Thursday, October 29, 2020

மிதுனம்: 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் – MITHUNAM: 2020 GURUPEYARCHI PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார்.

அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுப கிரகங்கள் ஒருபோதும் தருவதில்லை.

அதைவிட மேலாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசியிலேயே ராகு இருந்ததால், ராசி இருளடைந்து மிதுன ராசியினர் வயதுக்கேற்ற வகையில் மன அழுத்தத்தை அடைந்தீர்கள். குறிப்பாக உங்களில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கைத் துணை வழியில் நல்லவைகள் இல்லை.

தற்போதுதான் ராகு ராசியில் இருந்து விலகிய நிலையில் கடந்த சில மாதங்களாக உங்கள் ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து வருவதும், உங்களை பாடாய் படுத்துகிறது. இந்த இரண்டையும் நீக்கி நல்லவைகளை அருளும் ஒரு அமைப்பாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

குறிப்பாக எட்டில் அஷ்டமச் சனியாக இருந்து உங்களுக்கு கடுமையான  தொல்லைகளைக்  கொடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் குரு இணைந்து அவரை சுபத்துவமாக்கி, சனி தரும் கஷ்டங்களில் இருந்து அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவார் என்பதுதான் இந்தக் குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு தரும் ஒரு செய்தியாக இருக்கும். ஆகவே இந்த பெயர்ச்சியின் மூலம் சனி தரும் கடுமைகள் உங்களுக்கு  நிச்சயமாகக் குறையும்.

குரு எட்டில் மாறினாலும், முதலில் நீச்ச நிலையை பெற்று ஏற்கனவே அங்கே இருக்கும் ஆட்சி பெற்ற சனியால் நீச்ச பங்க நிலையை அடைவதால் எட்டாம் இடத்தின் நல்ல பலன்களான, தூரத்தில் இருப்பதால் லாபம், வெளிநாடு, வெளிமாநில மேன்மை, திடீர் அதிர்ஷ்டம், அதிக முயற்சி இல்லாமலேயே பணம் கிடைத்தல் போன்ற நல்ல பலன்களை இனி மிதுனத்தினர் அடைவீர்கள்.

எந்த ஒரு ராசிக்கும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்துதான் வர வேண்டும் என்பதன் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக சனி, ராகுவால் நல்ல விதமான கோட்சார நிலைகள் அமையாத மிதுனத்தினருக்கு இனிமேல் இது போன்ற துயரங்கள் வரப்போவதில்லை.

குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாத இளைஞர்கள் இனிமேல் நிலை கொள்ள ஆரம்பிப்பீர்கள்.  கடந்த கால சோதனைகள் மீண்டும் வரவே வராது. எனவே எட்டில் இருக்கும் குரு கண்டிப்பாக உங்களுக்கு தொல்லைகளை தரப் போவதில்லை.

எட்டாம் இடம் என்பது மாறுதல்களை குறிக்கக்கூடிய ஒரு இடம் என்பதால் இதுவரை சாதகமற்ற நிலைகளில் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல விதமான மாற்றத்தை குரு கொடுத்தருள்வார். எந்த வகையில் பார்த்தாலும் இது மிதுன  ராசிக்கு மாற்றங்களை மட்டும் கொடுத்து அதன்மூலம் முன்னேற்றங்களை தருகின்ற ஒரு சிறப்பு குருப்பெயர்ச்சியாக இருக்குமே தவிர ஒருபோதும் உங்களுக்கு கெடுதல்களை தரப் போவதில்லை.

குறிப்பாக சொல்லப் போவோமேயானால் இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் குருவின் தயவால் செயல்படப் போகும் காலம் இது. இதுவரை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த விஷயங்கள் இனி அதிக முயற்சி இன்றி அதிர்ஷ்டத்தின் துணையுடன் முழுமையாக வெற்றி அடையும். நல்ல விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.

மிதுனத்தினருக்கு  எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு  நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

குருவின் பார்வை பலம்தான் ஜோதிடத்தில் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வளப்படுத்துபவர் குரு என்பதால் இம்முறை அவர் பார்க்கக்கூடிய 12, 2, 4 ஆகிய மூன்று பாவகங்களின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும்.

12-ஆமிடம் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு தூர இடங்களில் வேலைக்கு செல்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதற்கான முயற்சிகளில் இருந்தவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவருக்கு  நல்ல பலன்கள் உண்டு.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கும் சரியான வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க போகிறது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி இனி உங்களை புரிந்து கொண்டு சாதகமான வகையில் நடந்து கொள்வார் அல்லது அந்த அதிகாரி மாறுதல் ஆவார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இதுவரை பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருந்தவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்கள், நிரந்தர வேலை இல்லாதவர்கள், மனதிற்கு பிடிக்காத தொழில் அமைப்புகளில் இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் மாற்றம் உண்டாகி நல்ல பலன்களும், பணவரவும் உண்டாகும்.

குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை குரு நீச்ச பங்கமாகி பார்ப்பதால், இளைய பருவத்தினருக்கு இப்போது திருமணம் நடைபெறும். இதுவரை குடும்பம் அமையாமல் இருப்பவர்கள் குடும்பஸ்தனாக முடியும். எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களில் சிலர் அடையாளம் காண்பீர்கள்.

குருவின் இரண்டாம் வீட்டு பார்வையால் வாக்குப்பலிதம் உண்டாகும் என்பதால் ஒருவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த அமைப்பின் மூலம் பணவரவு  நிலையாகி சம்பளம் மூலமாகவோ, இதர வருமானம் மூலமாகவோ வருமானம் வந்து வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை சொன்ன தேதிக்கு கட்ட முடியும். எனவே இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது

குருவின் அதி உன்னத சுப பார்வை நான்காம் வீட்டில் படுவதால் இதுவரை வசதியற்ற வீட்டில் இருப்பவர்கள், வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது குத்தகைக்கு செல்லவோ முடியும். சிலர் இதுவரை காற்றோட்டமில்லாத மிகச் சிறிய வீட்டில் கூண்டுக்குள் அடைபட்டு இருந்தது போன்ற நிலை மாறி நல்ல விசாலமான காற்றோட்டமான வீட்டிற்கு மாறுவீர்கள்.

உங்களில் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் அமைகிறது. வங்கிக் கடன் பெற்று வீடு அமையும். வீடு வாங்குவது கனவாகவே இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக நல்ல வீடு அமையும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். வாகன மாற்றம் உண்டு. செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கி ரிப்பேர் செலவு இல்லாமல் இருப்பீர்கள்.

பெண்களுக்கு இது மிகவும் நல்ல காலகட்டமாகும். கடந்த சில மாதங்களாக  ராகு மற்றும் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இழப்புகளையும், துயரங்களையும் மன அழுத்தங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தந்து  மனதை மிகவும் சந்தோஷமுடன் வைத்திருக்கும்..

வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையை உணர்வீர்கள். தொந்தரவு செய்து கொண்டிருந்த சிலரின் கை தாழ்ந்து உங்களுடைய கை ஓங்கும். வீட்டிலும் பணியிடங்களிலும் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் வந்து ஒரு நிம்மதியான சூழலை பெண்கள் உணர்வீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.  

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும்.

மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இந்த குருபெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மைகளை தவிர தீமைகளைத் தராது.

பரிகாரங்கள்:

அஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment