இராகு கேதுக்களைப் பற்றிய சில முக்கியமான சூட்சும நிலைகளை சென்ற மாதம் பார்த்தோம். அதன் தொடர்நிலையை இப்போது பார்க்கலாம்...
ஒரு பாவத்தில் இராகு கேதுக்கள் எப்போது அமர்கின்றனவோ, அது முதல் அந்த பாவ ஆதிபத்தியம், மற்றும் பாவாதிபதியின் தன்மைகள், அதன் காரகத்துவங்களை சாயாக்கிரகங்கள் ஆளுமை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக சில நிலைகளில் இராகு இருக்கும் பாவத்தின் அதிபதி தனது ஆதிபத்திய பலனையும், காரகத்துவங்களையும் தரும் வலிமையை இழந்து விடுகிறார்.
அதே நேரத்தில் அந்த வீட்டில் அமர்ந்த இராகு தனது தசையில் அந்த பாவத்தின் ஆதிபத்தியப் பலனையும், அந்த வீட்டின் அதிபதி கிரகத்தின் காரகத்துவப் பலனையும் செய்வார்.
மேலும் இராகு கேதுக்கள் அமர்ந்த இராசிநாதனின் தசை ஜாதகருக்கு வாழ்நாளில் வர இயலாத நிலை இருந்தால் முழுக்க முழுக்க அந்த பாவத்தில் அமர்ந்த நிழல் கிரகங்கள்தான்
அந்த பொறுப்பை எடுத்துச் செய்கின்றன.
அதே போலத்தான் இராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலையும்....! ராகுவுடன் இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் இராகுதான் தனது தசையில் எடுத்துச் செய்வார்.
இன்னொரு நிலையாக இராகு அமர்ந்த பாவாதிபதி தனது தசையில் பலன்களை மாற்றி மாறுபட்டதாகத் தருவார். அதாவது ஜோதிடரின் கணிப்பில் இந்த தசை நன்றாக இருக்காது எனும்
நிலையில் அந்த தசை நற்பலன் தருவதும், நன்மைகள் செய்யும் என்ற கணிப்பில் கெடுதல்களைச் செய்து குழம்பச் செய்வதும் இராகு கேதுவின் வேலைதான்.
ஒரு கிரகத்தின் தசை எவ்வாறு பலன் தரும் என்று கணிக்கும் முன்பு அந்த கிரகத்தின் வீடுகளில் இராகு கேதுக்கள் அமர்ந்து அந்த பாவம் கெட்டுப் போயிருக்கிறதா என்பதைக்
கவனித்த பின்னரே பிறகு அந்த தசையைப் பற்றிய பலன்களைச் சொல்ல வேண்டும்.
ஆனால் ஆறாமிடமான விருச்சிகத்தில் இராகுவும் சனியும் இணைவு பெற்றிருந்து, செவ்வாய் வேறு எங்கிருந்து தசை நடத்தினாலும் ஆறாமிட கொடிய பலன்கள் நடக்காது.
ஏனெனில், ஆறாமிட கெட்ட பலன்களை இராகு ஆளுமை செய்கிறார். மேலும் ஆறாமிடத்தில் இரண்டு பாவக்கிரகங்கள் இருந்து அந்த இடத்தைக் கெடுக்கிறார்கள். எனவே செவ்வாய் தசை
நன்மை செய்யும்.
புரியவில்லையா? நிதானமாக ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பவும்
படியுங்கள். புரியும்...!
அதே நேரத்தில் அடுத்து வரும் இராகு தசையில் முழுமையான கெடுபலன்கள் நடக்கும். ஜாதகரை இராகுதசை பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும்
இல்லை.
ஏனென்றால், இராகு செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்தில் அவர் உச்சபலம் பெறுவார். ( பாபக்கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமானால் ஸ்தான பலம் மற்றும்
நேர்வலு அடையக் கூடாது. எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிப்படி சூட்சுமவலு தான் பெற வேண்டும்.) அஷ்டமாதிபதி சனியின் இணைவு வேறு. அதாவது ஆறாமிட
செவ்வாயின் பலனை இராகு முழுமையாகத் தன் தசையில் செய்வார்.
இன்னும் ஒரு சூட்சும நிலையாக ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கும் இராகு கேதுக்கள் அது மூன்று பதினோராமிடங்களாக இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவது இல்லை.
அது ஏனெனில், இப்போது நீங்கள் உங்களின் சொந்த வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில் இன்னொருவர் உங்கள் வீட்டை ஆக்கிரமிக்க வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்..?
எதிர்த் தாக்குதல் நடத்துவீர்கள்... இல்லையா...?
எதிரியும் வலுவானவராக இருந்தால் என்ன நடக்கும்...? சண்டையில் இருவருமே களைத்துப் போய் உங்களைச் ஜெயிக்க முடியாமல் அவரும், அவரைத் துரத்த முடியாமல் நீங்களும் அதே
வீட்டில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு குடியிருப்பீர்கள்.
அதுபோலத்தான்...
ஆனால் ஒரு நீசக்கிரகம் இராகுவுடன் இணையும் போது, ஏற்கனவே அந்தக் கிரகம் பலவீனம் பெற்றிருக்கும் நிலையில் முற்றிலுமாக இராகுவிடம் சரணடைந்து விடுவதால் அந்தக்
கிரகத்தின் காரகத்துவங்களையும் ஆதிபத்தியங்களையும் முற்றிலுமாகக் கவர்ந்து, எதிர்க்க யாரும் இல்லாத நிலையில், தான் இருக்கும் பாவத்தின் தன்மைகளைப் பொறுத்து
இராகு பலன்களைச் செய்கிறார்.
அடுத்த மாதமும் தொடருவோம்.....
[மே 2012 இதழில் வெளிவந்தது.]
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பதிவு.எளிமையாக புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளீர்கள்,நன்றி அய்யா.
ReplyDeleteஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பதிவு.எளிமையாக புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளீர்கள்,நன்றி அய்யா.
ReplyDelete