Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 1


      வாசகர்களின் கேள்விகளுக்கு

   ஜோதிட மகாகுரு
“ஜோதிடக்கலை அரசு” 

  ஆதித்ய குருஜி

                       பதில்கள்


                                  



R.V.S. ராகவன்,
குமரன் நகர்,
திருச்சி.

கேள்வி:

என் மகனுக்கு இன்னும் சரியானபடி வேலை அமையவில்லை. எப்பொழுது வேலை அமையும்?அவனுக்கு எப்போது திருமணம்
நடைபெறும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? அடுத்த சுக்கிர தசை எப்படி இருக்கும்? புத்திரபாக்கியம் உண்டா? வெளிநாடு வாய்ப்பு உண்டா? சில ஜோதிடர்கள் கடைசி வரை அடிமை தொழில் அமையாது என்று சொல்லுகிறார்கள். அடுத்த சுக்கிர தசையில் சொந்த தொழில் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். சொந்த தொழில் என்றால் எத்தகைய தொழில் செய்தால் நன்மை ஏற்படும்?

பதில்:

உங்கள் மகனுக்கு அஷ்டமாதிபதியான புதன் தசை 2011 வரை நடைபெற்றதால் வேலை அமைப்பு சரியாக அமையவில்லை. தற்போது நடைபெறும் கேது தசை சூரிய புக்தியில் 27-8-2012 க்கு பிறகு நிரந்தரமான, மனதிற்கு பிடித்த வேலை அமையும். கேது சர ராசியில் இருப்பதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்

குரு கேது செவ் (வ)
சனி(வ)
சந்
புத
சூ
சுக்
ராகு
விருச்சிகம் லக்கினமாகி லக்னத்திற்கு ஏழில் ஆறுக்குடைய செவ்வாய் அமர்ந்ததும், அஷ்டமாதிபதி புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதும், ராசிக்கு ஏழாமிடத்தை சனி பார்ப்பதும், களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் பனிரெண்டாமிடத்தில் மறைந்து ராகுவுடன் மிகவும் நெருங்கி வலுவிழந்ததும் உங்கள் மகன் ஜாதகத்தில் உள்ள கடுமையான திருமணத் தடைகள்.

ஆயினும் புத்திரஸ்தானாதிபதியும், புத்திர காரகனுமாகிய குருபகவான் பலமுடன் அமைந்திருப்பதாலும், சுக்கிரனின் பார்வை பெற்ற கேது திருமணத்தை கொடுக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார் என்பதாலும் கேதுதிசை ராகு புக்தியில் திருமணமும், குரு புக்தியில் குழந்தை பாக்கியமும் உண்டாகும்.

ஆறுக்குடையவன் பத்தாமிடத்தை தொடர்பு கொண்டதாலும், அடுத்து நடைபெறப்போகும் சுக்கிரதசை பனிரெண்டாமிடமாகவும் சர ராசியாகவும் அமைந்து ராகுவுடன் இருப்பதாலும் உங்கள் மகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பார். சொந்த தொழில் அமையாது.

லக்னத்தை செவ்வாய் பார்ப்பது மற்றும் சந்திரனுடன் சனி இணைவு உங்கள் மகனிடம் சில குறைகள் இருப்பதைக் காட்டுகிறது. அதை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். லக்னத்திற்கு குரு பார்வை இருப்பதால் நல்லபடியாக பிழைத்துக் கொள்வார். கவலை வேண்டாம்



லோகநாதன்,
திருவள்ளூர்.

கேள்வி:

வாழ்க்கையில் கொடூர துன்பத்தை அனுபவிக்கின்றேன். தலைக்கு மேல் கடன், அளவுக்கதிகமான அவமானம், நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள மனம் நாடுகின்றது. கடன் அடைந்து எனக்கு நிம்மதியே கிடையாதா? பரிகாரம் ஏதாவது உண்டா? கடைசி நம்பிக்கை தாங்களே... என்னை மட்டுமல்ல என் குழந்தைகளையும், கொண்டவளையும் வழிகாட்டுங்கள்... வாழவையுங்கள்.

