Wednesday, July 17, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-6

இந்த நுற்றாண்டில் தமிழ் ஜோதிட உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம், குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய மிகப் பெரிய அனுபவத்தின் கருத்தாக ராகுவிற்கு பனிரெண்டாமிடமும் மிக நல்ல ஸ்தானம்தான். விரயராகு கெடுதல்கள் செய்வதில்லை என்று கூறுகிறார்.

மிகப் பெரும்பாலான வி.ஐ.பி க்களின் ஜாதகங்களில் இந்த பனிரெண்டாமிட ராகுவை நான் பார்த்திருக்கிறேன். மேலும் குரு தசை மிகவும் யோகம் செய்வதற்கான அடிப்படை அஸ்திவாரங்களை பனிரெண்டாமிட ராகு செய்வார்.

பொதுவாக தான் இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடையவரான ராகு பனிரெண்டாமிடம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளாக அமையும் பட்சத்திலும், அங்கே சுபத்துவம் அடைந்தாலும் அதிகமான நன்மைகளைச் செய்வார்.

அதாவது முக்கியமாக பனிரெண்டாமிடத்தின் அசுப ஆதிபத்தியமான விரயங்களைத் தடுத்து சேமிக்கும் அளவிற்கு ஜாதகருக்கு வேறுவழிகளில் பண வரவை அளிப்பார்.

அடுத்து கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி.

ஆனால் இயற்கை சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாவக் கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கை பாவரான ராகு தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும் சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான கெடுபலன்களைத் தருவார்.

இந்த அமைப்பின்படி கடகம், கன்னி, துலாம், தனுசு, ஆகிய லக்னக் காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார்.

மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

அதேபோல ரிஷபம், மிதுனம், சிம்மம், மீனம் ஆகிய நான்கு லக்னத்தவர்களுக்கும் ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார்.

இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும்.

மேலே கண்ட எட்டு லக்னங்களுக்கும் திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் நான் சொன்ன பலன்களே நடக்கும். 

அதே நேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ வேறு ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்து இருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள்தான் என்பது மாறாதது.

என்னிடம் சனி, செவ்வாயின் உச்சநிலை மற்றும் திரிகோணாதிபத்தியம் பற்றிக் கேட்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக நான்  ஜோதிட வாரப் பத்திரிகையான "திரிசக்தி ஜோதிடத்தில்"  எழுதிய தொடரை தேடிப் பிடித்துப் படியுங்கள்.. எல்லாம் புரியும்.

இதைப் போலவே சுபக்கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்து இருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார்.

ஏற்கனவே நான் இந்த தொடரில் “காரஹோ பாவ நாஸ்தி" அமைப்பை செயல்படுத்துவது ராகு கேதுக்கள் தான் என்று எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.

அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார்.

அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள்.

இது ராகுதசை கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப் பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.

மேலும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை நிச்சயம் பாதிப்பார்.

அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், மணவாழ்வு, பங்குதாரர்கள் போன்றவைகளில் ஒன்று, பத்தாமிட ராகுவால் தொழில், வேலை, வியாபாரம், வாழ்வதற்கான வழிமுறை போன்றவைகளில் ஒன்று நிச்சயம் பாதிக்கப்படும்.

அதே நேரத்தில் இது தவிர்த்து கேந்திர ராகு மற்ற பிற நன்மைகளையும் பொருளாதார மேம்பாடுகளையும் கண்டிப்பாகத் தரும்.

மேலும் மேற்கண்ட கேந்திர ஸ்தானங்களில் இருக்கும் ராகு, அந்த லக்னங்களுக்கு திரிகோணாதிபதிகளான ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கிரகங்கள் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற இயற்கைச் சுபர்களாக இருந்து அவர்களுடன் இணைவு பெற்றிருந்தால் தன்னுடன் இணைந்தவர்களின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவங்களைக் கெடுத்து, அதாவது அவர்களின் பலம் மற்றும் தன்மைகளைத் தான் ஏற்றுக் கொண்டு அபரிதமான சக்தி கொண்ட சுபராக மாறி தனது தசையில் மிகப்பெரும் நன்மைகளைச் செய்வார்.

இப்படிப்பட்ட அமைப்பில் மேற்படி ஜாதகருக்கு ராகுதசை தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு உயர்வானதாக இருக்கும்.

