Sunday, July 21, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-11

நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களைப் பற்றிய இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து என்னிடம் கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரையும், உடும லைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் நான் பாராட்டுகிறேன்.

அதாவது பெரும்பாலான நமது கிரந்தங்கள் ராகுவிற்கு 3, 6, 11 மிடங்கள் நல்ல இடங்கள், இந்த ஸ்தானங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்று சொல்லும் நிலையில் இந்த தொடரில் நான் 3, 11 மிடங்களில் மட்டுமே ராகு நன்மைகளைச் செய்வார் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

அது ஏனெனில் நமது மூலநூல்கள் யாவும் பெரும்பாலான நுணுக்கங்களை பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தியும் சொல்லும் தன்மை கொண்டவை. இதைப் பற்றி நான் ஏற்கனவே “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் நமது ஞானிகள் ஒன்றும் கணக்கு வாத்தியார்கள் அல்ல....... உங்களின் காதுகளைப் பிடித்துத் திருகி ஜோதிட ரகசியங்களை கற்றுத் தருவதற்கு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

ஜோதிடக்கலை என்பது அனுபவத்தில் படிப்படியாக உணர்ந்து முன்னேற வேண்டிய ஒரு கலை. நெஞ்சில் குத்தி குத்தி மனப்பாடம் செய்யும் பள்ளிக்கூட கலை அல்ல. இங்கு அடிப்படை விஷயங்கள்தான் தெளிவாக்கப்படும். அதன் மேல் நீங்கள்தான் உங்களின் அனுபவத்தைக் கொண்டு கட்டிடம் எழுப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் நீடித்தும் இருக்கும்.

எப்படி LKG மாணவனுக்கு MA பாடத்தை நடத்த முடியாதோ அது போல ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு சூட்சுமங்களை சொன்னாலும் புரியாது என்பதால் பல விஷயங்கள் இங்கே நீங்கள் படிப்படியாக ஒவ்வொரு நிலையாகக் கடக்கும் போது மட்டுமே புரியும்படியாக ஞானிகளால் சொல்லப்பட்டன. அதன்படியே அமைக்கப்பட்டன.

அதன்படி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்கள் ஜாதகத்திற்கு எந்த பாவமாக இருந்தாலும் அதில் இருக்கும் ராகு மிக மோசமான கெடுதல்களை செய்ய மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களேயானால்,

இந்த ஐந்து இடங்களைத் தவிர மற்ற இடங்கள் ஜாதகருக்கு ஆறாம் இடமானால் அதில் இருக்கும் ராகு ஜாதகருக்கு கெடுதல்களைச் செய்வார் என்பதையும் உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.

உத்தரகாலாம்ருதத்தில் 3, 6, 11 மிடங்களை ராகுவிற்கு நன்மை தரும் இடங்களாகக் கூறும் மகாபுருஷர் காளிதாசரே இன்னொரு சுலோகத்தில் 6, 8, 12ல் இருக்கும் ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு முதலில் நன்மையைச் செய்து பிறகு அவனுக்கு மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தை தருவார்கள் என்று சொல்லுகிறார்.

ஆறாமிடம் என்பது வழக்கு, வம்பு, விபத்து, நோய், கடன், எதிரி இவைகளுக்கான ஸ்தானம் என்பதால்தான், இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடைய பாவக்கிரகமான ராகு அங்கே அமரும் போது மேற்படி ஆறாம் பாவத்தின் கெட்ட ஆதிபத்தியங்களை கெடுத்து நல்ல பலன்களைத் தருவார் என்பதன் அடிப்படையில் ராகுவிற்கு ஆறாம் பாவம் நன்மைகளைத் தரக்கூடிய இடம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் ஒரு சுபகிரகம் தான் இருக்கும் பாவத்தை வலுவாக்கும் என்பதன் அடிப்படையில் சில நிலைகளில் ராகு சுபர்களின் பார்வை தொடர்பு இவைகளைப் பெற்று முழு சுபத்தன்மை அடையும் நிலையில் ஆறாம் பாவத்தில் அமர்ந்தால் அந்த பாவத்தை வலிமை பெறச் செய்து வம்பு வழக்கு விபத்து கடன் நோய் போன்ற கெடுபலன்களைச் செய்வார்.

