இல்லை. ஆறுக்குடைய சுக்கிரன் துலாத்தில் உச்ச சனியுடன் இணைந்து, பனிரெண்டாமிடத்தில் கேதுவுடன் சேர்ந்து ஆறாமிடத்தைப் பார்க்கும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் இருப்பதால் சுக்கிரதசை முடியும் வரை ஆரோக்கிய குறைவு இருக்கும். சூரிய தசையில் உடல் நலம் சீராகும். இந்த தசையிலேயே வெளிநாடு செல்வீர்கள்.

ஜாதகத்தில் விசேஷம் என்றால் லக்னாதிபதி குரு லக்னத்தில் ஆட்சி பெற்றும் அம்சத்தில் தனித்து உச்சம் பெற்றும் அமைந்ததோடு இல்லாமல், ஒன்பது பத்துக்குடைய சூரியனும் புதனும் யாருடனும் சேராமல் பரிவர்த்தனை பெற்ற தர்மகர்மாதிபதி யோகமுள்ள ராஜயோக ஜாதகம்தான்...

ஆனால் நடப்பு தசைகள் சரியில்லையே..... எழுபத்திநான்கு வயதில் குருதசை ஆரம்பிக்கும். என்ன பிரயோசனம்?

உங்கள் தங்கை டாக்டர் ஆவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஒருவர் மருத்துவப் பணி செய்வதற்கு ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு குருவும் செவ்வாயும் முதல்தர தொடர்பும், சூரியன் இரண்டாம் தொடர்பும் கொள்ள வேண்டும். உங்கள் தங்கை மகாகோபக்காரி என்பது விசேஷம்.



கே.ரவி
திருவொற்றியூர்
சென்னை-19

கேள்வி:

எந்த தொழில் சரிவரும்? பெயரில் குறை உள்ளதா? பிறந்ததில் இருந்தே கஷ்டம். ஏதேனும் தோஷம் இருக்கிறதா? ரியல்எஸ்டேட், டிராவல்ஸ் எதைச் செய்யலாம்? நல்ல தீர்வு சொல்லுங்கள்...

பதில்:

சிம்ம லக்னம் ரிஷபராசி கிருத்திகை நட்சத்திரம். குரு தசையில் சுய புக்தி நடப்பு.

பெயரில் ஒன்றும் இல்லை. சிம்மம் லக்னமாகி லக்னாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் திக்பலம் மற்றும் வர்கோத்தமம் பெற்றும், யோகாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தை பார்த்த மனவலிமை உள்ள யோக ஜாதகம்

சூ,பு,சு,
சனி,சந்
கேது
செவ்
ராசி
குரு
லக்
ராகு
இதுவரை நடைபெற்ற ராகுதசை சரியில்லை. ராகு ஐந்தாமிடத்தில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த குரு ஆறில் நீசம் பெற்றதால் உங்களை படுத்தி எடுத்திருப்பார்.

ஆனால் குருதசை உங்களுக்கு நல்லது செய்யும். குருவுக்கு சாரம் கொடுத்த சந்திரன் உச்சமாகி, குருவுக்கு வீடு கொடுத்த சனியுடன் இணைந்து இருவரும் குரு பார்வையில் அவருக்கு திரிகோணத்தில் இருப்பது நல்லது.

சந்திரன் பயணத்தைக் குறிக்கும் பனிரெண்டுக்கு அதிபதியாகி வாகனகாரகன் சுக்கிரனுடன் இணைந்து சுக்கிரன் வீட்டில் ஆன்மீக கிரகமான சனியுடன் உள்ளதால் குருதசையில் ஆன்மீகச் சுற்றுலா நடத்தும் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

குருபகவான் நீசத்தில் வக்கிரம் அடைந்துள்ளதால் முதலில் சிறிது சிரமம் தந்து பிறகு நல்லது செய்வார். குருவிற்குரிய முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். அதோடு கோபத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். ரியல்எஸ்டேட் தொடர்பும் விட்டுப் போகாது.

(ஆகஸ்ட் 2012 மாத இதழில் வெளிவந்தது.)

1 comment :

  1. மிக மிக அருமையான பதில்கள் விளக்கங்கள், ஜாதகத்தை மிக அழகாக அலசி ஆராய்ந்து அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்து பலன் சொல்லும் தங்களது அறிவாற்றலை வியந்து போற்றுகின்றேன் குருஜி

    ReplyDelete