Wednesday, July 17, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-1

நவக்கிரகங்களை ஜோதிட சாஸ்திரம் மூன்று வகையாகப் பிரிக்கிறது.
     ஒளிக் கிரகங்கள்
     பஞ்சபூதக் கிரகங்கள்
     சாயா(நிழல்) கிரகங்கள்

சூரியனும் சந்திரனும் ஒளிக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணமும் உங்களுக்குத் தெரியும்.

நமக்கு கிடைக்கும் இந்த ஒளியின் மூல நாயகனான சூரியன் பகலிலும், இரவில் சூரியனால் சந்திரனும் ஒளிர்கின்றன என்பதனாலேயே அவை ஒளிக்கிரகங்கள் ஆயின.

குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியவை பஞ்சபூதங்களின் குறியீடுகளுக்கு ஒப்புமை ஆக்கப்பட்டதால் அவை பஞ்சபூதக் கிரகங்கள் ஆயின.

மூன்றாவதான இராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான்.

அதாவது இராகு கேதுக்கள் என்பவை வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. அதோடு இராகு கேதுக்கள் நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும் நிதர்சனமாக அவைகள் இருட்டுகள் என்றுதான் நான் சொல்வேன்.

உண்மையில் இராகு கேதுக்கள் என்பவை பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள்தான். அதாவது பூமி, சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே போன்ற பாதையின் விரிவு படுத்தப்பட்ட நிலையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகள்தான் ராகு கேதுக்கள் என அழைக்கப் படுகின்றன.

இந்த இரண்டு புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டால் இணைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இரண்டும் ஒரே கிரகம்தான் என்று கூட நாம் சொல்ல முடியும்.

இராகு கேதுக்களை மிக நுட்பமாகவே பிரித்தறிய வேண்டும். சந்திரனின் ஏறு பாதையில் உள்ள இராகுவிற்கென்று சில தனிப்பட்ட குணங்களும், இறங்கு பாதையில் உள்ள கேதுவிற்கென்று சில குணங்களும் உள்ளன.

நம் ஜோதிடத்தின் நாயகனான சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்களையும் முற்றிலும் வலிமை இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை இந்த இரண்டு இருள் கிரகங்கள் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் ஒரு கிரகத்தின் உண்மையான குணத்தையே நேர் எதிராக மாற்றிப் பாதிக்கும் வல்லமை இராகுவிற்கு மட்டுமே உண்டு.

என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வில் நான் அறிந்தவைகளில் ஒன்று கோட்சாரத்தில் ஏழரைச்சனியைப் போலவே மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் இராகுவிற்கும் உண்டு என்பதுதான்.

அதாவது சனி என்பதும் இராகுவைப் போலவே இருள் கிரகம்தான். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக்கிரகம். அதாவது சனி திடப் பொருள்களான மண், பாறைகள் போன்றவைகளால் அமைந்த கிரகம் அல்ல. பஞ்சபூதக் கிரகங்களில் அவர் முற்றிலும் வாயுவினால் மட்டுமேயான எடையற்ற கிரகம் ஆவார்.

அதாவது சனியின் எடை நீரின் அடர்த்தியை விடக் குறைவு. சனியை நீங்கள் அதை விடப் பெரிய கடலில் தள்ளுவீர்களே ஆனால் அது அந்தக் கடலில் மிதக்கும். சூரியனிடமிருந்து அவர் வெகு தூரத்தில் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் சூரிய ஒளியும் குறைவு, அதனால் அவரின் பிரதிபலிப்புத் திறனும் குறைவு எனும் நிலையில் அவர் இருள் கிரகம் ஆகிறார்.

இருளாகிய சனி கோட்சாரத்தில் தான் இருக்கும் இராசியையும், அதன் முன்பின் இராசியையும் ஏழரைச்சனியாகி பாதிப்பது போல கோட்சாரத்தில் ஒரு இராசியில் தங்கி இருக்கும் இராகுவும் தன் முன்பின் ராசிகளைப் பாதிக்கவே செய்கின்றார்.

ஆனால் இராகுவின் கடுமை சனியைப்போல் இல்லாமல் சற்றுக் குறைவு. அதற்கு அவர் பருப்பொருள் அற்ற வெறும் நிழல் கிரகம் என்பதும் ஒரு காரணம்.

எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைபொருளாகச் சொல்லும் நமது கிரந்தங்களில் ஞானிகள் 3,11 மிடங்களில் இருக்கும் இராகு கேதுக்கள் நன்மையைச் செய்வார்கள் என்று சொல்வதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், மேற்சொன்ன இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்கும் நிலையில் இந்த பாவங்களின் நேர் எதிர் பாவமான இலக்கினத்தின் அதிர்ஷ்ட வீடுகள் ஐந்து மற்றும் ஒன்பதில் இதன் மறுமுனைக்கிரகம் இருந்து நல்ல பலன்களை மற்றொரு முனையான 3,11 மிடங்களுக்கு தரும் என்பதுதான்.

அதாவது மூன்றாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்தின் அதிர்ஷ்ட பாவமான ஒன்பதில் கேது இருந்து ராகுவின் மூலமாக நல்ல பலன்களை எடுத்துத் தரும். பதினொன்றில் ராகு இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் கேது இருந்து அந்த பாவ நன்மைகளைச் செய்யும்.

இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கிறேன்...

எப்பொழுதுமே இராகுவிற்கு பலன் கூறும் போது கேது இருக்கும் இடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும், கேதுவிற்கு பலன் சொல்லும் போது இராகு இருக்குமிடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும் பலன் சொல்லுங்கள். மிகச் சரியாக வரும்.

மற்ற ஏழு கிரகங்களும் அவை இருக்கும் நட்சத்திர நாதனின் அடிப்படையிலேயே தனது தசையில் முதன்மைப் பலன்களைச் செய்யும் நிலையில் இராகு கேதுக்கள் சார அடிப்படையில் முதன்மைப் பலன்களை செய்வது இல்லை. 

இது எனது நீண்ட ஆய்வில் கிடைத்த தீர்க்கமான முடிவாகும். இதனை நீங்கள் நன்கு அறிந்த ஜாதகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்  உங்களுக்கும் இந்த உண்மை புரியும்.

இராகு கேதுக்கள் முதலில்...

தன்னுடன் இணைந்த கிரகம், பிறகு
தான் இருக்கும் வீட்டின் அதிபதி, அடுத்து
தன்னைப் பார்த்த கிரகம், பின்னர்
தான் பெற்ற சாரநாதன்,
இறுதியாக
தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை
அல்லது
தான் சாரமளித்த கிரகங்களின் தன்மை

என்ற வரிசைப்படியே தனது தசையில் பலன்களைச் செய்கின்றன.

மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம் எனும் நிலையில் இராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

இன்னொரு வினோத விளைவாக திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியப் பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதத்தில் பெரும்பாலானோரை திருக்கணிதத்தின் பக்கம் சாய வைத்ததும் இந்த இராகு கேதுக்கள் தான்.

எப்படி எனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமைந்திருக்கும் டிகிரி அளவில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதைச் சரி பார்க்க, சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே நின்று பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக அளவெடுக்க முடியும்.

ஆனால் சூரிய சந்திரர்களை மறைக்கும் இராகு கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பது உண்மை.

இதன் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்க கணிப்புகள் சிறிது பிசகுவதால் சமீபத்திய வருடங்களில் திருக்கணித கிரகண நேரத்தையே வாக்கியப் பஞ்சாங்கங்கள் எடுத்து வெளியிடுகின்றன.

செவ்வாய், சனி ஆகிய இரு பாவக் கிரகங்களின் தொடர்பையோ இணைவையோ, பார்வையையோ பெற்ற இராகு கேதுக்கள் மிகக் கடுமையான பலன்களைச் செய்யும். 

ஆனால் இவ்விரு கிரகங்கள் நீசம் பெறும் நிலையில் மேஷ கடகத்தில் அவர்களுடன் இணைந்து இருக்கும் இராகு கெடுபலன்களைக் குறைத்துத்தான் செய்கிறார்.

மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாவக் கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாவ கிரகங்களின் இணைவைப் பெற்ற இராகு கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.

இந்த அமைப்பில் இருக்கும் இராகு கேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் இலக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும் .

இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி கெட்டு அல்லது முற்றிலும் வலுவிழந்த நிலையில் இருந்து இராகு கேதுக்கள் இலக்கினாதிபதியோடு சம்பந்தப்படாமலேயே இலக்கினத்தில் இருக்கும் நிலையில் நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நாசமாக்கும்.

இலக்கினாதிபதி பாவ கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலும் இலக்கினத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் இராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை இராகு பகவான் மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.

மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாவ கிரகமாக இருந்தாலோ இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.

இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்.....

[ஏப்ரல் 2012  இதழில் வெளிவந்தது.]

1 comment :

  1. Simarasi simaluk 10ilragu d/o/b29/4/1966 eppti erkum pl ans

    ReplyDelete