மிதுனம் துலாம் தனுசு மீனம் போன்ற சுபராசிகள் ஆறாம் இடமாகி, இந்த பாவங்களின் அதிபதிகளான குரு சுக்கிரன் புதன் ஆகியோர் உச்சம் போன்ற வலிமை பெற்று அந்த பாவம் வலுப்பெற்ற நிலையில் அங்கே ராகு அமர்ந்து சுபர்களின் தொடர்பையும் பெற்றிருந்தால் ராகுதசை நல்ல பலன்களைச் செய்வது கடினம்.

பெரும்பாலும் ஆறாமிடத்தில் இருக்கும் ராகு தனது தசை புக்திகளில் தன்னுடன் இணைந்திருப்பவரின் நெருக்கத்தையும் இணைந்திருக்கும் தூரத்தையும் பொறுத்து உடன் இருப்பவரின் காரகத்துவத்தையும் அழிப்பார்.

உதாரணமாக மிதுனம் ஆறாமிடமாகி புதன் சுபத்துவம் பெற்று ராகு சுக்கிரனுடன் இணையும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார். இதே போன்ற நிலையில் ஆறாமிடம் சுபரின் வீடாகி வலுப் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இருந்தால் சகோதரனையும், சனியுடன் இருந்தால் ஜாதகரின் ஆயுளையும் பாதிப்பார்.

அதே நேரத்தில் இன்னொரு நிலையாக இத்தகைய சுபர் வீடுகளில் தனித்து இருக்கும் ராகுவும் தான் இருக்கும் வீட்டில் அதிபதியான அந்த சுபக்கிரகம் வலிமை பெறும் நிலையில் ஆறாம் வீட்டின் கெடுபலன்களைத்தான் செய்வார். நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. (சொல்வது புரியவில்லையா? திரும்பத் திரும்ப படியுங்கள். புரியும்.)

ராகு என்பவர் ஏமாற்றும் தன்மை கொண்ட, எந்த வழியிலாவது ஏராளமான வருமானத்தை தரும் ஒரு இயற்கை பாவக்கிரகம். அவர் கெட்ட நிலைகளில் இருந்தால்தான் நல்ல பலன்கள் இருக்கும். முற்றிலும் சுபத்தன்மை அடைந்தால் தன் இயல்புக்கு மாறான தன்மைகளை அளிக்க முடியாமல் ராஜபக்சே முன் பிரபாகரன் இப்போது தோன்றினால் எப்படி குழம்பிப் போவாரோ அதுபோல குழம்பி அந்த பாவத்தின் தன்மைகளை மட்டும் செய்ய ஆரம்பித்து விடுவார்.

அதேபோல தன் காரகத்துவங்களை (முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தல், சுலபமான முறைகளில் வருமானம் பெறுதல், சாதுர்யமாக ஏமாற்றுதல் ) அவர் முழுமையாக எவர் தயவும் இன்றி, யாருடைய தலையீடும் இல்லாமல் ஜாதகருக்கு தர வேண்டுமெனில் அவர் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும்.

மேற்படி பாவங்களில் தனித்தோ அல்லது வேறு எவருடன் சேர்ந்தோ இருக்கும் ராகு மட்டுமே சுயமாக எவருடைய கட்டுப்பாடும் இன்றி தன் விருப்பப்படி இயங்க கூடிய அதிகாரம் படைத்தவர்.

அதே நேரத்தில் 3, 11 மிடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் அத்தனை சிறப்பாக சொல்லப் படுவதன் சூட்சுமத்தை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு விளக்கியது நினைவிருக்கும்.

அதாவது மேற்படி இரண்டு பாவங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருக்கும் நிலையில், அதன் இன்னொரு மறுமுனைக் கிரகம் அந்த லக்னத்தின் யோக திரிகோண பாவங்களான ஐந்து அல்லது ஒன்பதாமிடத்தில் இருந்து அந்த பாவத்தின் நன்மைகளை எடுத்துக் கொடுக்கும் என்பதால்தான் 3, 11 மிடங்கள் ராகு கேதுக்களுக்கு சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.