பதில்:

தனுசு லக்னம். மேஷ ராசி. 2004 பிற்பகுதியில் இருந்து பத்தாமிடத்தில் இருக்கும் ராகு தசை நடக்கிறது. ராகு ஆறுக்குடைய சுக்கிரனுடனும், விரயாதிபதி செவ்வாயுடனும் இணைந்து தசை நடத்துகிறார். அவருக்கு வீடு கொடுத்த புதன் எட்டில் வக்ரமாக இருக்கிறார். ராகு தசை ஆரம்பித்த உடனேயே தொழில் சரிவுகளும், கடன் பிரச்னைகளும் துவங்கி இருக்கும்

கேது சந்
புத,குரு
சூ,சனி
செவ்
சுக்,ரா

கவலை வேண்டாம். நம்பிக்கை இழக்க வேண்டாம். கடவுள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.

பத்துக்குடையவன் எட்டில் மறைந்ததாலும் லக்னாதிபதி குரு அங்கே உச்சம் பெற்றதாலும் அனைத்து சிக்கல்களுக்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். யாருக்காவது பாவம் பார்த்து உதவி செய்யப் போய் தேவையில்லாமல் சிக்கல்களில் மாட்டி இருப்பீர்கள்.

சாரம் கொடுத்தவர் தசா நாதனுக்கு பனிரெண்டிலும், வீடு கொடுத்தவர் லக்னத்திற்கு எட்டிலும் மறைந்தது குறைதான் என்றாலும், ராகு பாக்கியாதிபதி சூரியன் சாரம் பெற்றதும், அவர் கன்யா ராகு என்பதும் உங்களை முழுக்க சோதிக்க மாட்டார் என்பதைக் காட்டுகிறது.

தைரியத்தை இழக்காதீர்கள். லக்னாதிபதி உச்சம் பெற்றும், ஐந்துக்குடையவன் பத்தில் அமர்ந்து லக்னத்தை பார்வையிட்டும், ஒன்பதுக்குடையவன் ஒன்பதில் ஆட்சி பெற்றும் அமைந்த நல்ல யோக ஜாதகம் உங்களுடையது.

கஷ்டங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான். ராகுவிற்கு அடுத்த குரு தசையில் நீங்கள் வாழும் ஊரிலேயே தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அந்தஸ்தோடு வாழுவீர்கள். இது உறுதி.

ராகுதசை பிற்பகுதியில் இருந்து படிப்படியாக கடனை அடைக்க முடியும். உங்களுடைய குழந்தைகளின் ஜாதகத்தை நீங்கள் அனுப்பவில்லை. அவர்களின் ஜாதகத்தில் ஏழரைச் சனி அல்லது ராகு தசை நடப்பில் இருக்கும் என்று யூகிக்கிறேன்.

ராகுதசை முடியும் வரை வருடம் ஒருமுறை ஒரு ஜென்ம நட்சத்திர நாளன்று உங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஸ்ரீகாளஹஸ்தி சென்று ருத்ராபிஷேக பூஜை செய்யுங்கள். காளத்திநாதனின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவனைச் சரணடையுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அனைத்து பிரச்னைகளிலும் இருந்து அவர் காப்பாற்றுவார்.


பெயர், ஊர், இல்லாதவர்.

கேள்வி:

இத்துடன் இதுவரை நான் செய்த பரிகார லிஸ்ட் இணைத்துள்ளேன். இவ்வளவு செய்தும் பலனில்லை. இந்தியாவில் யாரும் எனக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. (இனிமேல் பரிகாரம் என்பதே நான் செய்ய மாட்டேன்) எனவே, அயல்நாட்டு பெண் திருமணம் செய்ய யோகம் உள்ளதா? எந்த நாட்டின் பெண்ணை எப்போது எங்கு சந்திப்பேன்? என் வயதை கொண்டு, வேதனையை கொண்டு பதில் தரவும் ப்ளீஸ்....