ஏதோ ஒரு விதத்தில் வாசகர்களை நான் பாதித்திருக்கிறேன் என்பது என்னுடன் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் இருந்து தெரிகிறது.

என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நுணுக்கமான அர்த்தங்கள் இருப்பதாலும் வார்த்தைகளை மிகக்கவனமாக நான் தேர்ந்தெடுப்பதாலும் என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு நன்கு புரியும் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆயினும் ஆதிபத்தியங்களுக்கும் காரகத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் சிலர் குழம்புகிறீர்கள்.

அதோடு ஒரு செயல் என்பது ஒரே ஒரு கிரகம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல என்பதும் ஜோதிடத்தில் அடிப்படையான பால பாடம்.

ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் சேர்க்கையால் நடத்தப் பெறுவது. தனி ஒரு கிரகத்தினால் அல்லவே அல்ல. ஒரு கிரகம் மட்டுமே தனித்து எந்த ஒன்றையும் செய்யவே முடியாது.

சென்ற மாதம் நான் எழுதிய கட்டுரையில் ராகுவுடன் மிக நெருங்கும் குரு பகவானால், குழந்தைகளையும், பணத்தையும், நேர்மையான குணத்தையும், ஆன்மிக ஈடுபாட்டையும் கொடுக்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஜோதிடத்தில் தனக்கு ஐந்ந்ந்ந்ந்ந்து வருட அனுபவம்(!) என்று தன்னைக் குறிப்பிட்டுப் பேசிய வாசகர் தன்னுடைய ஜாதகத்தில் குரு ராகுவுடன் இரண்டு டிகிரியில் இணைந்திருந்தும் தான் மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

குரு தசையில் குழந்தைகளும், பொருளாதார வசதியும் இருந்ததா? என்று கேட்டேன்... “இல்லை... அனைத்தும் தற்போதைய சனிதசையில் தான் கிடைத்தன.” என்றார். அவருக்கு விருச்சிகம் லக்னமாகி ஏழாமிடத்தில் சுபரின் ரிஷப வீட்டில் நட்புடன் திக்பலமாகி அமர்ந்த சனிதான் ஆன்மிக ஈடுபாட்டுக்கான காரண கிரகம் என்பதை விளக்கினேன்.

ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பங்களிப்புக் கலவை. அதுபோலவே எந்த ஒரு காரகத்துவமும் தனி ஒரு கிரகம் மட்டும் சம்பந்தப் பட்டதாக இருக்க முடியாது.

உதாரணமாக சனி உச்சம் பெற்றால் பூரண ஆயுள் என்று சொல்லி விடமுடியாது. ஆயுள் என்பது லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும், சனியும் சேர்ந்த கலவையான விஷயம்.

ஜோதிடத்தில் ஐந்து வருட அனுபவம் என்பது ஆரம்பநிலைதான். அதாவது LKG யில்தான் இப்போது இருக்கிறீர்கள். இன்னும் MA M.Phil, போன்ற முதுகலைப் படிப்பு வரை தொடரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் ஓரளவு புரியும் நிலைக்கு உங்களால் வர முடியும்.

அதுபோல என்னுடைய முப்பது வருட அனுபவத்தை இங்கே ஒரு மூன்று பக்கம் எழுதுவதாலோ என்னிடம் நீங்கள் மூன்று நிமிடம் தொலைபேசியில் பேசுவதாலோ நான் உங்களுக்கு முழுமையாக விளக்கி விடமுடியாது.

நான் ஒரு சூட்சுமத்தை எளிமையாக விளக்கினாலும் புரியும் தகுதி நிலை உங்களுக்கு இருந்தால்தான் அந்த சூட்சுமம் உங்களுக்கு பிடிபடும். இல்லையெனில் மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதுதான்.

ஆயினும் வருடங்கள் கடந்தபின் புரியும் நிலை வருகையில் இந்த எளியவனின் கருத்து ஒரு நாள் உங்களுக்குப் புரியும் ...........!

அடுத்த மாதமும் ராகுவுடன் பயணிப்போம் !

[செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.]



2 comments :

  1. Kenthirathipathya dhosathathai kedupar endral enna artham... dhosam athigamaguma.. illai kuraiuma....

    ReplyDelete
  2. தங்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆராய்ச்சி ... பிரமிக்க வைக்கிறது ஐயா.

    ReplyDelete