இந்த தொடரின் மூலம் ராகுவைப் பற்றிய பெரும்பாலான சந்தேகங்கள் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

ராகுவைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வெளியிடக் கூடிய ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்த நிலையில் உங்களுடைய ஏராளமான கேள்விகளும், தொலைபேசி பேச்சுக்களுமே இத்தனை மாத தொடராக இதனை மாற்றியது.

இன்னும் காலசர்ப்ப தோஷம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் பெரும்பாலும் ராகுகேதுக்களின் நட்சத்திரங்களில் அவதரிப்பது ஏன்? என்பது போன்றவைகளும், கேதுவின் தனிப்பட்ட சிறப்பியல்புகளும் எழுதுவதற்கு இருக்கின்றன.

ஆயினும் என்னுடைய அதிகமான வேலைப்பளுவினால் இத்தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீதமுள்ள சூட்சுமங்களையும் என்றேனும் ஒருநாள் உங்களுக்குச் சொல்ல பரம்பொருள் என்னை அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.

வணக்கம்.


[பிப்ரவரி 2012 இதழில் வெளிவந்தது]





11 comments :

  1. sir u have given wounderful light raghu kethu for modern kaliyugas most people undr raghu in bad houses greatly with raghu dasa in foreign connection illegal income etc.....

    people read well score well in education hard sincere work can reaching with good heights in life they r ordinary citizens with managing both ends income expenditure in life huge inciome 2 to 3 lakhs salary pm all r unclaimed lottery which we cannot imagine in ordinary life indian life style maximum we may et around 20000/- pm karaghas of raghu saturn mars kethu give huge income bungalow car etc but no peace of mind in respect of their bhavas as they r basic malefics and show their qualities

    ReplyDelete
  2. Very nice sir all credits belongings to you thank you so much for this wonderful coverage of 'raghu and kethu'

    ReplyDelete
  3. Your instrospection about rahu and kethu are very fantastic. I am very happy about it . Please keep continuing your work for the other astrologers also .Good luck Sir. Vazhga Valamudan!

    ReplyDelete
  4. அருமையான பதிவு குருஜி ஐயா..
    அனுபவத்தில் நான் அதன் கெடுபலன்களை அறிந்துள்ளேன். கடக லக்கினத்திற்கு 6ம் இடமான தனுசுவில் ராகு(கேது சாரம் பெற்று ) அமர , 2ம் இடத்திலமர்ந்த சிம்ம குரு 5ம் பார்வையாக தன் 6ம் வீட்டை தானே பார்த்து வலுப்படுத்திய ஜாதகம் . பள்ளிக்காலம் முழுவதும் வீண் வம்புகள், படிப்பில் கவனமின்மை., ஆசான்களுடன் முரண்பாடு ,அவப்பெயர் , நோய்களையே அதிகம் சந்தித்துள்ளேன்.

    ReplyDelete
  5. அருஅருமை விலக்கியதர்க்கு மிக்க நன்றீ ஐயா

    ReplyDelete
  6. மகர லக்னத்திற்கு 6ம் இடத்தில் ராகு திருவாதிரையில் அமர்ந்து புதன் உம் வீட்டில் பவுர்ணமி மறுநாள் சந்திரன் சிம்மத்தில் இருந்து பார்த்து 12ம் இடத்தில் குருெல் கேது இருந்து பார்த்தால் ராகு சுயத்துவமாகி நன்மை செய்வாரா இல்லை கடன் நோய் எதிரிோறகெடுபலன் தருவார் பிறந்த தேதி 10.02.2020 காலை 5.35 வீடியோைவை விட கட்டுரைகளையே விரும்பி படிப்பேன். நான் எனது ஜாதகத்தை போன் அப்பாயின்மென்ட் மூலம் பார்த்திருக்கிறேன். இது எனது மகன். தயவுசெய்து பதில் தாருங்கள். நான் பிரிமியம் வீடியோ மெம்பர்

    ReplyDelete
  7. நன்றி குருஜி 🙏

    ReplyDelete