Wednesday, July 17, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-3

ராகு கேதுக்களின் நுண்ணிய செயல்பாடுகள் மற்றும் சூட்சுமங்களை இந்த மாதமும் தொடர்ந்து பார்க்கலாம் ............

நவக்கிரகங்களில் ராகுபகவான் மட்டுமே ஜோதிடர்களின் தலையைச் சுற்ற வைத்து திணற வைக்கும் கிரகம் ஆவார்.

ஏனெனில் ராகு இருக்கும் சில நிலைகளில் அவரது தசை நன்மையைச் செய்யுமா அல்லது தீமை தருமா என்று கணிப்பது ஜோதிடர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.

அதிலும் ராகுவோ, கேதுவோ சுயச்சாரத்தில் இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம். பலன் சொல்லுவது குதிரைக் கொம்புதான்.........


மற்றுமொரு அமைப்பாக குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகு தசை நடப்பில் இருந்தால் அக்குடும்பத்தில் பிரிவு, துயரம், மரணம், தரித்திரம் போன்ற பலன்கள் நடக்கும்.

ஏனெனில் ராகு என்பது ஒரு இருட்டு. குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு ராகு தசை நடக்கிறது என்றால் குடும்பமே இருட்டில் இருக்கிறது என்றுதான் பொருள்.

இது போன்ற ஒட்டுமொத்த சூழ்நிலையில் ஜாதகத்தில் ராகு ஆமேடம் எருது சுறா எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் சரி, 3, 11 மிடங்களாக இருந்தாலும் சரி... கெட்ட பலன்கள்தான் நடக்கும்.

நம்முடைய மூல நூல்களில் ராகு நன்மை செய்வார் என்று கூறப்பட்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒரு ஜாதகத்தில் இருந்து ராகு தசையில் ஜாதகர் கஷ்டப்படுகிறார் என்றால் உடனடியாக அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை வாங்கிப் பாருங்கள். நிச்சயம் அவர்களில் வேறு எவருக்காவது ராகுதசை நடப்பில் இருக்கும்...

என்னுடைய அனுபவத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ராகுதசை அல்லது புக்தி நடப்பில் இருந்த போது குடும்பமே வறுமை மற்றும் வேறு வகையான பிரச்னைகளில் சிக்கி சிதறுண்டு போன நிலைகளை பார்த்திருக்கிறேன்.

இந்தக் காரணத்தினால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.

அடுத்து இன்னொரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்....


நமது கிரந்தங்களில் சொல்லப்படும் காரகன் காரக பாவத்தில் இருக்கும் “காரஹோ பாவ நாஸ்தி” எனும் நிலையை எடுத்துச் செயல்படுத்துவது பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.

உதாரணமாக, செவ்வாய் சகோதரகாரகன். அவர் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் வலுவுடன், சுபர் பார்வையின்றி இருந்து தசை நடத்தினால் நிச்சயம் சகோதரபிரிவு, சகோதர விரயம், உடன்பிறப்பால் தொல்லை போன்ற பலன்களைச் செய்வார்.

இதில் செவ்வாய் தசை ஏழுவருடம் என்ற நிலையில் மிகக் கடுமையான சகோதர பலனை ஏழு வருடங்களில் எப்போது செய்வார் என்று கணிப்பது மிகவும் கடினம்.

இந்த நிலையில் ராகுவோ கேதுவோ செவ்வாயின் வீடுகளில் இருந்தாலோ, அல்லது செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செவ்வாயின் சம்பந்தத்தைப் பெற்றிருந்தாலோ அவர்களின் புக்திகளில் சகோதர விரயம் போன்ற கடுமையான பலன்கள் இருக்கும்.

அதிலும் ராகுவுக்கோ கேதுவுக்கோ ஆறு எட்டாமிட சம்பந்தம் இருந்தால் அவர்களது புக்திகளில் சகோதரனை மாரகம் செய்து “காரஹோ பாவ நாஸ்தி” யை செயல்படுத்துவார்கள்.

மேலும் குழந்தைப் பருவத்தில் வரும் ராகு தசை சிறுவயது சுக்கிர தசையைப் போலவே நன்மைகளைத் தராது.

“குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்” “குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்” என்பது போன்ற சிறுவயது சுக்கிர தசையைப் பற்றிய பழமொழிகளை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் .

அது ஏனெனில்...

சுக்கிரன் காமத்திற்கு காரணமான கிரகம். சிறு வயதில் உடல் ரீதியாக காமத்திற்கு தயாராகாத நிலையில் வரும் சுக்கிர தசையில் ஜாதகர் இனம் புரியாத பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு மனரீதியாக அலைக்கழிக்கப் படுவார்.