சோழி ப்ரசன்னம் பார்த்து பரிகாரம் செய்தேன். அதில் பெண்ணின் பெயர் முதல்எழுத்து, வயது 25, பல்டாக்டர் படிப்பு, உயர்ந்த குடும்பம், சென்னையில் வசிப்பவர், வீட்டிற்கு அருகில் அம்மன் கோயில் இருக்கும், ஒரு இளைய பெண், மூத்த ஆண் உடன் பிறந்தவர்கள், வசதியான குடும்பம், சூரியன் நட்சத்திரம் கிருத்திகை, உத்திரத்தில் பெண் அமையும் எனக் கூறினார். அந்த குறிப்பிட்ட தேதியில் பெண் பற்றிய குறிப்பு கூட கிடைக்கவில்லை ஏன்? சோழிபிரசன்னம் பொய்யா? மிக தீர்க்கமுடியாத அப்படி என்ன தோஷங்கள் உள்ளது? மேலும் நான் வைரம் அணியலாமா?

பதில்:

உங்களுடைய டைப் அடிக்கப்பட்ட ஏறத்தாழ ஐம்பது விதமான பரிகார லிஸ்டை படித்தேன். இத்தனை பரிகாரம் செய்தேன் என்பதை விட இவ்வளவு செய்தும் எனக்கு திருமணம் ஆகவில்லை பார்த்தாயா என்ற ஏளன தொனிதான் அதில் உள்ளது.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையான பரிகாரத்தை செய்வதற்கும் பரம்பொருளின் அனுமதி வேண்டும். தலைவலிக்கு வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டால் தலைவலி போகாது.அதே போல் நாளைக்கு எனக்கு காய்ச்சல் வரப்போகிறது அதனால் இன்றைக்கே மாத்திரை சாப்பிட்டு விடுகிறேன் என்பதும் ஒத்து வராது.

சனி சூ,புத செவ்
ரா சுக்
சந்
கேது
குரு(வ)
பரிகாரங்கள் உரிய நேரத்தில்தான் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் ஞானிகளால் சொல்லப்பட்ட பரிகாரங்களே பலன்களைத் தரும்.

உங்களுக்கு தனுசு லக்னம், சிம்மராசி. லக்னப்படி ஏழில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி நீசம் பெற்று ஏழாமிடத்தையும் அங்கே இருக்கும் செவ்வாயையும் பார்க்கிறார். ஏழுக்குடைய புதன் ஆறில் மறைவு. களத்திர காரகன் சுக்கிரன் எட்டில் மறைவு. குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தை செவ்வாய் சனி இருவரும் பார்க்கிறார்கள்.

அதோடு ராசிக்கு இரண்டாமிடத்திற்கும் செவ்வாய் பார்வை இருக்க ராசியில் கேதுவும் ராசிக்கு ஏழில் ராகுவும் இருக்கிறார்கள்.

உலகத்தில் உள்ள அத்தனை தோஷமும் மொத்தமாக உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. மற்ற ஜோதிடர்கள் ஏழாமிடத்திற்கு லக்னாதிபதி குரு பார்வை இருப்பதால் தோஷங்கள் நிவர்த்தி என்று கணக்கிட்டிருப்பார்கள்.

ஆனால் தனக்கு சற்றும் ஆகாதவரான சுக்கிரனின் துலாம் வீட்டில் பகை பெற்று, வக்கிரமும் பெற்று நீச சனியின் பார்வையை பெற்ற குருபகவானுக்கு சிறிதும் பலம் கிடையாது. அவரது பார்வைக்கும் வலு கிடையாது.

லக்னாதிபதி வலு இழந்தால் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை சுகத்தை அனுபவிக்க இயலாது. கிடைக்காது.