காமத்திற்கு உடலும் தயாராகாமல் மனமுதிர்ச்சியும் இல்லாத இளம் பருவத்தில் வரும் சுக்கிரதசை ஜாதகரை காமத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கத் தூண்டும் மற்றும் வேறுவழியில் இட்டுச் செல்லும் என்பதால்தான் நமது கிரந்தங்கள் சுக்கிரதசை நடுத்தர வயதில் அதாவது காமத்திற்கு அடிமையாகாத 32 வயதிற்கு மேல் வரவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.

அதுபோலவே ராகு என்பவன் ஒருநிலையில் ஞானகாரகனாகவும் இன்னொரு நிலையில் சாதுரியமாக ஏமாற்றும் கிரகமாகவும் செயல்படுவார். அதாவது தான் ஏமாறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும் திறமையை ராகு அளிப்பார்.

மேலே கண்ட ஞான, மற்றும் ஏமாற்றும் இரண்டு நிலைகளையுமே சிறு வயதில் செய்ய முடியாது என்பதும் ராகுதசை சிறு வயதில் பலனளிக்காது என்பதற்கு ஒரு காரணம்.

சிறு வயதில் நமக்கு பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளும் இக்காலத்தில் இல்லை என்பதால்தான் அதற்கான முரண்பாடான ஞானகாரக ராகு தசை நடக்கும் போது கல்வியில் தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள் நடக்கின்றன.

அடுத்து இன்னொரு நிலையாக இளம் பருவத்தில் காமத்தை அறிமுகப் படுத்துவதும், காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு கேதுக்கள் தான்.

அதிலும் பருவ வயதுப் பெண்களுக்கு ராகுதசையோ புக்தியோ நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் எட்டில் இருக்கும் ராகுதசை புக்தி அல்லது அஷ்டமாதிபதி தொடர்பை பெற்ற ராகு கேதுக்களின் தசை புக்திகளில் கண்டிப்பாக ஒரு இளம்பெண் காதல் என்ற பெயரில் ஏமாறுவார்.

தனக்கு முற்றிலும் பொருத்தமில்லாத, தன்னை விட அனைத்து தகுதிகளிலும் குறைந்த நேர்மாறன ஒருவரை ஒரு இளம் பெண் தேர்ந்தெடுத்து அவரிடம் தன் மனம், உடல் இரண்டையும் ஒப்படைப்பதும், அவருடன் ஓடிப் போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த ராகு கேதுக்களின் திருவிளையாடல் தான்....

நன்கு படித்த தகுதி வாய்ந்த ஒரு பெண் ஒரு குறைந்த படிப்பு மட்டுமே படித்த மெக்கானிக்கையோ, ஆட்டோ டிரைவரையோ அல்லது ஒன்றுமே செய்யாமல் ஊர் சுற்றித் திரிபவரையோ காதலிக்கிறாரா..? அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். அதில் எட்டாமிடத்தின் சம்பந்தமோ அல்லது அஷ்டமாதிபதியின் சம்பந்தமோ பெற்ற ராகு கேதுக்கள் இருப்பார்கள்.

இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்......

[ஜூன் 2012  இதழில்  வெளிவந்தது.]


7 comments :

  1. RAgu 7 il Atchi petra guruvudan irunthal enna agum...

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்,முகநூலில் என்னை
    கவர்ந்த ஜோதிட ஆசான்.முகநூலில் ஜோதிடம் தவிர வேறு எந்த விவாதமும்
    தேவையில்லாம் செய்யாத அற்புத மனிதர்.தங்களது பதிவு எனக்கு வழிகாட்டி.நன்றி

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்,முகநூலில் என்னை
    கவர்ந்த ஜோதிட ஆசான்.முகநூலில் ஜோதிடம் தவிர வேறு எந்த விவாதமும்
    தேவையில்லாம் செய்யாத அற்புத மனிதர்.தங்களது பதிவு எனக்கு வழிகாட்டி.நன்றி

    ReplyDelete
  4. Sonnathellam Unmai. You are great Sir.

    ReplyDelete
  5. ஐயா ,
    தங்களின் அனைத்து கட்டுரைகளையும் படித்து அனைத்தையும் புத்தியில் ஏற்றிக்கொண்டேன்.
    என்னை தங்களின் மாணவராக ஏற்றுக்கொள்வீர்களா?
    அன்புடன் தங்களின் மாணவன்,
    மு.சுரேஷ்ராஜா.

    ReplyDelete