அதோடு, தாய் தந்தையரை நீங்கள் மனம் வருத்தப்படும்படி செய்த சில நிகழ்வுகள் ஜாதகத்தில் தெரிகின்றன. அதுவும் நாற்பத்தி இரண்டு வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாததற்கு ஒரு காரணம். மேலும் உங்கள் லக்னத்தை செவ்வாய் பார்ப்பதும் சந்திரனுடன் கேது இணைந்ததும் உங்களைப் பற்றியும் எனக்குத் தெரிகிறது.

முதலில் லக்னாதிபதி குரு வலிமை அடைவதற்கான முறையான பரிகாரங்களைச் செய்தால் மட்டுமே பலன் இருக்கும். ஆனால், நீங்கள் இனிமேல் பரிகாரங்களைச் செய்ய மாட்டீர்கள் என்பதால் உங்களுக்கு அது பற்றி சொல்லத் தேவையில்லை. வைரம் நீங்கள் அணியக் கூடாது.


த.அப்பாண்டை,
பிருதூர் கிராமம்,
திருவண்ணாமலை.

கேள்வி:

நான் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணி செய்கிறேன். எனக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமல் மிக்க கஷ்ட நிலையில் இருக்கிறேன். அதோடின்றி 1996 ல் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பதவி உயர்வும் இல்லை. இந்நிலையில் இனி வரும் நாட்களில் எனது பணியும், பொருளாதார நிலையும் எப்படி அமையும்? ஊதியம், நிலுவை கிடைக்கப் பெற்று வளமடைவேனா என விளக்கம் தர வேண்டுகிறேன்.

பதில்:

மேஷலக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம். பத்துக்குடையவரும் பாதகாதி பதியுமான சனிபகவான் பனிரெண்டா மிடமான மீனத்தில் மறைந்தாலும் ஒன்பதுக்குடைய மீனநாதன் குரு உச்சம் பெற்று அவரைப் பார்த்ததால் கூட்டுறவு சங்கத்தில் பணி கிடைத்தது. ஆனாலும் ஜீவனாதிபதி விரயம் புகுந்ததால் பணியில் நிறைவின்மை சம்பளக் கோளாறுகள் போன்றவை இருக்கும்.

சனி ல,ராகு
சந்
சூ புத
குரு,
சுக்
கேது செவ்
தற்போது நாலுக்குடைய சந்திரனுடன் இணைந்து கன்னியில் இருக்கும் செவ்வாயின் பார்வையைப் பெற்ற ராகு தசையில் சுய புக்தி நடக்கிறது. ராகு ஏழில் அமர்ந்த கேது சாரம் பெற்றுள்ளார். கேதுவுக்கு இடமளித்த சுக்கிரன் அவருக்கு பத்தாமிடத்தில் உச்சகுருவுடன் இணைந்துள்ளார். அம்சத்தில் ராகு கடகத்தில் உள்ளது சிறப்பு.

அடுத்த குரு புக்தி வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறது. அதுமுதல் எந்த பிரச்சினையும் இருக்காது. சம்பளப் பாக்கி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை கண்டிப்பாக மேன்மை அடையும். கவலை வேண்டாம்.

லக்னாதிபதிக்கு தனது ஆறாமிடத்தில் இடமளித்த புதபகவான் மிதுனத்தில் ஆட்சி பெற்றதால் நிச்சயம் பணி நிரந்தரம் விரைவில் செய்யப் படுவீர்கள். அனைத்துக் கிரகங்களும் நல்ல நிலைமையில் இருந்து தர்ம கர்மாதிபதி யோகமும் உள்ளதால் ராகு தசையும் அடுத்து வரும் குரு தசையும் மிகவும் நல்ல பலன்கள் செய்யும். வாழ்வின் பிற்பகுதி நிம்மதியாய் இருக்கும்.

(ஜூன் 2012 மாத இதழில் வெளிவந்தது.)

No comments :

Post a Comment